விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவுமுறையாரோடு கலியாணஞ் செய்யாதிருக்கிறது.

திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும், கணவன் மனைவியாக வாழ்வதாகத் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும்.  மரணம் வரை ஒன்று சேர்ந்து வாழும் கடமையை இந்த ஒப்பந்தம் அவர்கள் மீது சுமத்துகிறது.   “சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக” என்று சேசுநாதர் கூறியபோது (மத்.19:6) அவர் இதையே தெளிவு படுத்தினார்.

சேசுநாதர் திருமணத்தை ஒரு தேவத் திரவிய அனுமானமாக உயர்த்தினார். அர்ச். சின்னப்பர் இந்த மெய்விவாகத்தை ஒரு மாபெரும் தேவத் திரவிய அனுமானம் என்கிறார்.  மெய்விவாகம் ஜீவியரின் தேவத் திரவிய அனுமானமாக இருப்பதால், அது தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் பெறப்பட வேண்டும். அதாவது திருமணம் செய்யும் ஆணும், பெண்ணும் சாவான பாவம் இல்லாமல் இருக்க வேண்டும்.  மெய்விவாகம் என்னும் தேவத் திரவிய அனுமானம் கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தேவையான வரப்பிரசாதத்தைத் தருகிறது; தங்கள் பிள்ளைகளைத் தேவ         சிநேகத்திலும், தேவ பயத்திலும் வளர்க்க அவர்களுக்கு உதவுகிறது.

சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப் படாமல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஓர் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பது போலவே, மெய்விவாக அனுமானத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல் ஒரு கத்தோலிக்க ஆணும் பெண்ணும் செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்கிற அதிகாரம் திருச்சபைக்கு இருக்கிறது.

ஒரு  திருமணம், செல்லத்தக்க கத்தோலிக்க திருமணமாக இருப்பதற்கு, ஆணும் பெண்ணும், இரண்டு சாட்சிகள் முன்னிலையில், பங்குக் குருவுக்கு முன்பாக, அல்லது அவரால் முறைப்படி அனுமதிக்கப் படுகிற ஒரு குருவுக்கு முன்பாக, தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பது அவசியம்.  எனவேஒரு அரசு அதிகாரியின் முன்போ, அல்லது கத்தோலிக்கரல்லாத ஓர் ஊழியரின் முன்போ நிகழ்கிற ஒரு கத்தோலிக்கனின் திருமணம், சர்வேசுரனுடைய பார்வையில் திருமணமே அல்ல.  ஏனெனில் மெய்விவாக அனுமானத்திற்கென கத்தோலிக்கத் திருச்சபை ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளுக்கு அவன் அல்லது அவள் கட்டுப்படவில்லை.

அடுத்ததாக, ஒரு திருமணம் செல்லுபடியாக, ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளவர்களாகவும், சுதந்திரமான விதத்தில் தங்கள் சம்மதத்தைத் தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். விவாக ரத்து செய்து கொண்ட, அல்லது, திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒர் ஆளுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை.

இறுதியாக, திருமணத்தைச் செல்லாததாக ஆக்கக் கூடிய விக்கினங்கள் எதுவும் இருக்கக் கூடாது.  இரண்டு விதமான விக்கினங்கள் உள்ளன.  அவை, தடை செய்கிற விக்கினம் மற்றும் செல்லாததாக்குகிற விக்கினம் ஆகும்.

தடை செய்கிற விக்கினம் என்பது, விசே சலுகை பெறப்படாத நிலையில்,  திருமண ஒப்பந்தத்தை சட்டத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது.  திருமணம் செய்த இருவரில் ஒருவர் கன்னிமை வார்த்தைப்பாடு, அல்லது உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், அல்லது, துறவற அந்தஸ்தில் சேரும் வார்த்தைப்பாடு என்பன போன்றவற்றில் ஏதாவது ஒரு வார்த்தைப்பாடு கொடுத்தவராக இருந்தால், அவர் திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது.

