31 நாள் சிறப்பு ஜெபமாலை ஆறாம் நாள் கர்த்தர் கற்பித்த ஜெபம்

நமதாண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம் எவ்வளவு மேலானது ! அதை ஆக்கியவர் மனிதரல்லர் ; சம்மனசுமல்லர்; மனிதர்களுக்கும் சம்மனசுக்களுக்கும் அரசர், நமதாண்டவராகிய இயேசுநாதர் ! அச்செபத்தின் அமைப்பில் உள்ள ஒழுங்கு முறையும் , உருக்கமான வன்மையும் , தெளிவும் நம் தேவ ஆசிரியரின் ஞானத்தை விளக்குகிறது . சிறு செபமானாலும் அநேக காரியங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது . படிக்காத பாமரருக்கும் அது விளங்கும் . கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களும் விசுவாச இரகசியங்களில் புதுப்புது எண்ணங்களை அறிய வருவார்கள் 

இம்மந்திரத்தில் இறைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய எல்லாக் கடமைகளும் , எல்லா புண்ணியங்களும் நமது எல்லா ஆத்தும சரீர தேவைகளுக்கு மன்றாட்டும் பொதிந்து கிடக்கின்றன . இச்செபம் புதிய ஏற்பாட்டின் சுருக்கம் என்றார் தெர்த்துல்லியன். எல்லாப் புனிதர்களுடைய சகல ஆசைகளுக்கும் மேற்பட்டது இம்மந்திரத்தின் வேண்டுகோள் என்று ' கிறிஸ்து நாதர் அனுசார'த்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார் . சங்கீதங்களிலும் உன்னத கானத்திலும் உள்ள இரசமானவைகளின் சுருக்கம் என்பதும் அதில் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து கேட்கிறோம் என்பதும் , அதில் மேலான விதமாய்க் கடவுளைப் புகழுகிறோம் என்பதும் , நமது உள்ளத்தை எழுப்பி இறைவனோடு ஒன்றிக்கிறோம் என்பதும் அவரது கருத்து 

தமது மகனிடமிருந்து கற்றுக்கொண்ட செபத்தை நாம் சொல்லும்போது பிதாவானவர் அதை எவ்வளவு கவனமுடன் கேட்பார் ; கேட்பதைக் கொடுப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம் . கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லும்போதெல்லாம்  நம் அற்ப பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன என்பது அர்ச் அகுஸ்தீனாரின் விசுவாசம் . நம் பலவீனத்தையும் எளிமைத்தனத்தையும் நன்குணர்ந்த நாதர் நாம் எத்தனைச் சங்கடங்களுக்கு ஆளாகிறோம் என்று உணர்ந்து அந்த செபத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லி வைத்திருக்கிறார் 

பெரிய கலைஞர்களே ! அருமையான செப புஸ்தகங்களில் அணி அலங்காரத்தோடு எழுதிய நீங்க ஜெபங்கள் தாம் நல்லது என்று சொல்லாதீர்கள் . எவ்வளவு ஞானமுள்ள சாஸ்திரி ஆனாலும் மனிதன் ஆக்கிய செபத்தை விட , ஆண்டவர் அமைத்த ஜெபம் எவ்வளவு மேலானதாயிருக்க  வேண்டும் . தெளிவான நீரூற்றை விட்டு விட்டு கலங்கலான நீர் ஓடைக்குச் செல்லாதீர்கள் . சுத்த ஜலத்தை விட்டு விட்டு சேறு கலந்த நீரைப் பருகுவது மேல் என எண்ணாதீர்கள் . இந்த செபமாகிய ஊற்றிலிருந்து புறப்படும் சிற்றோடைகள் அன்றோ மற்ற ஜெபங்கள் ?

இச்செபத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்துப் பார்த்து யோசித்துக் கவனத்தோடு இச்செபத்தைச் சொல்லுகிறவர்கள் மகா பாக்கியவான்கள் .ஏனெனில் அவர்கள் ஆசிப்பது எல்லாவற்றையும் , அவர்களுக்குத் தேவையான யாவற்றையும் இதில் கண்டடைவார்கள் 

இந்த அதிசய ஜெபத்தை உச்சரிக்கத் தொடங்கும்போதே கடவுளைப் பிதாவே என்றழைத்து , அவரது மனத்தை இளக்கி நம் பக்கம் சாயச் செய்கிறோம் . தந்தையர் யாவரிலும் அவர் மகா அன்புள்ளவர் . அவர் படைத்தவைகளில் யாவற்றிலும் சகல வல்லமையுள்ளவர் . அவைகளின் பராமரிப்பில் நேசத்துக்குரியவர் . விசேஷமாய் இரட்சணிய அலுவலில் மகா அன்புக்குரிய நேசத்தந்தை . நம் தந்தை கடவுளா? அப்படியாகில் நாம் யாவரும் சகோதரர்கள் , சகோதரிகள் . மோட்சம் நமது சொந்த வீடு . இந்த ஊர் எண்ணமே இவ்வுலகப் பொருட்களிலிருந்து நம்மைப் பிரித்து இறைவனையும் அயலாரையும் நேசிக்கத்தூண்ட வேண்டும் 

செபம்

ஓ செபமாலை இராக்கினியே , மாசற்ற மரியாயே , திரு இருதயத்தின் அன்னையே , மக்கள் உள்ளங்களை வாட்டும் பாவங்களுக்காக உண்மையிலேயே நான் மனம் நொந்து கஸ்திப்பட எனக்குக் கிருபை செய்யும். கூரிய முட்களையும் கொடிய முள் முடியையும் குரூரமான சாட்டை அடிகளையும் , இயேசுவுக்கு மரண வாதை கொடுத்த யாவற்றையும் என் கண்ணை வருத்தும் விதம் காண்கிறேன்  எனினும் துன்பத்தைக் கொடுக்கும் உயிரற்ற பொருட்கள் அவை . என் பாவங்கள் அல்லவா அவரது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தச் செய்தன. எனது ஈடேற்றத்திற்காக என் மேல் வைத்த அளவற்ற அன்பால் இவை யாவற்றையும் அனுபவிக்க அவர் சித்தமானார் . இதற்கு ஏதாவது கைம்மாறு நான் செய்ய வேண்டாமா? உண்மையைச் சிந்திக்காத யோசனையற்ற உலகத்திற்காக பரிகாரம் செய்வதில் என் அற்ப சிநேகத்தைக் காட்ட வேண்டாமா ? 

துக்கத்துக்குரிய பாடுகளின் வியாகுல மாதாவே , எங்கள் பாவங்கள் அவரைப் படுத்தி வைத்த ஒவ்வொரு வாதனையிலும் நீர் பங்கு கொண்டீர் . மனமார நாங்கள் செய்த அக்கிரமத்திற்கும் , துரோகத்திற்கும் பரிகாரம் செய்யும் பிரயாசையில் எங்கள் இதயத்தை உம்முடைய இதயத்தோடு ஒன்றிக்கும் அரிய வரப்பிரசாதத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும் 

செபமாலை இராக்கினியே தூய அன்பினால் எங்கள் இதயம் பற்றி எரியச் செய்தருளும் ஆமென் 

தொடரும்

நன்றி சகோதரர் : அகஸ்டஸ்