திருச்சபைக் கட்டளைகள்

1. ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப் பூசைகாண்கிறது.

2. வருஷத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.

4. வெள்ளிக்கிழமை முதலிய சுத்த போசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது.

5. விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கலியாணஞ் செய்யாதிருக்கிறது.

6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.

முதல்கட்டளை ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் சரியான முகாந்தரம் இல்லாமல் பூசை காணாமல் தவறிப் போகிறது சாவான பாவமாகும்.

நம் இந்திய நாட்டில் வழங்கும் கடன் திருநாட்கள் : 1. சேசுநாதர் பிறந்த திருநாள், 2. தேவ மாதா பரலோகத்திற்கு ஆரோபணமானதிருநாள்3. தேவ நற்கருணைத் திருநாள் ஆகிய மூன்றுமாகும்.

இரண்டாம், மூன்றாம் கட்டளைகள்

வருடத்திற்கு ஒரு முறையாவது புத்தி விபரம் தெரிந்த சகல கிறீஸ்தவர்களும் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, பாஸ்கு காலத்தில் தேவ நற்கருணை வாங்க வேண்டுமென்று இக்கட்டளைகள் கண்டிப்பாய்க் கற்பிக்கின்றன.
(மாதத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வது ஆத்துமம் மேன்மேலும் பரிசுத்தமடைய உதவுகிறது; புண்ணியப் பலனைப் பெற்றுத்தருகிறது.

நான்காம் கட்டளை

சுத்தபோசனக் கடனை அனுசரிப்பதற்கு முந்தின இரவு நடுச்சாமம் துவக்கி , குறிக்கப்பட்ட நாளின் நடுச்சாமம் வரை மாம்ச உணவுகளை சாப்பிடாமலிருக்க வேண்டும். (மீன், முட்டை ஆகியவை மாமிசம் கிடையாது.) 14 வயது பூர்த்தியானது முதல் சுத்தபோசனக் கடன் துவங்கும்.

ஒரு வேளை மட்டும் முழுப் போஜனம் சாப்பிடுவது ஒருசந்தி பிடிப்பதாகும். காலையில் சொற்ப ஆகாரமும், மாலையில் சிற்றுணவும் உண்ணலாம். 21 வயது முதற்கொண்டு 60 வயது வரையில் ஒருசந்தி அனுசரிக்க வேண்டிய காலமாகும்.
ஐந்தாம் கட்டளை ஒரு கலியாணத்திற்கு விக்கினம் உண்டு என்று அறிந்த கிறீஸ்தவர்கள் யாவரும் பங்கு சுவாமியாரிடம் அதை வெளிப்படுத்தக் கடமைப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.

ஆறாம் கட்டளை

1. நமது ஞான மேய்ப்பர்களுக்கும், கோவிலுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவிகள்: அந்தந்தப் பங்கு விசாரணையில் ஆயருடைய அனுமதி அல்லது கட்டளைப்படி கற்பிக்கப்பட்ட சந்திப்பு கோயில் வரி, குடும்ப மற்றும் தனி நபர் வரி முதலியவைகளையாவது செலுத்த வேண்டும். 2. நமது ஞான மேய்ப்பர்களுடைய தர்மக் காரியங்கள் அனுகூலம் பெறும்படி செல்வாக்குள்ள பேச்சினாலும், மாதிரிகையாலும், ஜெபத்தாலும் நாம் உதவி செய்ய வேண்டியது.
நரகத்தைத் தவிர்க்கவும், மோட்சத்தை அடையவும் தலையான பாவங்களை விட்டுத் தலையான புண்ணியங்களை அனுசரிக்கும்படி திருச்சபை நம்மை அழைக்கிறது.

தலையான பாவங்கள்

அகங்காரம்
கோபம்
மோகம்
லோபித்தனம்
போசனப்பிரியம்
காய்மகாரம்
சோம்பல்

தலையான புண்ணியங்கள்

தாழ்ச்சி
பொறுமை
கற்பு
உதாரம்
மட்டனம்
பிறர் சிநேகம்
சுறுசுறுப்பு.

நரகத்தைத் தவிர்த்து விட்டு, மோட்சத்தை அடைய நம்முடைய சொந்தப் பலன் போதவே போதாது. நமக்கு வரப்பிரசாதத்தின் அனுக்கிரகம் வேண்டியது. தேவ வரப்பிரசாதத்தை ஜெபத்தினாலும் பூசை, ஜெபமாலை), தேவத்திரவிய அனுமானங்களாலும் அடையலாம்.

தேவத்திரவிய அனுமானங்கள்

ஞானஸ்நானம்,
உறுதிப்பூசுதல்,
நற்கருணை,
பச்சாத்தாபம்,
அவஸ்தைப் பூசுதல்
குருத்துவம்,
மெய்விவாகம்

தேவத்திரவிய அனுமானங்களைத் தவிர, ஜெபமாலை, உத்தரியம், அற்புதப் பதக்கம் போன்ற அருட்கருவிகளும் நமக்கு தேவ வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தரும் சாதனங்களாக இருக்கின்றன. மேற்கூறியவைகள் அனைத்தும் நரகத்தைத் தவிர்த்து, மோட்சம் செல்ல நமக்கு உதவும் வகையில் திருச்சபையால் நமக்குத் தரப்படும் உபாயங்களாகும்.

எனவே, அன்பு வாசகர்களே, சர்வேசுரனை நேசிக்கும்படியாக, தேவ கற்பனைகளையும், திருச்சபைக் கட்டளைகளையும் அனுசரியுங்கள். உங்கள் பக்தியும், செயல்பாடுகளும் வெறும் வெளிச் செயல்களாக மட்டும் இராமல், தேவசிநேகத்தில் ஆழமாக ஊன்றப்பட்டவையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். கிறீஸ்துநாதர் நம்மை நேசிக்கிறார். அதே அளவுக்கு, நம்மால் நேசிக்கப்பட அவர் தாகமாயிருக்கிறார். உலகம் அவரைப் பகைக்கிறது. அது கட்டிக் கொள்ளும் ஒவ்வொரு பாவமும் அளவற்ற விதமாய் அவரை வாதித்து, கொடூரமான முறையில் அவரைச் சிலுவையில் அறைகிறது. நாமாவது ''ஏற்கெனவே நொந்து போயிருக்கிற நம் ஆண்டவரை இனியும் நோகச் செய்யாதபடி, பாவத்தை வெறுத்து ஒதுக்கி, நம்முடையவும் பிறருடையவும் பாவங்களுக்கு பாத்திமா மாதா கேட்கிறபடி பரிகாரம் செய்து, இவ்வாறு சேசு, மரிய இருதயங்களுக்கு ஆறுதல் தருவோமாக.