செபமாலையின் வரலாறு (தொடர்ச்சி)

பத்து பத்தாகக் குறிப்பதற்கு உடல் ஜெபத்தை முன் காலத்தில் உபயோகித்தனர் என்று சொல்லப்பட்டது . வாய்ச் செபம் எனில் உதடுகளை அசைத்து உச்சரித்துச் சொல்லும் ஜெபம் . உரத்த சத்தமாகச் சொன்னாலும் சரி எவருக்கும் கேட்காவண்ணம் நமக்கு மட்டும் புரியும்படி உதட்டை அசைத்துச் சொன்னாலும் சரி , அது வாய்ச் செபம் . இவ்விதம் ஏற்கனவே மனப்பாடம் செய்திருந்த செபத்தைத் சொன்னாலும் ,அப்போதைக்கப்போது மனத்தில் எழுவதை உச்சரித்தாலும் அது வாய்ச் செபம் . ஒரு மடத்தில் உள்ள துறவிகள் கூடி சங்கீத மாலையைப் பாடுவது வாய்ச் செபம். தற்காலத்தில் செபமாலைக்கு அளித்திருக்கும் பலன்களை அடைய வேண்டுமானால் மற்றவர்களோடு சேர்ந்தோ தனித்தோ மந்திரங்களை வாய்ச் செபமாகச் சொல்வது அவசியம்

பத்து மணி வாய்ச் செப முடிவைக் குறிக்க முதல் துவக்கத்தில் உடல் ஜெபத்தை வழங்கினர் என்று கண்டோம்.பின்னர் ஒவ்வொரு பத்துக்கும் இடையில் கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொன்னார்கள்
"ரோஜாமலர் பூங்கா " என்று பொருள்படும் மேல்நாட்டு மொழிகளில் தற்சமயம் வழங்கும் ரோசரி என்னும் மொழி எக்காலத்தில் பெரிதும் வழங்கினது என்று தெரியவில்லை .இதைப் பற்றி மேல்நாட்டில் ஒரு சரிதை பிரபலமாகி இருந்தது . ஓர் இளைஞன் பகதியாய்ச் செபமாலை சொல்லுவது வழக்கம் . ஒரு நாள் அவன் முன் தேவதாய் தோன்றினார் . அவன் ஒவ்வொரு முறை 'அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லுகையில் அவன் உதடுகளினின்று ஒரு சிவந்த ரோஜா வந்து அன்னையின் சிரசில் முடியாக அமர்ந்தது

16ஆம் நூற்றாண்டில் தான் விசுவாச மந்திரத்தைச் செபமாலை நேரத்தில் சொல்லும் வழக்கம் உதித்தது . 15ஆம் நூற்றாண்டில் இருந்து சிலர் ஜெபமாலை சொல்லும் பொது , சமயத்துக்கு சமயம் மனோ ஜெபத்தையும் சொல்லத்தொடங்கினர். தொண்டை , நா , உதடுகளின் அசைவின்றியே உள்ளத்திலேயே இறைவனையோ தேவதாயையோ புகழ்வதும் அவர்கள் பெருமையைச் சிந்திப்பதும் துதிப்பதும் ,அவர்களைக் கெஞ்சுவதும் மனோ ஜெபமாம் . துவக்கத்தில் தாயின் சந்தோஷங்களையும், வியாகுலங்களையும், மகிமையையும் பொதுவில் தியானித்து வந்தனர் . இவ்வழக்கத்தை அர்ச் சாமிநாதர் மரித்து இரு நூற்றாண்டுகளுக்குப் பின் கர்த்தூசியர் சபையினரான ப்ரஷ்ஷிய நாட்டு டொமினிக் துவங்கினார் . ஒவ்வொரு பத்துக்குப் பின்னும் தேவ இரகசியம் சொல்லி அதைத் தியானிக்கும் வழக்கம் இன்னும் வெகுகாலத்துக்குப் பின் தான் சம்பிரதாய வழக்கில் நடைமுறையாயிற்று. செபமாலையில் முடி போல் தொங்கும் மூன்று மணிகளும் அவைகளில் இப்போது சொல்லும் செபமும் வெகுகாலம் சென்று தான் வந்தன . என்னவானாலும் இப்போது சொல்வது போல செபமாலை சொல்லும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டில் வந்ததெனச் சொல்லலாம்

"அருள் நிறைந்த மரியே  " என்று சொல்கிற மந்திரமும் இப்போது நாம் சொல்வது போலவே முதல் தொடங்கி இருந்தது என்று எண்ணலாகாது . செபமாலை அல்லது மரியின் சங்கீத மாலை சொல்லிவந்த துவக்கத்தில் சம்மனசின் மங்களத்தை மட்டும் சொன்னார்கள் . "அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே " . சில நூற்றாண்டுகள் சென்று எலிசபெத்தம்மாளின் வாழ்த்துதளையும் சேர்த்துக் கொண்டனர். "அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே ; பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ; உம்முடைய திரு வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே " இயேசு என்ற சொல் இன்னும் சிலகாலம் சென்ற பின்னர் சேர்க்கப்பட்டது . "கனியான இயேசு " மேலும் பல நாள் சென்று "அர்ச் மரியாயே , சர்வேசுரனுடைய மாதாவே " என்கிற மன்றாட்டைத் திருச்சபை சேர்த்தது .