அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-2

கீழ்படிதலின் இலக்கனம் அர்ச். சந்தியாகப்பர் : “ என்னைப்பின் செல்”

சேசு பிறந்த காலகட்டத்தில் புனித சலோமிக்கும், செபதேயுவுக்கும் மகனாக பிறந்தவர் அர்ச். சந்தியாகப்பர். சேசுவின் அன்புச்சீடர், நற்செய்தியாளர் அர்ச்.அருளப்பரின் மூத்த சகோதரர் அர்ச். சந்தியாகப்பர். அவர் கொஞ்சம் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் தந்தை செபதேயு சொந்தமாக படகும், வேலைக்கு ஆட்களும் வைத்திருந்தார். அர்ச்.சந்தியாகப்பர் பெற்றோர்கள் ஒரளவு படித்தவர்கள். கிரேக்கர்க்ளோடு பழகியவர்கள் என்று பார்க்கும்போது அவர்கள் ஓரளவு வசதியும், நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும்.

சரி இன்றைய வரலாற்று நிகழ்ச்சிக்கு. அர்ச். சந்தியாகப்பர், தன் சகோதனோடும், தந்தையோடும் வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது அங்கு வந்த சேசு சுவாமி...

அர்ச்.சந்தியாகப்பரையும் அர்ச்.அருளப்பரையும் நோக்கி “ என்னை பின் செல் “ என்றதும் தனது தந்தை செபதேயுவையும், வலைகளையும் விட்டு சேசுவை பின் சென்றார் தன் சகோதரர் அருளப்பரோடு..

எதைப்பற்றியும் இவர் யோசிக்கவில்லை.. அவர் எதிர் காலத்தை பற்றி கவலை படவில்லை அவரிடம்.. எத்தனையோ எதிர்கால கனவுகள்.. திட்டங்கள் இருந்திருக்கலாம்.. நன்றாக சம்பாதித்து இன்னுமொரு படகு வாங்கனும் என்று கூட திட்டம் இருந்திருக்கலாம்....

அத்தனையும் ஒரு நொடியில் உதறித்தள்ள எத்தனை துணிச்சல் இருக்கவேண்டும்..மனதில் எவ்வளவு உறுதி இருந்திருக்க வேண்டும்.. உள்ளத்தில் எவ்வளவு தெளிவு இருந்திருக்க வேண்டும்.. இந்த மூன்றும் இருந்தால்தான்

“ என்னைப் பின் செல் “ என்ற வார்த்தையை கேட்டதும் உடனே முடிவு எடுக்க முடிந்தது..

நான்காவதாக இன்னொரு திறமையும் அர்ச். சந்தியாகப்பரிடம் இருந்திருக்கிறது அதுதான் கண்டுகொள்ளுதல்... தன்னை அழைத்தது யார் என்று அழைத்த மாத்திரத்திலேயே கண்டு கொண்டார்.” அட கடவுளே நம்மை அழைக்கும்போது நம் சொந்த விருப்பங்களான பொக்கிஷங்கள் எந்த மூளைக்கு “ என்று தூக்கி எரிந்துவிட்டார். அருமையான  உடனடி முடிவு.

இதில் சிந்திக்கவேண்டிய விசயம் அவர் கடவுளை எப்படி கண்டு கொண்டார்..என்பதுதான் உடனே ஆண்டவர் சேசுவைத் தவிர மற்ற அனைத்தும் துச்சம் என்று அவ்வளவு சிறிய நேரத்திற்குள் இவர்களால் எப்படி முடிவு எடுக்க முடிந்த்து. ஒரு நொடியில் தன் வாழ்க்கையே அவருக்காக மாற்ற அர்ப்பணிக்க எப்படி அவரால், அவர்களால் முடிந்தது. இந்த துணிச்சலும் உறுதியும்தான் பின்னாளில் சேசுவுக்காக அப்போஸ்தலர்களில் முதல் வேதசாட்சியாக எந்த மறுப்புமில்லாமல் மனமகிழ்ச்சியோடு மரிக்க காரணமாக இருந்தது.

ஜெபம் : அர்ச். சந்தியாகப்பரே ! “என்னைப் பின் செல்” என்ற சேசு சுவாமியின் ஒரு சொல்லுக்கு மந்திரத்துக்கு கட்டுப்படுவதுபோல் கட்டுப்பட்டு அவர் பின்னால் தந்தை, வலைகளை விட்டு சேசுவை பின் சென்றீரே !

எங்களையும் பிண்ணிக்கொண்டிருக்கும் எத்தனையோ மாய வலைகளான பணம், போதை, மோகம், இன்னும் எத்தனையோ பாவ வலைகளை விட்டு ஒரே வினாடியில் எழுந்திருக்க வரம் தாரும்.

ஆன்ம எதிரிகளை முறியடிப்பதில் வல்லவரான படை மிரட்டியாரான அர்ச்.சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு...