அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-11

தேவ மாதாவால் மிகவும் நேசிக்கப்பட்ட புனித சந்தியாகப்பரின் வாழ்க்கையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பார்ப்போமா?

தேவமாதாவின் அன்பைப் விசேசமாக பெற்றிருந்தார் அருட்புனிதர் சந்தியாகப்பர். மற்றும் முதல் கிறிஸ்தவ கோவிலை அன்னையில் ஆனையால் அன்னைக்காக முதலில் முதல்கோவிலை கட்டிய பெருமைக்கு உரியவர் நம் அருமை சந்தியாகப்பர் :

ஸ்பெயின் தேசத்தில் புனித சந்தியாகப்பருக்கு (St.James, Greater) காட்சி :

தேவமாதாவின் விசேச அன்பிற்குரியவர் புனித சந்தியாகப்பர். அவர் அன்னையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த்தே இதற்கு காரணம். இதோ பாருங்கள் அன்னை ஜெருசலேமில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தபோதே அற்புதவிதமாக புனித சந்தியாகப்பருக்கு திருக்காட்சி கொடுத்தார். இது வேறு எந்த சீடருக்கும் கிடைக்காத பாக்கியம். அதே போல் முதல் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டதும் புனித சந்தியாகப்ரின் அருட்கரங்களால்தான் அதுவும் அன்னையின் உத்தரவுக்கு ஏற்ப தேவமாதாவுக்காக கட்டப்பட்ட முதல் ஆலயமும் அதுதான். வேதசாட்சி மரணமும் அவருக்கு அன்னையின் முன்னறிவிப்பின்படியே நடந்தது என்றால் அவையெல்லாம் ஆண்டவராகிய இயேசுவின் விருப்பபடியே நடக்கிறது.

அந்த நிகழ்வைத்தான் இப்போது பார்க்க இருக்கிறீர்கள். ஜெருசலேமில் இருந்து தொலைதூர நாடான ஸ்பெயின் தேசத்திற்கு (5046 கி.மீ) செல்கிறார் தூய சந்தியாகப்பர். இதில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது..

ஆண்டவர் இயேசுவின் “ உலகின் எல்லை வரை சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் “ என்ற ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார் நம் சந்தியாகப்பர். உலகின் எல்லை என்று அழைக்கப்பட்ட நாடுதான் ஸ்பெயின் தேசம்.

அந்த காட்சி இதோ !

ஸ்பெயின் தேசத்தில் போதிக்கும்போது ஒரு பகுதியினர் அவர் போதனையை ஏற்றுக்கொண்டனர். இன்னொரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே வேதனையில் ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார் புனிதர் தன் சீடர்களோடு,

கிபி 40-ல் ஜனவரி 2-ல் புனித சந்தியாகப்பர் தன் சீடர்களோடு ஸ்பெயின் தேசத்தின் சரகோசா என்ற இடத்தில் ஓடிய ஈப்ரோ நதி கரையில் ஜெபத்தில் ஆழ்ந்திருந்த போது ஆகாயத்தில் இருந்து மிகவும் இனிமையான குரல்களில் பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டு ஆகாயத்தை பார்க்கிறார் ஆகாயம் முழுவதும் ஒளி வெள்ளத்தால் நிறைந்து கானப்படுவதையும் அனேக சம்மனசுக்கள் இனிமையான  பாடல்களை  கொண்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை பார்க்கிறார். அவர்கள் ஒரு அடிக்கல்லை சுமந்து வருவதையும், அந்த அடிக்கல்லில் பரலோகத்திற்கும், பூலகத்திற்கும் ராணி தேவ மாதா வீற்றிருப்பதையும் பார்க்கிறார். அன்னையின் கையில் ஒரு 6 அடி உயர தூண் இருக்கிறது. அந்த தூணில் அன்னையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்து. அன்னையை கண்டதும் ஆச்சரியத்திலும் எண்ணில்லா சந்தோசத்திலும் மிதந்த நம் அருமை பாதுகாவலர் எழுந்து அன்னையின் பாதத்தில் வீழ்ந்து வணங்குகிறார். அவர் ஆச்சரியத்திற்கு காரணம் அந்த சமையத்தில் தேவமாதா ஜெருசலேமில் உயிரோடு வாழ்ந்து வருகிறார். அன்னை உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதேகாட்சி கொடுத்தது  நம் புனிதருக்கு மட்டுமாகத்தான் இருந்திருக்கும்.

