செபமாலையின் 15 வாக்குறுதிகள்!

நம் பரிசுத்த தேவ மாதா தூய தோமினிக் மற்றும் வாழ்த்தப்பட்ட ஆலன் ரோச் வழியாக வாக்களித்த செபமாலையின் 15 வாக்குறுதிகள்.

1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.

2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.

3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.

4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர்.இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.

5. மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் செபமாலை செபிப்பவன் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன் அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான்.

6. செபமாலை செபிப்பவர் பரிசுத்த வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை நோக்கி அதனை உயர்த்துகிறது.

7.செபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிக்கிறேன்.

8. செபமாலை நரகத்திற்க்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.

9. செபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவன் திருச்சபையின் திருவருட் சாதனங்களை பெறாமல் சாகான்.

10. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து தங்கள் தேவைகளில் உதவி பெறுவர்.

11. செபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது இறைமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளேன்.

12. செபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில விசேச வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

13. செபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.

14. என் செபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.

15. என் செபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும்.

மாண்புயர் ஏழு தூண்களுமாய் பலிபீடமுமாய் அலங்கரித்தாயே  எங்கள் மாமரித்தாயே  வாழ்க!!!