எனக்கு வசீகரம் செய்யப்பட்டிருக்கும் சகல ஆத்துமங்களும்

ஜோசபா, என்னுடன் மிக நெருக்கமான ஒன்றிப்பில் வாழும்படி அழைக்கப்பட்டுள்ள குருக்கள், துறவிகள், கன்னியருக்கென நான் சொல்லப் போவதை இப்பொழுது எழுது. என்னுடைய விருப்பங்களை அறிந்து என் மகிழ்ச்சிகளிலும், துயரங்களிலும் பங்கு பெறுவது அவர்களுடைய கடமை.

இடையூறு, துன்பம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்கள் என்னுடைய எண்ணங்களுக்காக உழைக்க வேண்டும். செபத்தினாலும், தவத்தினாலும் அவர்கள் பற்பல ஆத்துமங்களுக்காக நிந்தைப் பரிகாரம் செய்வார்கள்.
சிறப்பாக அவர்கள் என்னுடன் அதிக நெருக்கமாய் ஒன்றித்திருக்க வேண்டும். ஒருபோதும் என்னை கைவிட்டு விடக்கூடாது. என்னால் தெரிந்தெடுக்கப்பட்ட ஆத்துமங்களாகிய அவர்களிடம் நான் ஆறுதலையும் நட்பையும் எதிர்பார்க்கிறேன் என்பதை சிலர் மறந்து போகிறார்கள்.

என் இருதயத்தில் அவர்கள் நேசத்துடன் ஒன்றித்து ஆத்துமங்களுக்கு சத்தியமும், ஒளியும், மன்னிப்பும் பெற்றுக் கொடுக்க வேண்டும். நான் பெறும் அவமானங்களை அவர்கள் துயரத்துடன் காண்கையில், இந்த அவமானங்களுக்குப் பரிகாரம் செய்யும் எண்ணத்துடன் எனது திராட்சைத் தோட்டத்தில் உழைக்க தங்களைக் கையளிக்க அவர்கள் தூண்டப்படுகையில், அவர்கள் முழு நம்பிக்கையுடன் உழைப்பார்களாக. ஏனெனில், நான் அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாது, அவர்கள் கேட்பது யாவும் கொடுக்கப்படும்.

ஆதலால் அனைவரும் என்னுடன் ஒன்றித்து வாழ, என்னுடன் உரையாட, என்னை கலந்தாலோசிக்க முயன்று என் இருதயத்தைப் பற்றி நன்கு அறிய முயல்வார்களாக. எனது பலன்களுடன் தங்கள் செயல்களை அவர்கள் ஒன்றித்து, என் இரத்தத்தில் தோய்த்து ஆத்துமங்களை இரட்சிக்கவும் என் மகிமையைப் பரப்பவும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்வார்களாக.

அவர்கள் தங்களை சிறுமைப்படுத்தும் காரியங்களில் தலையிடலாகாது. ஆனால் என் இரத்தத்திலும் பலன்களிலும் அவர்கள் ஒருமித்திருப்பதை உணர்ந்து அகமகிழட்டும். அவர்கள் தன்னம்பிக்கை கொண்டிருப்பார்களானால், அவர்கள் ஒன்றுமே சாதிக்க மாட்டார்கள் அல்லது குறைவாகவே செய்வார்கள். ஆனால் என்னுடன் ஒத்துழைப்பவர்களாக என் பேராலும் என் மகிமைக்காகவும் உழைப்பார்களானால் அவர்கள் வல்லமையுள்ளவர்களாகிறார்கள்.

நிந்தைப் பரிகாரம் செய்ய அவர்கள் தங்களுக்குள்ள ஆசையைப் புதுப்பித்து, தெய்வீக அரசருடைய வருகைக்காக அதாவது எல்லோரும் என்னை அரசராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுதல் செய்வார்களாக.

அவர்கள் எல்லா பயத்தையும் அகற்றி, என்மேல் நம்பிக்கை கொள்வார்களாக.

பாவிகள் மேல் மிகுந்த நேசத்தை அவர்கள் கொண்டிருப்பார்களாக. இரக்கமுள்ள இருதயத்துடன் பாவிகளுக்காக செபித்து அவர்களை அமைதியுடன் நடத்த வேண்டும்.

அவர்களில் அனைத்து உலகமும் என் நன்மைத் - தனத்தையும் நேசத்தையும் இரக்கத்தையும் பார்க்கட்டும்.

செபம், தவம் என்மேல் நம்பிக்கை இவற்றுடனும் எப்பொழுதும் தங்களுடனிருக்கும் என் இருதய வல்லமை அதன் நன்மைத்தனம் இவற்றின் பேராலும் அவர்கள் தங்கள் சீடத்துவப் பணிகளில் முன்னேறிச் செல்வார்களாக.

என் அப்போஸ்தல சீடர்கள் ஏழைகள், படிப்பறிவற்றவர்கள், ஆனால் கடவுளுடைய ஞானமும், செல்வமும் நிறைந்தவர்கள். "உமது பேரால் நாங்கள் உழைத்து வல்லமையுள்ளவராவோம்" என்பதே அவர்களின் விருது வாக்கியம்.

எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆத்துமங்களிலிருந்து நான் இந்த மூன்று காரியங்களைக் கேட்கிறேன்.

நிந்தைப்பரிகாரம்: அதாவது பரிகாரம் செய்யும் இறைவனோடு அவர்கள் ஒன்றித்து வாழ வேண்டும். அவருக்காக, அவருடன், அவரால் பரிகாரம் செய்யும் நோக்கத்துடன் அவருடைய உணர்ச்சிகளுடனும், ஆசிகளுடனும் மிக ஒன்றித்து உழைக்க வேண்டும்.

நேசம்: முழுமையான நேசம் கொண்டவரும், தம்மை தம் படைப்புகளுக்கு சமமாக வைப்பவரும் "என்னைத் தனியாக விட்டுப் போகாதீர்கள். உங்கள் நேசத்தை எனக்குக் கொடுங்கள்" எனக் கேட்பவருமான இயேசுவுடன் ஒன்றித்து வாழ்தல்.

நம்பிக்கை: நன்மைத்தனமும், இரக்கமுமான அவரிடம் நம்பிக்கை கொள்ளுதல். அவருடன் வாழ்ந்து அவரது இருதயத்தை அறிந்து, அவர் தம்மிடமிருந்து அனைத்தையும் எதிர்பார்க்கும்படி தேர்ந்தெடுப்பவர்களை சிறப்பான விதமாய் அழைக்கும் அவரிடம் முழு நம்பிக்கை கொண்டு வாழ்தல்.