தேவ அன்னை ஏன் அழுகிறார்கள்?

ஒரு தாய் எதற்காக அழுவாள்? தன் பிள்ளைகளை நினைத்துத் தான் அழுவாள். நம்மை நினைத்தே நம் தேவ அன்னை அழுகிறார்கள். நாம் இத்தாய் கூறிய செய்திகளை அலட்சியம் செய்கிறோம். போதிய கவனம் காட்டுவதில்லை.

நம் அன்னை கேட்டபடி கடவுள் பக்கம் திரும்பி ஜெபமாலை ஜெபித்து, உத்தரியம் அணிந்து தவ முயற்சிகள் செய்யவில்லை. இதனால் நமக்கு நேரிடவிருக்கும் துன்பங்களையும், விசேஷமாக ஆன்ம கேட்டையும், நரக ஆக்கினையையும் நினைத்தே நம் அன்னை அழ முடியும்.

இத்தாயின் கண்ணீரை நாமாவது துடைப் போம். நம் தாயை நாம் அழவிடக் கூடாது. அவர்கள் கூறும் செய்தியைக் கவனத்துடன் ஏற்று, அதன்படி நல்ல வாழ்வு வாழ இப்போதே துவக்குவோம். அருள் நிறைந்த மரியாயே வாழ்க!

தேவதாயின் கண்ணீர்.

தேவதாய் பாத்திமாவில் காட்சி கொடுத்த பாவனையாக செதுக்கப்பட்டுள்ள முதல் சுரூபங்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று 1972 ஜூலை மாதத்திலிருந்து நியூ ஆர்லின்ஸ் நகரில் 16 தடவைகள் கண்ணீர் சிந்தி அழுது கொண்டிருந்ததாகவும், அந்த நீர் உண்மையான மானிடக் கண்ணீராக இருக்கிறதாகவும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் ஐயத்திற்கு இடமில்லாதபடி நிச்சயிக்கப்பட்டுள்ளது.