சாவின் பேரிலும் தனித்தீர்வையின் பேரிலும்

105. பாவத்தின் நிமித்தம் சகல மனுஷர்களுக்கும் வருகிற ஆக்கினை என்ன?

சாவு. 


106. எப்போதும் சாவுக்கு முஸ்திப்பாயிருக்கும்படி நாம் செய்ய வேண்டியதென்ன? 

சாவான பாவமில்லாமல் எப்போதும் தேவ இஷ்டப்பிரசாதத்தோடு இருக்க வேண்டியது.


107. சாவுக்குப் பின் சரீரம் என்னமாய்ப் போகும்?

அழிந்து மண்ணாய்ப் போகும்.


108. ஆத்துமம் அழியக்கூடுமோ?

கூடாது. அது அழியும் வஸ்துவல்ல.


109. கல்லறைகளின் மேல் ஏதாவது தின்பண்டங்கள் முதலியவை வைப்பது நியாயமா? 

நியாயமல்ல. அப்படி வைப்பதினால் ஆத்துமத்திற்காவது, சரீரத்திற்காவது ஒரு பிரயோசனமுமாகாது.


110. அழிந்துபோகிற சரீரத்தை அவ்வளவு மரியாதையாய் அடக்கம் செய்ய வேண்டியதென்ன? 

அந்த சரீரம் கிறிஸ்துநாதருடைய அவயமும், தேவனுடைய ஆலயமுமாயிருக்கிறதல்லாமல் சரீர உத்தான நாளில் அது திரும்பவும் ஆத்துமத்தோடு சேர்ந்து உயிர்க்கும் என்பதினாலேதான்.


111. சாவுக்குப் பின் சம்பவிக்கிற தென்ன?

தனித்தீர்வை.


112. தனித்தீர்வை என்பதென்ன?

அவனவன் மரித்த உடனே அவன் செய்த பாவபுண்ணியங்களின் பேரில் சர்வேசுரன் செய்யும் தீர்ப்பே தனித்தீர்வையாம்.


113. தனித்தீர்வைக்குப் பிறகுசாவான பாவமுள்ள ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்? 

நரகத்துக்குப் போகிறார்கள்.


114. பரிசுத்த ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

மோட்சத்துக்குப் போகிறார்கள்.


115. தங்கள் பாவங்களுக்காக முழுதும் உத்தரியாத புண்ணிய ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்? 

உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு போகிறார்கள்.


116. உத்தரிக்கிற ஸ்தலத்தில் என்னமாயிருக்கிறார்கள்?

தங்கள் பாவங்களுக்குத்தக்க வேதனைப்பட்டு உத்தரிக்கிறார்கள். முழுதும் உத்தரித்தபிறகு மோட்சத்தை அடைவார்கள்.