செபமாலையின் வரலாறு.

12 ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே ஜெபமாலை சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருந்தது .ஆனால் இந்நாளில் ஜெபிக்கும் முறையே அந்த நாட்களிலும் வழங்கியது என்று எண்ணலாகாது . ஜெபமாலை என்றும் அதற்குப் பெயரில்லை . மரியின் சங்கீத மாலை என்று வழங்கப்பட்டது . குருக்கள் பாடும் 150 சங்கீதங்களைச் சங்கீத மாலை என்று பாடினர். அதைப் பின்பற்றித்தான் மரியின் சங்கீத மாலை வந்தது . 150 முறை அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லி வந்தனர் . மேலும் ஒவ்வொரு சங்கீதத்திலும் உள்ள இரண்டொரு வார்த்தைகளையோ , எண்ணங்களையோ புகுத்தி செய்யுள் அமைத்து தாயைப் புகழ்ந்தனர் .ஓர் உதாரணம்

கன்னியரின் கன்னியும் நிகரற்ற தாயுமானவளே! ஆண்மகன் உதவியின்றி அருங்கரித்தவளே! தேவனின் சட்டத்தை தினம்தினம் தியானிக்கச் செய்யும். தேவனின் அரசின் மகிமையில் ஆனந்திக்கச் செய்யும்.

இதில் மூன்றாம் அடி சங்கீதத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது . இதே போல் தேவ தாய்க்கு 150 கண்ணி கொண்ட மாலை தொகுத்தனர்

ஆனால் பொதுவில் வழங்கியது 'அருள் நிறைந்த மரியே ' என்னும் ஜெபத்தை , ஐம்பது ஐம்பதாக மும்முறை சொல்வதாம். .அருள் நிறைந்த மரியே என்ற ஜெபம் இன்றையைப் போல் அன்று அவ்வளவு பூர்த்தியானதல்ல. சங்கீதங்கள் இறைவனுக்கு தோத்திரப்பாக்கள், அது போல் இச்செபம் மாமரிக்குத் தோத்திரப்பாக்கள் .

13ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு துறவி சொல்லுவார் " நாம் மரியன்னைக்கு வந்தனை செலுத்துவோமேயாகில் , அவர் பதில் வந்தனை செலுத்தத் தெரியாத கிராமத்தாள் அல்ல . மரியின் வந்தனையைக் கேட்டவுடன் எலிசபெத் இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டாள். மாமரி சொல்லும் வந்தனையால் நாமும் வரப்பிரசாதத்தால் பூரிக்கும்படி மாமரிக்கு அடிக்கடி வந்தனை செய்வோமாக"

."மாமரி சொல்லும் வந்தனைக்கு என்ன வல்லமை ! அது நமக்கு ஆனந்தத்தை அளிக்கும். பரிசுத்த ஆவியைக் கொடுக்கும். இறைவனுடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தும். தீர்க்கதரிசன வரத்தை நமக்குக் கொண்டு வரும்" என்றார் வேறொரு துறவி

"அருள் நிறைந்த " ஜெபம் தேவதாய்க்கு தோத்திரம் என்பதோடு கூட ,அதனால் வரும் நன்மைகளைக் காண்பித்து அடிக்கடி இந்தத் தோத்திர கீதத்தைப் பாடும்படி மக்களை அத்துறவிகள் தூண்டிப்போயிருக்கின்றனர்.

பலமுறை ஒன்றைச் செய்வோமேயாகில் ,சொல்வோமேயாகில்  அதைக் கணக்கில் வைக்க வேண்டாமா ? அதற்காக முதன்முதல் சிறு சிறு கூழாங்கற்களை உபயோகித்தனர் . பின்னர் சில உதிரிக் கொட்டைகளை உதவிக் கொண்டனர். அதன்பின் அக்கொட்டைகளை சிறு கயிறுகளாலோ கம்பிகளாலோ கோர்த்தனர் . முதலில் ஐம்பது ஐம்பதாகக் கோர்த்துக் கொண்டனர் . இப்பூவுலகில் தேவதாய் 63 வருடங்கள் இருந்ததாக ஒரு ஐதீகம் இருந்து வருவதால் 63 மணிகள் கோர்த்த சரடுகள் பல இடங்களில் இருந்து வந்தன

ஒவ்வொரு பத்துக்கும் இடையில் 'கர்த்தர் கற்பித்த ஜெபம் ' சொல்லும் வழக்கம் கிடையாது . 17ஆம் நூற்றாண்டின் முடிவில் முதலாய்ச் சிலர் அச்செபத்தைச் சொன்னாலும் அதைச் சொல்லும் சம்பிரதாயம் வழக்கில் இல்லை . பத்துப் பத்தாய்ப் பிரித்துக் காட்ட என்ன செய்தனர் ? ஆதியில் ஒவ்வொரு சங்கீத முடிவில் என்ன செய்தனரோ அதைச் செய்தனர் . அதாவது தலை குனிந்தனர் ; மார்பைத் தட்டினர் . ஒற்றை முழந்தாளில் நின்று எழுந்தனர் . அல்லது இரட்டை முழந்தாளிட்டனர் . சிலர் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுந்தனர் . திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே மூவின ஜெபம் வழக்கத்தில் இருந்து வந்தது . மெய் , மொழி, மனம் . கரங்களைக் குவித்தல் , குவித்துத் தூக்குதல் , சிலுவையைப் போல் கரத்தை விரித்தல் , முழந்தாளில் இருத்தல் , நெடுஞ்சாண்கிடையாய்க் கிடத்தல் ஆகியனவாம் . இவை பல மதங்களிலும் வழக்கத்தில் உள்ளன.