உத்தரியம் - பாகம் 14 - மரண வேளையில் மனமாற்றத்திகு உதவிய உத்தரியம்!

உத்தரியத்தினால் அன்னையின் வாயிலாக நிகழ்ந்த முதல் அற்புதமானது, நமதன்னை உத்தரியத்தினை புனித சைமன் ஸ்டாக்கிற்கு வழங்கிய அதே நாளில் நிகழ்ந்தது.

நமதன்னை உத்தரியத்தினை புனிதருக்கு வழங்கிய அதே நாளில், லின்றன் நகரினைச் சேர்ந்த பீட்டர் என்ற பிரபுவால், மரணப் படுக்கையில் இருந்த அவனது சகோதரனுக்கு உதவுவதற்காக, புனிதர் அவசரமாக அழைக்கப்பட்டார். மரணப்படுக்கையில் இருந்த அம்மனிதன் இறை நம்பிக்கையின்றி கடவுளின் நட்பை விட்டு வெகு தொலைவில் இருந்தான்.

புனிதரும் அவனுக்கு உதவுவதற்காக உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்றவுடன், அன்னை அவருக்கு வழங்கியிருந்த உத்தரியத்தினை அந்த மனிதனின் மேல் வைத்து, பரிசுத்த தேவதாயரிடம் அவர்கள் அருளியிருந்த வாகுறுதியினை நிறைவேற்றி வைக்குமாறு உருக்கமுடன் மன்றாடினார்.

சிறிது நேரத்திலேயே அம்மனிதன் தனது பாவங்களை நினைத்து மனம்வருந்தி, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, மாதாவின் பேறுபலன்களின் வாயிலாகப் பெற்ற கடவுளின் இரக்கத்தினால், அவரது நண்பனாக இறந்தான்.

அந்த இரவு அவன் தனது சகோதரனுக்குத் தோன்றி, “நான் மிகவும் சக்தியுடைத்தான இராக்கினியால், என்னருகில் இருந்த அம்மனிதனின் உத்தரியத்தினை கேடயமாகக் கொண்டு மீட்கப்பட்டேன்” என்று வெளிப்படுத்தினான்.

*****சிந்தனை*****           

அன்னையின் இரக்கத்தின் ஆடையான உத்தரியத்தினை மிகவும் பக்தியுடன் அணிந்திருந்தால், நம்மை நோக்கி எய்யப்படும் அம்புகள் போன்ற சாத்தானின் சூழ்ச்சிகள் நம்மை எதுவும் செய்யாதவாறு பாதுகாப்பு கவசமாக செயல்படுகின்றது.

ஒரு ஆன்மாவின் மரண நேரத்தில் சாத்தான் எப்படியாவது, அதனை நரகத்திற்கு கொண்டு செல்லவேண்டுமென முயற்சி எடுக்கிறது, அந்த ஆன்மா உலகில் வாழ்ந்த நாட்களில் செய்த பாவங்களை வரிசையாக அதன் கண் முன்னால் காண்பித்து, மோட்சம் அதற்கு கிடைக்காது போன்ற ஒரு அவ நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றது.

ஆனால், நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திலும் நாம் பரிசுத்த தேவதாயரை நமது மரண வேளையில் துணைக்கு அழைக்கின்றோம். நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு அருள் நிறை மந்திரமும் சாத்தானுக்கு எதிரான ஆயுதமாகவும், நாம் அணிந்திருக்கும் உத்தரியம் நம்மை பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கும்.

எப்பொழுதும் பக்தியுடன் உத்தரியம் அணிந்திருக்கும் ஒரு ஆன்மாவின் மரண வேளையில், பரிசுத்த தேவதாயார் அதற்குத் தேவையான அருளுதவிகளை தமத்திருத்துவத்திடம் மன்றாடி பெற்றுத் தருகிறார்கள். குறிப்பாக நல்ல பாவ மன்னிப்பு, மற்றும் குருவானவரின் அருகாமை என அவ்வான்மாவிற்கு தேவையானவற்றை உறுதி செய்கின்றார்கள்.

நாமும் அன்னையின் இரக்கத்தின் ஆடையின் பாதுகாப்பில் நமது கொண்டு செல்ல தயாரா????

இயேசுவுக்கே புகழ்!!!! மாமரித்தாயே வாழ்க!!!!