மெலானிக்குக் காட்டப்பட்ட உத்தரிக்கிற ஸ்தலக் காட்சி!

1846-ல் பிரான்ஸ் நாட்டிலுள்ள சலேத் என்னும் மலையில் மாதாவின் காட்சி பெற்றவள் மெலானி. இவள் சிறந்த காட்சித் தியானியும் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாயுமிருந்தாள். அநேக காட்சிகள் அவளுக்கு அருளப்பட்டன.அவற்றுள் ஒன்று உத்தரிக்கிற ஸ்தலத்திலன் காட்சி. அதை அவளுடைய வார்த்தைகளிலேயே இங்கு தருகிறோம்.

மெலானி சொல்கிறார் :

ஒரு நாள் நான் நேசித்த எல்லாவற்றுக்கும் மேலான நன்மையின் அளவில்லாத இரக்கத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் சாஷ்டாங்கமாக விழுந்து முகத்தைத் தரையில் பதித்தபடி ஜெபிக்கையில், அது எப்படி நடந்ததென்று தெரியவில்லை, ஒரு வகையான உறக்க மயக்கத்தை உணர்ந்தேன். அது ஒரு கனவு போலிருந்தது. என் காவல் சம்மனசைக் கண்டேன்.

அவர் என்னை நோக்கி சகோதரி என்னுடன் வா. சர்வேசுரனின் சிநேகிதர்களாயிருக்கிற ஆன்மாக்களை உனக்குக் காண்பிப்பேன். அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். ஆனால் அவரை அடைந்துகொள்ளும் மகிழ்ச்சியைப் பெற முடியாமலிருக்கிறார்கள். ஏனென்றால் பாவத்தால் அழுக்கடைந்திருக்கிறார்கள். அவர்கள் சுத்திகரிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆயினும் நீ அவர்களுக்காக நித்திய பிதாவுக்கு, சேசு கிறிஸ்துவின் திரு இரத்தத்தையும் பாடுகளையும் ஒப்புக்கொடுக்க மனதாயிருந்தால் அவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு கடவுளுடன் ஐக்கியமாவார்கள் என்று கூறினார்.

திடீரென நாங்கள் இருவரும் உயரே பறந்ததுபோலிருந்தது. பின் அப்படியே கீழிறங்கினோம். பூமி திறந்தது. நாங்கள் பூமிக்குள் ஒரு இருண்ட குகைக்குள் புகுந்தோம். அங்கே ஒரு பயங்கரக் காட்சி!எல்லா வகையான துண்பங்களும் வாதைகளும் அங்கே காணப்பட்டன. திரவ நெருப்பு சுவாலைகளுடன் கலந்து காணப்பட்டது. பசியின் பயங்கர கொடுமையும் தாகத்தின் கொடுமையும் திருப்திப் படுத்தப்படாத ஆசைகளின் கொடுமையும் இருந்தன.

இந்த ஆன்மாக்கள் பெரும் கூட்டமாய் மிகவும் கடுமையான வேதனைகளுக்குள் அமிழ்ந்தியிருந்தார்கள். அவர்களில் ஒரே மாதிரியாக வேதனைப்பட்ட இரண்டு ஆன்மாக்களை நான் காண முடியவில்லை, எல்லாத் தண்டனைகளும் வேறு வேறாகவே இருந்தன.

கட்டிக்கொள்ளப்பட்ட பாவங்களின் தீய நோக்கத்திற்குத் தக்கபடியும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அக்காட்சியை என்னால் பார்க்க சகிக்கவில்லை. நான் ஜெபித்தேன். தங்களின் தண்டனைகளை ஏற்றுக்கொண்ட அந்த எல்லாப் புனித ஆன்மாக்களுக்காகவும் ஜெபித்து வேண்டிக் கொண்டேன். சேசுகிறுஸ்துவின் பாடுகளாலும், மரணத்தாலும் அவ்வான்மாக்களுக்கு சற்று ஆறுதலலிக்க வேண்டுமென்று கேட்டேன். மானிட இரட்சிப்பின் அலுவலில் உடன் பங்காளியாயிருந்த மரியாயின் அன்பினிமித்தம் மன்றாடினேன்.

அதே சமயத்தில் ஆண்டவரின் தூதர்  அங்கு வரக் கண்டேன். அவர் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற செம்மறியின் இரத்தம் நிறைந்த பாத்திரத்தைக் கொண்டு வந்தார். அதில் சில துளிகளை நெருப்பின் சுவாலைகள்மேல் தெளித்தார். உடனே அவை அவிந்தன. பின், விசுவாசிகளின் உதவியை எதிர்பார்த்திருந்த ஆன்மாக்களின் மேல் தெளித்தார். அவர்கள் விடுதலையடைந்து சர்வேசுரனின் அரவனைப்பிற்குள் பறந்து சென்றார்கள்...

ஓ! தேவநீதியின் கோர கொடிய அவஸ்தைகளையும் பயங்கரத்திற்குரிய விழுங்கும் நெருப்பு  சுவாலைகளையும் பாவிகளும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களும் கண்டுபிடித்தாலல்லோ தாவிளை!மறுக்கப்படாத ஒவ்வொரு ஆசாபாசமும் அதற்குரிய தண்டனையைக் கொண்டிருக்கிறது. தங்கள் வாய்கள் நிரம்பிய திரவ நெருப்பைப் பருகிய பெருந்தொகையான ஆன்மாக்களை நான் கண்டேன். அவர்கள் சர்வேசுரனுடைய ஆராதனைக்குரிய நாமத்தையும், நற்கருணை தேவ திரவிய அனுமானத்தையும், அமலோற்பவ கன்னி மரியாயையும் தூஷணித்தவர்களே.

எல்லா ஆன்மாக்களும் நெருப்பால் சுத்திகரிக்கப்படவில்லை. நீடிக்கிற வாதையால் வேதனைப்படுகிற சில ஆத்துமங்களைப் பார்த்தேன். எல்லா வகையான வேதனைகளும் அங்கே உள்ளன. எல்லா மாதிரியிலும் எல்லாத் தன்மைகளிலும் உள்ளன. நான் இப்படிச் சிந்தித்தேன். கடவுள் நீதி என்னும் தம் இலட்சணம் மகிமைப்படுத்தப்பட விரும்புகிறார் என்று. நான் கட்டிக் கொண்ட எல்லாப் பாவங்களின் கறைகளையும் பரிகரிப்பதற்கு நான் இந்த இடத்திற்கு வருவேன் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

அன்பான சகோதர சகோதரிகளே அன்னையின் காட்சியைப் பெற்ற மெலானியே நான் அந்த இடத்திற்கு போவேன் என்று சொன்னால் நம் நிலமை என்ன சிந்திப்போம் மனமாற்றம் அடைவோம். பாம்பை கண்டால் விலகி ஓடுவதைப் போல பாவத்தைக் கண்டால் விலகி ஓடுவோம்.