தவக்கால சிந்தனைகள் 11 : மாபரன் இயேசுவுக்கு சீமோனின் உதவி...

பாருங்கள் மாபரன் இயேசுவு சுவாமிக்கு கூட உதவி தேவைப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கசையடிபட்டு உடலின் தசைகள் கிழிந்து உடையோடு ஒட்டியிருக்கிறது. இப்போதாவது அவரை சும்மா சிலுவை சுமக்க விடவில்லை. அவர்களது கொலைவெறி தீர்ந்தபாடில்லை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அடித்துக்கொண்டே இருக்கவேண்டும் போல் அவர்களுக்கு தோன்றுகிறது. சவுக்கால் அடித்துக்கொண்டே அவரை சிலுவை சுமக்க வைக்கிறார்கள்.

அனைவருக்கும் வலுவூட்டும் தேவன் முற்றிலுமாக வலு இழந்திருக்கிறார். இருந்தாலும் எங்கிருந்தாவது வலுவை வரவழைத்துக்கொண்டு சிலுவை சுமக்க முயற்சி செய்கிறார். ஏற்கனவே ஒரு முறைவிழுந்துவிட்டார்.

அவர்களுக்கு ஐயம். “ இவன் கல்வாரி செல்லும் வரை தாங்குவானா? நாம் இவனை சிலுவையில் அல்லவா அறைந்து கொல்ல வேண்டும் “ என்ற எண்ணத்தில் சும்மா வந்த சீமோனை பிடித்து இயேசுவின் சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தி சுமக்க வைக்கிறார்கள்.

சும்மா பார்க்க வந்த சீமோனுக்கு திவ்ய இயேசுவின் சிலுவை பரிசாக கிடைக்கிறது. இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்..

அவர் இயேசுவின் சிலுவையை சுமந்ததால் சரித்திரத்தில் அவருக்கு இடம்.

சிலுவை.. திருச்சிலுவை.. யாருக்கு எப்போது எப்படி கொடுக்கப்படும் என்று தெறியாது. ஆனால் கொடுக்கப்படும் நேரத்தில் என் சிலுவையை நான் சுமக்க மாட்டேன் என்று பயந்து ஓடுவது ஒரு கிறிஸ்தவனுக்கு அழகல்ல. ஆகவே எந்த சிலுவையாக இருந்தாலும் அதை சுமக்க ஆண்டவராகிய இயேசுவிடமே தைரியத்தையும், சக்தியையும் வாங்கிக்கொண்டும் அவர் சிலுவையை நாம் சுமந்தே ஆக வேண்டும். “

"என்னை பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லட்டும் “

இந்த வார்த்தையை இந்த சிலுவைப்பாதை சிந்தனையில் அடிக்கடி பார்க்க முடிகிறது.. வேறு வழியில்லை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்..

ஏன்? சிலுவைகள் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை.. கிறிஸ்தவ வாழ்வு இல்லை.. சிலுவைகள் இல்லாமல் எந்த கிறிஸ்தவனும், எந்த கிறிஸ்தவளும் இல்லை..

ஆண்டவர் இயேசுவும் சுமந்தார்..

இங்கே சீமோனும் சுமக்கிறார்..

இங்கே ஒரு உண்மை விளக்கப்படுகிறது..

ஆண்டவரைப் பின் செல்ல வேண்டுமானால் நம்முடைய சிலுவையை நாம் சுமந்தே ஆக வேண்டும்..

ஆண்டவர் சொல்லிய வார்த்தைகளும் இங்கே நிறைவேறிவிட்டது...

ஆண்டவர் இயேசுவைப் பின் செல்ல வேண்டுமானால் நம்முடைய சிலுவைகளை நாம் சுமந்தாக வேண்டும்...

நம்முடைய சிலுவைகளை ஆண்டவர் இயேசுவுக்காக நம்முடைய மீட்புக்காகவும், பாவிகள் மனந்திரும்பவும் சுமக்க, சுமந்து ஒப்புக் கொடுக்க நாம் தயாரா?

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!