தவக்கால சிந்தனைகள் : 10 : தாயும் மகனும் சந்திக்கிறார்கள்..

இது ஒரு வரலாற்றுச் சந்திப்பு அல்லது இரண்டு வரலாறுகளின் சந்திப்பு. அன்பிற்கு எங்களை விட சிறந்த எடுத்துக்காட்டுகள் இந்த வையத்தில் இல்லை என்று இருவரும் சொல்லாமல் சொல்லிய சந்திப்பு..

“ மனிதா உன் மீது நான் கொண்டுள்ள அன்பை நீரூபிக்க இதை விட மேலான செயல் எனக்கு தெறியவில்லை “ என்று சொல்லி சிலுவையை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தது ஒரு அன்பு.

இன்னொரு அன்பு தான் பாலூட்டி சீராட்டி வளர்த்த தன் ஒரே மகனை, தன் அன்பை, தன் உலகத்தை இந்த தரணிக்கு தாரைவார்க்கத் துணிந்துவிட்டது.

அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் எத்தனை ? அனுபவித்த வேதனை எத்தனை ? இன்னல்கள் எத்தனை ?

இப்போது இந்த இன்னல்களுக்கு மத்தியிலும் ஏன் தன் ஏக மகனை சந்திக்க வந்தார்கள். தன் மகனின் அந்த ஒரு இக்கட்டான நெருக்கடியான நிலையிலும் அவருக்கு ஒரு ஆதரவு, ஒரு உறுதி, ஒரு வீரம், ஒரு தெம்பு கொடுத்தாக வேண்டும். அதுவும் மாதாவால் மட்டுமே அவருக்கு கொடுக்கமுடியும் என்று தோன்றியதால் துணிவோடு தன் உள்ளத்தை தயாரித்துக்கொண்டு தன் மகனை சந்திக்க வந்துவிட்டார்கள்..

இப்போது இயேசு எனும் அன்பு : ஒரு மகனாக என் தாயை நான் சந்தித்தே ஆகவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கிறது அதுவும் இத்தகைய சூழ்நிலையில். இதை என் தாய் எப்படியோ உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான் இப்போது என் முன்னால் வந்து நிற்கின்றார்கள். தன் உணர்ச்சி, பாசம், வேதனை, துக்கம் இதை எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு எங்கே தான் உடைந்தால் நான் உடைந்துவிடுவேனோ என்ற முன்னெச்சரிக்கையோடு செயல்படுகிறார்கள்..

இயேசு சுவாமிக்கும் தெரியும் தன் தாயின் நிலை. நான் எப்போதெல்லாம் துவண்டேனோ, வருந்தினானோ, வெறுத்து தள்ளப்பட்டேனோ அப்போதெல்லாம் என்னை தேற்றியது என் தாயின் புண்ணகைதானே ! என் தாயின் தேனைவிட இனிமையான சொற்கள்தானே ! அதிலும் குறிப்பாக எருசலேம் ஆலயத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டு நான் துவண்டபோது என் தாயின் மெல்லிய புண்ணகையும், தேற்றலும், ஊக்கமும்தானே அப்போது என்னைத் நேற்றியது..

இப்போதும் எனக்கு அதே ஊக்கத்தை தாருங்கள் அம்மா! என்று நான் மனதில் நினைத்தேன் நீங்கள் என் எதிரே வந்து விட்டீர்கள்.. அதுதானே அம்மா உங்கள் ஸ்பெசல். இந்த உங்களோட சிறப்பான குணாதிசயத்தால்தானே வானகமும் வையகமும் உங்களைக் கொண்டாடுகிறது.

அம்மா ! என்ற சொல்லுக்கு முழு இலக்கணம் நீயே. முழு தகுதி நீயே ! இதை கடவுள் எப்படியோ தெரிந்து கொண்டு உன்னை என் தாயாக்கிவிட்டார் அம்மா..

கல்வாரியில் இந்த நான்கு கண்கள் பேசிய மொழி என்னவாக இருந்திருக்கும். ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த தங்கள் முழு அன்பையும் இந்த ஒற்றைப்பார்வைகள் உணர்த்தியிருக்கும். இந்த பார்வை மொழியில் கொடுத்தல் வாங்குதல் நடந்திருக்கும். அதாவது ஒருவரை ஒருவர் தாங்குதல்..

கொடுத்தது தாயின் அன்பு, பெற்றது மகன் அன்பு, பெற்றாலும் தன் தாய்க்கு பார்வையாலே தேற்றலும் உறுதியும் இந்த மகன் கொடுக்கிறார். அன்புக்கு பதில் அன்பு கொடுக்காமல் செல்வது இந்த மகனாலும் முடியாத செயலே.

அன்பைக் கொடுத்து அதை இரட்டிப்பாக பெற்று இருவருமே விடை பெறுகிறார்கள்..

தாளாத நிலையிலும் ஒருவரை ஒருவர் தாங்குகிறார்கள்.. இதுதான் அன்பின் உச்சம்...

இந்த இரண்டு அன்பிற்கும் இவ்வுலகில் ஈடு இணை இல்லை...

அந்த கல்வாரி மகனைப் போல நாமும் இந்த உன்னத தாயை நேசிக்கிறோமா?

நேசித்தால் தினமும் ஒரு 53 மணி ஜெபமாலையாவது ஜெபித்து உதவுவோம்.. அதுவும் குடும்ப ஜெபமாலையாக... மேலும் தவம் மற்றும் பரிகாரங்கள் செய்தும் உதவுவோம்..

இப்போது ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி. நம் ஒவ்வொருவரும் கடவுள் நமக்கு கொடுத்த தாயை எப்படி வைத்திருக்கிறோம். ஒரு நேரத்தில் அன்பை பொழிந்தபோது தேனாக இனித்தவள் இப்போது ஏன் கசக்கிறாள். அன்று அவளை எதிர்பார்த்து இருந்தோம் இன்று அவள் நம்மை எதிர்பார்க்கிறாளே அதற்காகவா?. உன் தாயின்மீது நீ அன்றும் இன்றும் எதிர்பார்த்திருப்பது எதாவது தேவையாக இருந்திருக்கலாம்.

ஆனால் அன்றும் இன்றும் உன் தாய் உன்னிடம் எதிர்பார்பாது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு மட்டும்தான். அதை ஒவ்வொருவரும் நம் தாய்க்கு கொடுக்கிறோமா?

கல்வாரி நாயகன் அந்த சூழ் நிலையிலும் தன் தாயிடம் அன்பு காட்டினார். நாம் நம் தாயிடம் அன்பு காட்டுவாமா?

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!