புனிதரும் அவர் சீடர்களும் மகிழ்ச்சி வெள்ளத்திலும், மகிமை வெள்ளத்திலும் இருக்கும் போது நம் புனிதருக்கு அன்னை இரண்டு செய்திகளை கொடுக்கிறாள்.

கையில் வைத்திருந்த 6 அடி மாதா உருவம் பொறிக்கப்பட்ட தூணை புனிதரிடம் கொடுத்து ஆண்டவர் இயேசுவை மகிமை படுத்த அன்னையின் பெயரில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று பணிக்கிறார். ஆலயம் கட்டி முடிக்கும் வரை புனிதர் அங்கேயே இருந்து நற்செய்திப்பணி புரிய வேண்டும்..

ஆலயம் கட்டி முடித்ததும் ஜெருசலேம் திரும்ப வேண்டும்... அங்கு அவர்  வேத சாட்சியாக இறைவன் இயேசுவுக்காக மரிக்க வேண்டும்..

முதல் செய்தி மகிழ்ச்சியின் செய்தி இரண்டாவது செய்தி மகிமையின் செய்தி...

அதற்காகதானே ஏங்கி கொண்டிருந்தார்.. மகிழ்ச்சியில் மீண்டும் அன்னையின் பாதத்தில் வீழ்ந்து வணங்குகிறார்..

அன்னையிடம் புனிதர் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தான் வேதசாட்சியாக மரிக்கும் போது தனக்கு துணையாக அன்னை வர வேண்டும் என்பதே...

“துன்புற்றோருக்கு தேற்றரவே” என்று அன்னையை புனிதர் வாழ்த்தியதும் இப்போதே...

தேவ அன்னை புனிதரின் ஆன்மாவை கையில் ஏந்தி இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க வரம் பெற்றவரும் புனித சந்தியாகப்பரே !

ஜெபம்: புனித சந்தியாகப்பரே நீர் மகிழ்ச்சியை மட்டும் ஏற்கவில்லை பெரும் துன்பக்கலத்தை  இயேசுவுக்காய் சுமக்க ஆவலோடும் ஆசையோடும் ஏற்றீரே! இதோ எங்களுக்கு இன்பம், சந்தோசம் மட்டுமே பிடித்திருக்கிறது. துன்பத்தை கடுகளவு கூட சுமக்க நாங்கள் தயாராக இல்லை. “சிலுவையிலேதான் மீட்சியுண்டு “ என்று எங்களுக்கு தெறியவில்லை. இயேசுவுக்காக எவ்வளவோ செய்தீர் மற்றும் எதையும் செய்தீர். உம்மை பின் பற்றி நாங்களும் இயேசுவுக்காய் துன்பக் கலத்தை ஏற்றுக்கொண்டு அவர் சிலுவையை வாழ்க்கையில் சிறிது காலமாவது அவருக்காக சுமக்க எங்களுக்கு அவரிடமிருந்து வரம் பெற்றுதாரும். ஆமென்

அவரை பின் பற்றி நாமும் நமக்கு வரும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை பிறருக்காக அவர்கள் மனந்திரும்ப, மனம்திருந்த இறைவனிடம் ஒப்புக்கொடுப்போமா ?. இதன் மூலம் நாமும் மனம் திரும்பலாம் பிறரையிம் மனம் திரும்ப வைக்கலாம்.

மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !