நற்கருணைக்குரிய மரியாதை பகுதி-4

7. அப்பத்துண்டு துணுக்குகள் இவை பற்றி இன்று குருக்கள் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டு எதுவும் பயன்படுத்தாமல் நன்மை கொடுப்பது. சாதாரணமாகி விட்டது. தட்டில் துணுக்குகள் காணப்பட்டால் அவற்றை மரியாதையோடு விரலால் சேகரித்து இரசத்தோடு அல்லது தண்ணீரோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும். குருக்கள் சிலர் இத்துணுக்குகளைச் சேகரிப்பதைப் பார்க்கும்போது அச்சிறு துண்டுகளிலும் ஆண்டவருடைய திருஉடல் உண்டு என்று நம்புகிறார்களா என்று கேட்கத் தோன்றும். அப்பங்களை ஆண்டவர் பருகச் செய்த புதுமையின்போது, மிகுந்திருந்த துண்டுகளைச் சேகரிக்கச் சொன்னது. உணவு வீணாகக் கூடா என்ற காரணத்துக்காக மட்டுமா? தாம் ஏற்படுத்தப் போகும் நற்கருணை அருட்சாதனத்தை முன் குறித்தது இப்புதுமை என்பது பொதுவான கருத்து. அப்படியானால் நற்கருணை - அப்பத்துண்டுகளும் சேகரிக்கப்பட வேண்டும் - மரியாதையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆண்டவருடைய மனதில் இருந்திருக்கக் கூடாதா? அப்படி ஒன்றுமில்லை என்றாலும், ஒவ்வொரு சிறு துண்டிலும் இயேசுவின் உடல் இருக்கிறது என்பதே திருச்சபையின் கருத்து. அப்பத் துண்டுகளைப் பாத்திரத் துணியால் துடைத்துச் சேகரிக்கும் குருக்கள் உளர். அப்படிச் செய்யும்போது துணியில் அப்பத் துண்டுகளை ஒட்டிக் கொள்ளக்கூடாதா? அவற்றின் கதிஎன்ன?

8. கோயிலில் பேசுதல் பூசை முடிந்த பின் ஆண்டவர் கோவிலை விட்டுப் போவதில்லை என்பதையும் உணராமல் அவர் எதிரிலேயே பலவிதமான பேச்சுகள் நடத்துபவர் இல்லாமல் இல்லை. ஒரு கவர்னர், முதலமைச்சர் போன்ற பெரிய மனிதர்கள் சந்நிதியில் செய்யத்துணியாததை மன்னாதி மன்னர் முன்னிலையில் செய்வது மரியாதையா? பூசை நேரத்தில் செபங்களைக் குருக்களும் சரி, மக்களும் சரி, சரியான கவனம் செலுத்தாமல் மடமடவென்று சொல்வதும் மரியாதைக்குறையேயன்றி வேறென்ன? இதுபோன்ற வேறு அவமரியாதைச் செயல்களும் உள்ளன. இவை எல்லாம் நற்கருணையில் உள்ள விசுவாசக் குறைவைத்தான் காட்டுகின்றன. இவையெல்லாம் நற்கருணையின் பெரிய விரோதியாகிய சாத்தான் செயலால் அன்றி வேறு எங்னம் நடக்க முடியும். இவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நற்கருணையில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டுள்ளவர்கள் கடமை என உணர்வோமா?

நன்றி : சீயோன் குரல்

நன்றி : சகோதரர் திரு.பிரான்சிஸ் சேவியர்..

உண்மையிலே அனைவரும் சிந்திக்கவேண்டிய மற்றும் உடனே செயல்படுத்தவேண்டிய பதிவு. இது கத்தோலிக்கர் அனைவருக்கும் பொருந்தும்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !