பாத்திமா காட்சிகள் பகுதி- 32

பலவித தடைகளைக்குப் பின் ஆகஸ்ட் 13-க்கு பதிலாக ஆகஸ்ட் 19 நடைபெற்ற அன்னையின் நான்காம் காட்சி...

ஆகஸ்ட் மாதம் 19- நாள் பிற்பகல். காலநிலை மிக நன்றாய் இருந்தது. ஆட்சித்தலைமையிடத்தில் அனுபவித்த கஷ்ட்டங்களில் இருந்து விடுபட்டது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அன்று ஜஸிந்தா ஆடு மேய்க்கச்செல்லவில்லை. அவள் அண்ணன் ஜானும், பிரான்சிஸ், லூசியா ஆகிய மூவரும் மதியம் திரும்பி வெயில் சற்று தாழ்ந்த பிறகு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வாலினோஸ் என்ற இடத்திற்கு வந்தார்கள். இந்த வாலினோஸ் மலைச்சாரல் அல்யுஸ்திரலிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் இருக்கும். கபேசா குன்றின் வடக்கு சரிவில் அது இருந்தது. அங்கு சில அஸின்ஹெரா வகை தாழ்ந்த மரங்களும் ஒலிவ மரங்களும் காணப்பட்டன.

குழந்தைகள் வழக்கம்போல் உற்சாகமாக நேரத்தைக் கழித்தார்கள். ஜெபமாலை, விளையாட்டு, மலைச்சாரலில் சுற்றுதல் இப்படியாக மாலை 4 மணி ஆயிற்று.

திடீரென ஆகாயத்தில் ஒரு மாறுதலை லூசியா கண்டாள். அது மழையின் அறிகுறி அல்ல. தேவதாயின் காட்சி தோன்றும் முன் ஆகாயத்தில் காணப்படும் ஒருவகை இறுக்கம். அவள் பிரான்சிஸைப் பார்த்தாள். அவனும் அதே அடையாளத்தை உணர்ந்தான். ஆம்.. தேவ அன்னை தோன்றுவதன் முன்னடையாளம் அதுதான். ஆனால் ஜஸிந்தா அங்கு இல்லையே….

லூசியாவும் பிரான்சிஸும் ஜஸிந்தாவை அழைத்து வரும்படி ஜானைக் கேட்டார்கள். அவனுக்குப் பதிலாக ஆடுகளை தாங்கள் கவனித்துக் கொள்வதாகவும் கூறினர். இவ்வுதவிக்குப் பரிசாக இரண்டு காசுகள் கொடுப்பதாகவும் கூறினர். ஜான் ஒப்புக்கொண்டு ஜஸிந்தாவை கூப்பிட விரைந்தான்.

கொஞ்ச நேரம் ஆயிற்று.. தேவதாய் வரும்முன் காணப்படும் மின்னல் ஒளி வீசியது! அதே சமையம் ஜஸிந்தா அவர்களை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தாள். ஓடி வந்து பெருமூச்சுடன் என்ன, என்ன, என்று கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தாள். அன்னை ஒரு தாழ்வான மரத்தில் மூவருக்கும் தோன்றினார்கள். அதே கனிவு, அதே அன்பு! குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“ உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் “ என்று கேட்டாள் லூசியா.

“ கோவா தா ஈரியாவுக்கு மாதத்தின் 13- நாளில் தொடர்ச்சியாக செல்லுங்கள். ஜெபமாலையை ஒவ்வொரு நாளும் சொல்லி வாருங்கள். கடைசி மாதத்தில் எல்லோரும் நம்பும்படி ஒரு புதுமையைச் செய்வேன் “ என்றார்கள் தேவ அன்னை.

“ கோவா தா ஈரியாவில் மக்கள் போடும் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? ” என்று கேட்டாள் லூசியா.

