உத்தரிக்கிற ஸ்தலம் உண்டு - திருச்சபையின் சத்திய விசுவாசம்.

சேசுக்கிறிஸ்து நாதர் சுவாமி இவ்வுலகத்திற்கு எழுந்தருளி வரும் முன்னே வரைந்த வரிவேத புஸ்தகங்களினாலும் , அவருடைய ஸ்தானாதிபதிகளாய் இருந்த அப்போஸ்தலர்களுடைய நிருபங்களினாலும் வேதபாரகர் அனைவோரும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று திருஷ்டாந்தமாய் ஒப்பித்துக் கொண்டு வந்ததினாலே , இவர்கள் சொல்லும் பரம நியாயங்களை இதிலே பற்றும் பற்றாய்க் காண்பிக்க வேண்டியதில்லை . துஷ்ட பதிதர்களை மறுப்பதற்கு இந்த நியாயங்களை அறிய வேண்டுமானால் இவைகளை வேத விளக்கமென்னும் புஸ்தகத்திலும் ஞான சஞ்சீவி என்னும் புஸ்தகத்திலும் இவை போன்ற பிற புத்தகங்களிலும் வாசிக்கக் காணலாம்

மேலும் சத்திய வேதத்தை எங்கும் போதித்து ஸ்தாபித்த அப்போஸ்தலர்கள் நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களுக்காக ஜெப வேண்டுதல்களையும் பூசை பலிகளையும் பண்ணுகிற சுகிர்த வழக்கம் பாரம்பரியமான முறையாய் நடந்ததுமல்லாமல் ,அந்தந்த காலத்திலே விளங்கின வேதபாரகரும் , கிரந்த கர்த்தாக்களும் , தெய்வீக சாஸ்திரிகளும் இந்த முறைமையை பக்தி வணக்கத்துடன் அனுசரிக்க வேண்டுமென்று கற்பித்துக் கொண்டு வந்தார்கள் என்கிரதர்க்குச் சற்றாகிலும் சந்தேகப்பட இடமில்லை .

அர்ச் இராயப்பருக்குச் சீடராய் இருந்த அர்ச் சாந்தப்பர் என்னும் பாப்பனவர் பிரசித்திபடுத்தின அப்போஸ்தலிக்கக் கட்டளைகளின் எட்டாம் அதிகாரத்தில் சொல்லுகிறதாவது : சர்வேசுரனுடைய சமாதானத்தில் மரித்த நமது சகோதரருடைய ஆத்துமாக்களுக்கு ஆண்டவர் கிருபை செய்து அவர்கள் பாவங்களைப் பொறுத்து அவர்களைப் பிதாப் பிதாவான ஆபிரகாமுடைய மதியான மோட்சத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுவோமாக என்று சொன்ன பிற்பாடு அவர்களைக் குறித்து ஒரு நேர்த்தியான ஜெபத்தை எழுதி வைத்திருக்கிறார் .

நூற்றைம்பதாம் ஆண்டில் இருந்த தெர்த்துல்லியன் என்பவர் : பெண்ஜாதியானவள் செத்த தன புருஷனுடைய ஆத்துமத்திற்காக வேண்டிக் கொள்ள வேணுமென்கிற கவலையின்றி மறு கலியாணம் பண்ணுகிறது தகாது என்றார்

நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியான ஒரிஜென்என்பவர் எழுதினதாவது : இவ்வுலக யுத்தத்தில் இருந்து மறு லோகத்துக்குப் போகிறவன் உத்தரிக்க வேண்டி இருப்பதால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது கடனும் பிரயோசனமும் உள்ள வழக்கமாம் என்கிறார்

முன்நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியாகவும் அர்மேனியா தேசத்தில் சத்திய வேத விளக்காகவும் துலங்கின அர்ச் எபிரேம் என்பவர் சாகப் போகிற தருணத்தில் தனக்கு அருகே இருந்த தன் சீடரை நோக்கி :" என் பிரியமுள்ள பிள்ளைகளே , மரிக்கப் போகிற உங்களுடைய தகப்பனாராகிய எனக்குக் கடைசி உபசரணை செய்ய வாருங்கள் . என் சரீரத்துக்குப் பரிமளங்களைக் கொடுக்க வேண்டாம். ஆனால் நான் சர்வேசுரனிடத்தில் கிருபை அடையும் பொருட்டு தேவ சங்கீதங்களைப் பாடிக் கண்ணீர் சொரிந்து என் ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள் . இனிமேல் கோவிலில் நீங்கள் கூடும்போது எப்போதும் என்னை மறவாமல் எனக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் என்றார்

​அர்ச் அமிர்தநாதரோவென்றால் "எனக்கு மகனும் ஆண்டவருமான தேயோதோசியூஸ் இராயனுடைய ஆத்துமத்தை மோட்சத்தில் பிரவேசிக்கப் பண்ணுமளவும் என்னுடைய செபங்களையும் தபங்களையும் அழுகையையும் தவக்கிரியைகளையும் விட்டு விடுகிறதில்லை என்றார்

