கத்தோலிக்கப் பாரம்பரிய வியாக்கியானம். 2.

பரலோக மந்திரம்:

இது சேசுநாதர் சுவாமியே தம்முடைய சீஷர்களுக்கு படிப்பித்த மந்திரமாகும். இதில் சர்வேசுரனுக்கு தோத்திரமாக மூன்று மன்றாட்டுகளும், நமது தேவைகளுக்காக நான்கு மன்றாட்டுகளும், ஆக மொத்தம் ஏழு மன்றாட்டுகள் அடங்கியுள்ளன.

முதலாவது பகுதியில், 1-ம் மன்றாட்டாக சகல மனிதர்களும் சர்வேசுரனை அறிந்து ஸ்துதிக்கவும், 2-ம் மன்றாட்டாக சகல மனிதர்களும் அவரை சிநேகித்து இஷ்டப்பிரசாதத்தை அடையவும், 3-ம் மன்றாட்டாக சகலரும் உத்தமவிதமாய் அவரை சேவிக்கவும் வேண்டுமென்று கேட்கிறோம்.

இரண்டாவது பகுதியில், 1-ம் மன்றாட்டாக இப்பொழுது நடக்கிற இந்தக் காலத்திலே நமது ஆத்தும் சரீரத்திற்கு வேண்டிய சகல நன்மைகளையும், 2-ம் மன்றாட்டாக கடந்த காலத்திலே நாம் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்கு மன்னிப்பையும், 3-ம், 4-ம் மன்றாட்டுகளாக இனி வரும் காலத்தில் நம்மை சகல பாவத்தினின்றும், நமது ஈடேற்றத்திற்கு தடையாகிய சகல துன்பதுரித பொல்லாப்புக்களினின்றும், நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.

பரலோக மந்திரத்தின் வியாக்கியானம்:

பரலோகத்திலிருக்கிற:
சர்வேசுரன் எங்குமிருந்தாலும், தமது மகிமைப் பிரதாபத்தை மோட்சத்தில் விசேஷமாய் விளங்கப்பண்ணி, தேவதரிசனத்தையும், ஆனந்த சந்தோஷத்தையும், முத்திப்பேறு பெற்றவர்களுக்கு தந்தருளுகிறார்.

எங்கள் பிதாவே:
சர்வேசுரன் தமது சாயலாக நம்மை உண்டாக்கிக் காப்பாற்றி, நமது சகோதரராகிய சேசுநாதர்சுவாமியின் நிமித்தம் நம்மைத் தமக்கு சுவீகாரப்பிள்ளைகளாக்கி, நமக்குத் தம்முடைய மோட்ச இராச்சியத்தை கொடுக்கச் சித்தமாயிருக்கிறதினாலே, அவர் நமக்குத் தந்தையாய் இருக்கிறார்.

மோட்சம் நமது சொந்த தேசமானதால், இவ்வுலகத்தில் பரதேசிகளைப்போல் இருக்கிறோம். சகல மனிதர்களும் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயும், தங்களுக்குள்ளே சகோதரர்களாக இருக்கிறார்களென்றும், இவர்கள் ஒருவருக்கொருவருக்காக வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும், இந்த ஜெபத்தினால் அறிகிறோம்.

ஆகையால்தான் "என் பிதாவே" என்று சொல்லாமல், "எங்கள் பிதாவே" என்று சொல்லுகிறோம்.