“ இரு (சூரூபத்) தட்டுகள் செய்ய வேண்டும். ஒரு தட்டை லூசியா, ஜெசிந்தா இன்னும் வேறு இரு சிறுமிகள் வெண்ணாடை தரித்து சுமந்து செல்ல வேண்டும். மற்றொன்றை பிரான்சிஸும், அவனுடன் வேறு மூன்று சிறுவர்களும் வெண்ணாடை அனிந்து சுமந்து வர வேண்டும். இவற்றில் விழும் காணிக்கைப் பணம் ஜெபமாலை மாதா திருநாள் கொண்டாடப்படுவதற்கு. மீதி இருக்கும் பணம் இங்கு கட்டப்பட இருக்கும் ஆலயத்திற்கென இருக்கட்டும் “ என்று மாமரி பதிலளித்தார்கள்.

“ அம்மா, சில நோயாளிகளை நீங்கள் குணமாக்க வேண்டும் “ என்று கேட்டதற்கு, “ இவ்வாண்டில் சிலரைக் குணப்படுத்துவேன் “ என்றார்கள் அன்னை. மேலும் ஆகஸ்ட் 13-ம் நாள் காட்சி நடைபெறாமல் தடுக்கப்பட்டதால், அக்டோபர் மாத அதிசயம் நடக்க இருந்ததை விட மகத்துவம் குறைந்ததாக இருக்கும் “ என்றும் கூறினார்கள்.

பின் முடிவில், “ ஜெபியுங்கள், அதிகமாக ஜெபியுங்கள், பாவிகளுக்காக ஒறுத்தல் தவமுயற்சிகளை செய்யுங்கள். எனென்றால் தங்களுக்காக ஜெபிக்கவும், ஒறுத்தல் செய்யவும் ஒருவரும் இல்லாததால் அநேக ஆன்மாக்கள் நரகத்திற்கு செல்கிறார்கள் “ என்று கூறி கீழ்த்திசையில் அன்னை மறைந்தார்கள்.

மூன்று குழந்தைகளும் இக்காட்சியின் பரவசத்திலிருந்து விடுபட சற்று நேரம் ஆயிற்று. விடுபட்டதும் அம்மரத்தின் கிளைகளை ஞாபகச் சின்னமாக ஒடித்து  எடுத்துக்கொண்டு  ஆடுகளுடன் வீடு திரும்பினார்கள். அக்கிளைகள் எங்கும் காணாத இனிய நறுமணம் வீசியதை இரண்டு வீட்டாருமே கண்டனர். மரிய ரோசா இவ்வாசனையை ஒப்புக்கொண்டாலும், தன் மகள் லூசியாவிற்கு தேவதாய் காட்சி அருள்வதை ஏனோ இன்னும் நம்பாமலே இருந்தாள்…

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், பாத்திமா காட்சிகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, சகோ. ஜேசுராஜ் : 9894398144.

சிந்தனை : இந்த பாத்திமா சிறுமிகள் தாங்கள் மகிழ்ச்சியாக விளையாடும் போதும் ஜெபமாலை ஜெபித்த பின்பே விளையாடுகிறார்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு ஜெபமாலை ஜெபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறோமா? மாதா சிறுமிகளிடம் கேட்டுக்கொண்டது போல் நாமும் தவறாமல் ஜெபமாலை ஜெபித்து வருவோமா?

நகராட்சி தலைவர் மற்றும் அப்பங்குகுரு இவர்களின் விசுவாசக்குறைவினால் குறிப்பாக நகராட்சியால் தடுக்கப்பட்ட அன்னையின் காட்சிக்கு கடவுள் தரும் தண்டனையை பார்த்தீர்களா… அந்த அக்டோபர் 13 காட்சியே இந்த அளவுக்கு இருந்ததென்றால்… முழு மகத்துவத்துடன் அக்டோபர் 13 காட்சி நடைபெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்???? அதே போல் விசுவாசம் இல்லாத இடத்தில் கடவுள் எந்த அற்புதத்தையும் செய்ய மாட்டார்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !