ஜெபமாலை ஜெபிக்க முதலில் ஆரம்பிக்கும் போது முதலில் அவர்களுக்கு வரும் தடைகள்!

சோம்பல், அலட்சியம், தூக்கம், மனம் ஒரு நிலைப்படாமை, சோர்வு, அலுப்பு எல்லாம் ஏற்படும். ஜெபமாலை பசாசுக்கு எதிரான ஆயுதம். அதனால் இதுபோன்ற பிரச்சனைகள் ஆரம்பத்தில் தலைதூக்கும். பாசாசு நம்மை ஜெபமாலை செய்ய விடாது. வேறு எதாவது வேலையிலோ அல்லது சீரியல், சினிமா போன்றவற்றிலோ, அல்லது பேச்சு சுவாரஸ்யத்திலோ நம்மை ஈர்க்கும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமர்ந்து ஜெபமாலை சொல்ல ஆரம்பிக்கவேண்டும். எந்த சோதனைகள் வந்தாலும் ஜெபமாலை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

தொடர்ந்து 53 மணிகள் சொல்லி முடித்த பின்பு மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். அப்படியே தினமும் தொடரவேண்டும். ஜெபமாலை தினமும் தொடர்ந்தால் எப்படியாவது ஒரு நாளைக்கு 53 சொல்லிய ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவோம். அப்படியே தொடரும்போது ஜெபமாலை ஜெபிக்காமல் தூக்கமே வராது. ஒவ்வொரு ஜெபமாலையின் முடிவில் நாம் பாதுகாப்பை உணர முடியும். கடவுளை உணரமுடியும். ஜெபமாலை நம்மை சகல ஆபத்துக்களின்றும் பாதுகாக்கும் கருவி. அதிலும் நம் ஆன்மா கடவுளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக்கொண்டே இருக்கும். ஆன்மீக தேடலுக்கும், விசுவாச உறுதிக்கும் ஜெபமாலை மிக மிக அவசியம்.

பயணம் செல்லும் போது, நடந்து செல்லும்போது, சும்மா இருக்கும் போது ஜெபமாலை ஜெபிக்கலாம். சில வேளைகளில் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப பத்து, பத்து மணிகளாக ஒவ்வொரு தேவ இரகசியமாக ஒவ்வொரு கருத்துக்களுக்காக ஒப்புக்கொடுக்கலாம்.

ஆகவே, ஆரம்பித்தில் ஜெபமாலை ஜெபிக்க தடைகள் வந்தால் நீங்கள் சொல்லும் ஜெபமாலையை வைத்தே விரட்டி அடிங்கள். பசாசின் சோதனைகள் வந்தால் ஜெபமாலையை வைத்தே அவனை வெல்லுங்கள். ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை.

இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !