கபரியேல் தூதரின் மங்கள வார்த்தை தினம்!

அதாவது இந்த உலகிற்கு மீட்பு, அன்னை மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட நாள். அதாவது ஜெபமாலை உருவான நாள். ஜெபமாலை சொன்னால் ஆன்மாக்கள் மனம் மாறுகின்றன. ஆபத்துக்கள் விலகுகின்றன. குடும்பத்திற்கு சமாதானம் கிடைக்கின்றன. கேட்கும் காரியங்கள் நிறைவேறுகின்றன.

ஜெபமாலை ஜெபித்தால் சாத்தான்கள் மிகவும் அஞ்சி நடுங்குகின்றன. ஏன்???

ஏனென்றால் கபரியேல் தூதரின் மங்கள வார்த்தையே உலகிற்கு மீட்பைக் கொண்டு வந்தது. வார்த்தை மனு உருவாக காரணமாக இருந்தது. நமதாண்டவர் இயேசுக் கிறிஸ்துவை உலகிற்கு கொண்டு வந்தது. சாத்தானையும், அதன் திட்டங்களையும் முறியடித்து கோடிக்கணக்கான ஆன்மாக்கள் மீட்படைய காரணமாக இருந்தது.

ஜெபமாலையின் முக்கியத்துவத்தை அறிந்ததால்தான் கிட்டத்தட்ட அனைத்து புனிதர்களுமே தங்கள் புனித வாழ்க்கையில் ஜெபமாலை சொல்லி வந்திருக்கிறார்கள். நம் முன்னோர்கள் ( இன்றும் ஒரு சில குடும்பங்கள் அனுதினமும் குடும்ப ஜெபமாலை ஜெபிக்கிறார்கள். நம் முன்னோர்கள் என்று சொல்லும் அளவிற்கு இன்றைய கத்தொலிக்க குடும்பங்களின் நிலமை மாறியதால் முன்னோர்கள் என்று சொல்லும் வேதனையான நிலமை) தினமும் குடும்ப ஜெபமாலை சொல்லாமல் உறங்கியதில்லை.

இந்த உலகில் எப்போதெல்லாம் பாவங்கள் மலிந்ததோ , தப்பரைகள் தலைதூக்கியதோ அப்போதெல்லாம் அன்னை மரியாள் காட்சி தந்து அனுதினமும் ஜெபமாலை சொல்லுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஜெபமாலையின் மூலம் தப்பரைகள் தவிடு பொடியாயிருக்கின்றன. ஆன்மாக்கள் மனம் திரும்பிக்கொண்டிருக்கின்றன.

இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அநேக பிரச்சனைகள் அதிலும் குடும்ப பிரச்சனைகள், பிரிவு, நிம்மதியின்மை, கண்ணீர், கவலைகளுக்கு காரணம் குடும்பங்களில் ஜெபம் இல்லை. ஜெபமாலை இல்லவே இல்லை என்பதுதான். சமூகத்தைப் பார்த்தால் எது எதுவெல்லாம் பாவமோ, முகம் சுழிக்கவைப்பதோ அதுவெல்லாம் நல்லவைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று அதுதான் நல்லவைகள் போல் காட்சி தருகின்றன. இதற்கெல்லாம் காரணம் மனிதன் கடவுளை மறந்தும், பயமின்றியும், ஜெபிக்காமல் வாழும் வாழ்க்கையே. அநேக தற்கொலைகள், கொலைகள் நடப்பதற்கும் ஜெபங்கள் இல்லாத சூழலே காரணம். விபச்சார ஆன்மாக்கள் பெருகியதற்க்கும் ஜெபமாலை ஜெபிக்காததே காரணம்.

சாத்தான்களின் சூழ்ச்சிகள் பெருகிவிட்டதாலும், அவைகள் அநேக ஆன்மாக்களில் குடியேறிவிட்டதாலும், கெட்டவைகள் நல்லவைகள் போல் தோன்றினாலும் கெட்டவைகள் கெட்டவைகளே.

ஆதலால் ஜெபமாலையைக்கொண்டு சாத்தான்களை விரட்ட முடியும், ஆன்மாக்களை மீட்க முடியும். முதலில் நம்முடைய ஆன்மாவை மீட்க முடியும். ஆதலால் ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம்.

கபரியேலின் மங்கள வார்த்தையைக்கொண்டு இயேசுவை அடைய முடியும். சோதனைகளை வெல்ல முடியும். ஆகவே சக்தி வாய்ந்த ஜெபமாலையை கையில் எடுப்போம்; அலகையையும் அதன் தந்திரங்களையும் வெல்வோம். இறுதியாக,

ஜெபமாலையை இயற்றியது யார்? ஜெபமாலையில் எந்த ஜெபம் உள்ளது ? ஜெபமாலையில் பாதியை எழுதியது பிதாவாகிய கடவுளும், பரிசுத்த ஆவியான கடவுளும். பின் பாதி பாவிகளான நமக்காகவும், உலகில் உள்ள அத்தனை பாவிகளுக்காகவும், உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காகவும் சுதனாகிய ஆண்டவரிடம் அன்னையை வேண்டிக்கொள்ள கேட்கும் ஜெபமாக அமைவதால். அன்னை கேட்டால் மகனால் மறுக்க முடியுமா?

ஆகவே ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம்.

அருள் நிறைந்த மரியே வாழ்க !