மாதாவின் மூன்றாம் காட்சி

(மிக முக்கியமானது)

மாதா தோன்றியவுடன் லூஸியா அவர்களிடம்: “உங்களுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?”

"அடுத்த மாதம் 13-ம் நாளில் நீங்கள் இங்கு வர வேண்டும். உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவும், யுத்தம் முடிவடையவும், தேவதாயின் மகிமைக்காக ஜெபமாலையைத் தினமும் தொடர்ந்து சொல்லி வாருங்கள். ஏனென்றால் மாதா மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்.”

"நீங்கள் யார் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் எங்களுக்குக் காணப்படுகிறீர்கள் என்று எல்லாரும் நம்பும்படி ஒரு புதுமையும் செய்யுங்கள்.” 

"மாதந்தோறும் தொடர்ந்து இங்கு வாருங்கள். அக்டோபர் மாதம் நான் யாரென்றும் என்ன விரும்புகிறேன் என்றும் சொல்லுவேன். எல்லாரும் நம்பும்படி ஒரு புதுமையும் செய்வேன்.” 

மீண்டும் மாதா குழந்தைகளிடம்: 

“பாவிகளுக்காக உங்களைப் பலியாக்குங்கள். அடிக்கடி, குறிப்பாக நீங்கள் ஏதாவது பரித்தியாகம் செய்யும்போது: “ஓ சேசுவே! உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன்” என்று சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

நரகக் காட்சி 

மேற்கண்ட கடைசி வார்த்தைகளைக் கூறியபடி நமதன்னை தன் கரங்களை விரிக்க, அவற்றிலிருந்து பாய்ந்த ஒளி பூமியைப் பிளந்ததுபோல் காணப்பட்டது. அங்கே ஒரு நெருப்புக் கடலை நாங்கள் கண்டோம். அதிலே பசாசுக்களும் ஆன்மாக்களும் அமிழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் பழுக்கச் சிவந்து, ஊடுருவிப் பார்க்கக்கூடிய தணல் போலிருந்தனர். மானிட வடிவத்தில் சிலர் கறுப்பாக அல்லது பித்தளை நிறமாக இருந்தனர். மேகம்போல் புகையுடன் அவர்கள் உள்ளிருந்தே பீறிட்டு வந்த நெருப்புச் சுவாலைகளால் அங்குமிங்குமாக வீசப்பட்டனர். பெருந்தீயிலிருந்து சிதறும் நெருப்புப் பொறிகளைப்போல் பாரமோ நடுநிலையோ இல்லாமல் எப்பக்கமும் விழுந்தனர். வேதனையாலும் எல்லாவற்றையும் இழந்துவிட்ட துயரத்தாலும் அவர்கள் அழுத சத்தம் எங்களுக்குப் பயங்கரத்தை உண்டாக்கியதால் நாங்கள் அச்சத்தால் நடுங்கினோம். (இந்தக் காட்சிதான், ஜனங்கள் கேட்ட தாகச் சொல்லுகிறபடி என்னை சத்தமாகக் கத்தும்படி செய்திருக்க வேண்டும்.) பசாசுக்கள் அகோர அரோசிகமான மிருகங்களைப் போலும் ஊடுருவிப் பார்க்கக் கூடிய நிலக்கரி போலும் மற்றவர்களிடமிருந்து பிரித்து அறியக் கூடியனவாயிருந்தன. பயம் மேலிட்டு உதவி தேடுவது போல் நாங்கள் நம் அன்னையை நோக்கி கண்களை உயர்த்தினோம். அவர்கள் எங்களைப் பார்த்து அன்புடன், ஆனால் துயரத்தோடு இவ்வாறு கூறினார்கள்:  

“பரிதாபத்துக்குரிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை நீங்கள் கண்டீர்கள். அவர்களைக்

காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார். நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள். சமாதானமும் நிலவும். இந்த யுத்தம் முடிவடையும். ஆனால் மனிதர்கள் கடவுளை நோகச் செய்வதை நிறுத்தாவிட்டால் இன்னொரு இதைவிடக் கொடிய யுத்தம் 11-ம் பத்திநாதர் காலத்தில் ஆரம்பிக்கும். (இதுவே 2-ம் உலகப்போர்.)

இனந்தெரியாத ஒரு ஒளியால் ஓர் இரவு வெளிச்சம் பெறுவதை நீங்கள் காணும்போது, உலகத்தின் பழிபாவங்களுக்காக, யுத்தத்தாலும் பசியாலும் திருச்சபைக்கும் பாப்பரசருக்கும் எதிரான கலாபனையாலும் உலகை சர்வேசுரன் தண்டிக்கப்போகிறார் என்பதற்கு அவர் கொடுக்கும் அடையாளம் அதுவே என அறிந்து கொள்ளுங்கள்.

இதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும், கேட்க வருவேன். என் விருப்பங்கள் நிறை வேற்றப்பட்டால் ரஷ்யா மனந்திரும்பும். சமாதானம் நிலவும். இல்லாவிட்டால் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும். யுத்தங்களையும் திருச்சபை கலாபனைகளையும் எழுப்பிவிடும். நல்லவர்கள் வேத சாட்சியமடைவார்கள். பாப்பரசர் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும். பல நாடுகள் இல்லாமல் அழிக்கப்படும். 

ஆனால் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும். பாப்பரசர் ரஷ்யாவை எனக்கு ஒப்புக்கொடுப்பார். அது மனந்திரும்பும். உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.

போர்த்துக்கலில் விசுவாச சத்தியம் எப்போதும் காப்பாற்றப்படும்.......

இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். பிரான்சிஸிடம் சொல்லலாம்.

நீங்கள் ஜெபமாலை சொல்லும் போது ஒவ்வொரு தேவ இரகசியத்தின் முடிவிலும், “ஓ என் சேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும் விசேஷமாய் யார் அதிக தேவையில் இருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்” என்று சொல்லுங்கள்.”

அப்போது லூஸியா மாதாவை நோக்கி:

“உங்களுக்கு வேறு ஏதாவது நான் செய்ய விரும்புகிறீர்களா?”

“இன்று இதற்கு மேல் நான் ஒன்றும் விரும்பவில்லை.” அத்துடன் மாதாவின் காட்சி மறைந்தது.