கலப்புத் திருமணம் மற்றொரு தடை செய்கிற விக்கினம் ஆகும்.  கத்தோலிக்கர் ஒருவரும், மற்றொருவர் ஏதாவது ஒரு பதித சபையில், அல்லது பிரிவினை சபையில் ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினராக இருக்கும் மற்றொருவரும் திருமணம் செய்து கொள்வதைத் திருச்சபை மிகக் கடுமையான முறையில் தடை செய்கிறது.  இத்தகைய திருமணங்கள் வேத அலட்சியப் போக்கிற்கும், விசுவாச இழப்பிற்கும், குழந்தைகளின் ஞான உபதேசத்தில் அசட்டைத்தனத்திற்கும் இட்டுச் சென்று விடும் என்பதால் திருச்சபை கலப்புத் திருமணங்களைத் தடை செய்கிறது.  சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டுமே இந்த விக்கினத்திற்குத் திருச்சபையானது விலக்கு அளிக்கிறது. கலப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நியாயமானதும், தீவிரமுள்ளதுமாகிய காரணம் இருக்க வேண்டும்.  திருமணம் செய்து கொள்ளப் போகும் இருவரில் கத்தோலிக்கர் அல்லாத ஒருவர், கத்தோலிக்கராக இருக்கிற மற்றவருக்கு, விசுவாசத்தை அனுசரிப்பதில் எந்தத் தடையும் விதிப்பதில்லை என்ற உத்தரவாதம் தர வேண்டும். மேலும்  அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கிற குழந்தைகள் அனைவரும் கத்தோலிக்க ஞான ஸ்நானமும், கத்தோலிக்க வேதக் கல்வியும் மட்டுமே பெறுவார்கள் என்று திருமணம் செய்து கொள்ளப் போகும் இருவரும் வார்த்தைப்பாடு தர வேண்டும்.

செல்லாததாக்குகிற விக்கினம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது.  திருமணத்தைச் செல்லாததாக்குகிற விக்கினங்கள், குறைந்த வயது, ஏற்கனவே உள்ள திருமண பந்தம், இதர மதத்தினரோடு திருமணம், ஆள் கடத்தித் திருமணம், உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், இரத்த உறவு, நெருங்கின உறவு, ஞானஸ்நானத்தின் போது ஏற்பட்ட ஞானத் தாய் அல்லது உபதியாக்கோன், தியாக்கோன், மற்றும் குருத்துவம் ஆகிய மூன்று உயர் பட்டங்களில் எதையாவது பெற்றிருத்தல், ஞானத் தாய் அல்லது ஞானத் தகப்பன், ஞானப் பிள்ளை என்னும் உறவு ஆகியவை ஆகும்.

திருமணத்திற்கு முந்திய மூன்று அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குக் குருவானவர் திருமண அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால், தங்கள் திருமணத்திற்கு சர்வேசுரனுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்கள் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே தங்கள் பங்குத் தந்தைக்கு அது பற்றி அறிவித்து விட வேண்டும்.

கத்தோலிக்கர்கள் ஆண்டின் எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.  ஆனாலும் ஆகமன காலம், தவக்காலம் ஆகிய தவ, ஒறுத்தல் முயற்சிகளின் காலங்களில், அதாவது, ஆகமன காலத்தின் முதல் ஞாயிறு முதல் கிறீஸ்துமஸ் திருநாள் முடியவும், சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு ஞாயிறு முடியவும், திருமணங்கள் அர்ச்சிக்கப் படுவதைத் திருச்சபை தடை செய்கிறது.    திருமணத்தை அர்ச்சித்தல் என்பதற்கு திருமணப் பூசையை அதற்குரிய திருமண மந்திரித்தலோடு நிறைவேற்றுவது என்பது பொருள். 

தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் மெய்விவாக தேவத்திரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவ இஷ்டப் பிரசாதம் அதிகரிக்கிறது.  மேலும் திருமண அந்தஸ்துக்கு அவசியமான உதவி வரப் பிரசாதங்களைப் பெறவும் அவர்கள் உரிமை பெறுகிறார்கள்.  இந்த உதவி வரப்பிரசாதங்கள், பரஸ்பர நேசத்தை வளர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையைப் பேணவும், குழந்தைகளுக்கு வேதக் கல்வி வழங்கவும், திருமண வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தாங்கிக் கொள்ளவும் அவசியமானவை.