தமது தாயாரான அர்ச் மோணிக்கம்மாள் செத்த பிற்பாடு அர்ச் அகுஸ்தீன் எழுதின சுகிர்த வாக்கியமாவது :" எனக்கு மகிமையும் உயிருமாய் இருக்கிற என் சர்வேசுரா ! இப்போது என்னுடைய தாயாரின் புண்ணியங்களை உம்மிடம் விவரித்துப் பேசாமல் , அவளுடைய பாவங்களுக்காக உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன் . அவள் பேரில் இரக்கமாயிரும் , இரக்கமாயிரும் சுவாமி . அவளுக்குக் கடின தீர்வை இடாதேயும் . கர்த்தாவே , அவள் மரிக்கப் போகிற தருணத்தில் தன்னுடைய சரீரத்தை நினைக்கவுமில்லை , அதற்கு மகிமையான அடக்கத்தைப் பண்ண கேட்டதுமில்லை என்று நினைத்தருளும் . திவ்விய பூசையிலே பாவங்களைப் போக்குகிற பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறதை அறிந்து ,அந்த திவ்விய பூசையில் தன்னை நினைக்க வேண்டுமென்று மாத்திரமே கேட்டுக் கொண்டாள். அதனால் என் ஆண்டவரான சர்வேசுரா ! இப்போது நான் எழுதினவைகளை வாசிக்கப் போகிற உமது ஊழியரும் என் சகோதரருமான சகலரும் உமது அடியாளாகிய மோனிக்கா என்ற அம்மாளை நினைத்து அவளது ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளும்படி கிருபை செய்தருளும் என்று எழுதி வைத்தார் . மேலும் இந்த மகா சாஸ்திரியானவர் மரித்தவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளை குறித்து ஒரு நேர்த்தியான புத்தகத்தையும் எழுதி வைத்தாராம்

இது அளவின்றி விரியுமென்று அஞ்சி , அர்ச் கிரிசோஸ்தோமுஸ் ,அர்ச் எரோணிமூஸ் , அர்ச் பசிலியார் , அர்ச் சிரில், அர்ச் கிரகோரியார் முதலான பழைய வேதபாரகர் எழுதினவைகளை விவரித்துக் காட்டாமல் முன் சொன்னது புத்தியுள்ளவர்களுக்குப் போதும் என்று நினைத்திருக்கிறோம் . இப்போது சொன்னபடி அப்போஸ்தலர் நாளில் இருந்தவர்கள் துவக்கி இந்நாள் வரைக்கும் வழங்கின வேதபாரகர் எல்லோரும் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது திருச்சபை முறைமை என்று எழுதியதை மறுத்தவர் ஒருவருமில்லாமையால் , அப்போஸ்தலர் படிப்பினையால் துவக்கி திருச்சபையில் வழங்கின முறைமை இதுவேயென்று சொல்லக் கடவோம் . ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் இருந்தால் செத்தவர்களுக்காகச் செய்யும் வேண்டுதல் அபத்தம் தானே ? ஆகையால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது அப்போஸ்தலர் படிப்பினையால் வந்த திருச்சபையின் முறைமை எனக் கொள்ள , உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று அப்போஸ்தலர் படிப்பித்தது சத்திய விசுவாசமல்லோ ?

கடைசியில் சத்தியம் வழுவாத திருச்சபையின் விசுவாசம்  அதன் மட்டில் ஏதென்று நன்றாக அறியத்தக்கதாக புளோரன்ஸ் என்கிற பட்டணத்தில் கூடின சகல மேற்றிராணிமார்களுடைய சங்கத்தில் பிரசித்தி படுத்தப்பட்ட தீர்மானத்தைக் கேட்கக் கடவீர்கள் :" மெய்யான மனஸ்தாபப்பட்டு பாவிகள் தவக்கிரியைகளினால் தங்களுடைய பாவங்களுக்கு இவ்வுலகத்தில் பரிகாரம் பண்ணும் முன்னே செத்தால் , அவர்களுடைய ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளில் சுத்திகரிக்கப்படும் .அப்போது இந்த ஆத்துமாக்களை உயிருள்ள கிறிஸ்தவர்களுடைய மன்றாட்டினால் மீட்டு இரட்சிக்கக்கூடும் என்பது மெய்யான சத்தியம் என்கிறதினால், அவைகளைக் குறித்து திவ்விய பூசை பண்ணுகிறதும் , ஜெபன்களைப் பொழிகிறதும், பிச்சைகளை இடுகிறதும் , மற்ற தருமங்கள் செய்கிறதும் திருச்சபையினுடைய வழக்கமும் கட்டளையுமாமே . அதல்லாமலும் 1583 ஆம் ஆண்டில் திரிதெந்தென்னும் நகரில் கூடின மிகவும் பேர் பெற்ற சமஸ்த சங்கத்தில் ,மேற்றிராணிமார்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் திருச்சபையின் விசுவாசம அதுஎன்றும் சொன்ன பிற்பாடு இந்தப் பரம சத்தியத்தை குருக்கள் எல்லோரும் தங்கள் விசாரணைக் கிறிஸ்துவர்களுக்குக் குறைவின்றிப் போதித்து அவர்கள் அதைச் சரிவர ஒத்துக் கொள்ளும்படியாய்ச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.


கிறிஸ்தவர்களே ! இப்போது விவரித்துக் காண்பித்த உதாரணங்களினால் உங்களுடைய விசுவாசத்தில் சற்றாகிலும் தத்தளிக்காமல் நிலைத்து நிற்க வேண்டியதுமன்றியே மேன்மேலும் உங்களுடைய சுகிர்த மன்றாட்டுகளினாலும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாளுக்கு ஆறுதல் வருவித்து உதவியைச் செய்யக் கடவீர்களாக.