முன்னுரை - ஞான உபதேசக் கோர்வை

விசுவாச சத்தியங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை. நம் சொந்த அறிவால் அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்வது இயலாத காரியம். தமத்திரித்துவத்தை முழுமையாகப் புரிந்து கொண்டவர் யார்? வரப்பிரசாதத்தின் செயலை யார் அறிந்து கொண்டனர்? இதை அறிய வேண்டுமென்று விரும்புவது சரியான காரியமா? “உன் சுபாவத்துக்கு மேலான காரியங்களை நீ தேடாதே“” (சர்வப்.3:22).

“நமக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள் எல்லாம் போதிப்பதற்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும், நீதிநெறியில் நடத்துவதற்கும் பிரயோஜனமுள்ளது” (2 திமோ.3:16). நாம் எதற்காக படைக்கப்பட்டுள் ளோம்? எதை நோக்கியது நம் இவ்வுலக வாழ்க்கை? இதன்பின் நடக்கக் கூடியது என்ன, அதற்கு எவ்வாறு தயார் செய்வது என்பதைப் பற்றிய அறிவு இல்லாமல் நம்மால் எப்படி இவ்வுலகில் வாழ முடியும்? விசுவசித்து ஞான ஸ்நானம் பெறுபவன் இரட்சணியம் அடைவான், விசுவசியாதவனோ தண்டனைத் தீர்வையிடப்படுவான் (மாற்.16:16). விசுவாசம் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. நாம் கத்தோலிக்கர்கள். அத்தகைய விசுவாச சத்தி யங்களை நம் சொந்த முயற்சியால் அறிய முடியாது. உண்மைதான், ஆனால் கடவுளே வெளிப்படுத்தியதால் அவற்றை நம்மால் அறிய முடியும். இதுவே சுலபமான முறை. எளிதான வழி. இத்தகைய நம் இரட் சணியத்திற்குத் தேவையான படிப்பினைகளை நாம் எங்கிருந்து கற்றுக் கொள்வது? நமதாண்டவர் இவ்வுலகில் இருந்திருந்தால், அவர் பேசு வதை நாம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மலைப் பிரசங் கத்திலோ, கடற்கரைப் பிரசங்கத்திலோ நாம் இருந்திருந்தால், நம் விசுவா சத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் தேவையானவற்றைக் கேட்டுப் பயன் அடைந்திருப்போம். ஆனால் இன்று? 2000 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் வாழும் நம்மால் இதனை எப்படி அடைய முடியும்? சேசு நாதர் தம்முடைய திருச்சபையின் மூலம் இன்னும் பேசிக் கொண்டிருக் கிறார். சேசுநாதர் தம் ஞான சரீரமாகிய திருச்சபை மூலம் மனுக்குலத் திற்கு அளித்த விசுவாசக் கொள்கைத் திரட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இதைத் தவிர நமக்கு வேறு வழியும் கிடையாது, கதியும் கிடையாது.

எனவேதான் கத்தோலிக்க ஞான உபதேசத்தைக் கற்று அறிய வேண்டியுள்ளது. “சகல சாஸ்திரங்களிலும் ஞான சாஸ்திரமாகிய ஞானோபதேசம், மெய்யாகவே முக்கியமான சாஸ்திரம். ஏனெனில் ஞானோபதேசம் நாம் எதை விசுவசிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும் என்பதைக் கற்பித்து, மோட்சத் துக்குப் போகும் வழியைக் காட்டுகிறது” (பக்கம் 12).

நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஒரு நொடியில் அறிய முடியும். இணையதளத்தின் மூலமாக உலகின் எந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை எளிதில் அறிய முடியும். தேவையில்லாத பல குப்பைகளின் கூடமாய் இருப்பினும் ஒரு சில நல்ல காரியங்களையும் அதில் நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் நம் விசுவாசத்திற்குத் தேவையானவற்றை எங்கே கண்டுபிடிப்பது? அதுவும் தமிழில்? இவ்வுலகில் அவற்றைக் கண்டுபிடிப்பது எவ்வளவு அரிதாகி விட்டது! தப்பறையின் இருள் பெருகியதால், விசுவாசத்தின் ஒளி அகன்று விட்டது. அவ்வொளியை மீண்டும் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி விளக்குத்தண்டின் மேல் ஏற்றும் (மத்.5:15) முயற்சிதான் இப்புத்தகம்.

கடந்த நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தலைசிறந்த இந்த ஞான உபதேச நூல் இப்போது மீண்டும் நம் கைகளில் தவழுவது உண்மையாகவே தேவ வரப்பிரசாதம். கடவுள் நமக்கு வெளிப்படுத்திய காரியங்களை அழகிய முறையில் தொகுத்துத் தந்திருக்கிற குருக்களுக்கு தமிழகக் கத்தோலிக்கர்களாகிய நாம் நித்தியத்திற்கும் கடமைப் பட்டிருக்கிறோம். அதனை மறுபதிப்பு செய்துள்ள மாதா அப்போஸ்தலர்கள் சபையினருக்கு என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இதை அநேகர் பயன்படுத்தி, தங்கள் விசுவாசத்தை அறிந்து கொள்ளவும், அதை உலகெங்கும் பரப்பவும் தேவையான வரப்பிர சாதத்தை தேவ அன்னை நமக்கு அளிப்பார்களாக. 

Benedicamஷீs Domino.

சுவாமி தெரேசியன் பாபு.