மார்ச் 22

அர்ச். கத்தரீனம்மாள். கன்னிகை (கி.பி. 1381) 

கத்தரீனம்மாள் ஸ்வீடன் தேசத்தில் பிறந்தவள்.

இவள் தன் தாயான விரிஜித்தம்மாளுடைய புண்ணியங்களைக் கண்டுபாவித்ததினால் அர்ச்சிய சிஷ்டவளானாள்.

கத்தரீனம்மாள் குழந்தையாயிருக்கும்போதே சர்வேசுரன் அவளுக்கு அளித்த விசேஷ வரத்தால் தன் தாயாகிலும் அல்லது கற்புள்ள வேறு ஸ்திரீகளாகிலும் பால் கொடுத்தால் குடிப்பாள். ஆனால் கற்பழிந்த எந்த பெண்களிடத்திலும் பால் குடிக்கமாட்டாள்.

கற்புக்கு அலங்காரியான இச்சிறுமி சிறு வயதில் கன்னியர் மடத்தில் வளர்க்கப்பட்டதினால் சகல புண்ணியங் களிலும் சிறந்து விளங்கினாள்.

இவள் வாலிபத்தில் மற்ற பெண்களைப்போல் விலையுயர்ந்த வஸ்திரங்களையும் நகைகளையும் அணியாமல் சாதாரண சுத்தமான வஸ்திரங்களை அணிந்துகொள்வாள்.

தன் தந்தையின் கட்டளைப் படி கத்தரீனம்மாள் ஒரு பிரபுவை மணமுடித்தாள். இவள் தன் கணவனுக்குச் சொன்ன அறிவுரையால் இருவரும் கூடப்பிறந்தவர்களைப் போல வாழ்ந்து வந்தார்கள்.

கத்தரீனம்மாள் தன் தாயுடன் சேர்ந்து திருஸ்தலங்களைச் சந்தித்து புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தாள்.

நாள்தோறும் இவள் வெகு நேரம் நமது கர்த்தருடைய திருப்பாடுகளை உருக்கமுடன் தியானித்துக் கண்ணீர் சொரிவாள்.

தன் புண்ணியங்களால் அநேக புதுமைகளைச் செய்தாள். அவள் தாயாகிய அர்ச். விரிஜித்தம்மாள் மரணமானபின் கத்தரீனம்மாள் ஒரு கன்னியர் மடத்தில் சேர்ந்து, சிறந்த புண்ணியங்களைச் செய்து குஷ்டரோகங் கொண்ட ஒரு குழந்தையைக் குணப்படுத்தினாள்.

நாளடைவில் அந்த மடத்திற்குப் பெரிய சிரேஷ்ட தாயாராய் நியமிக்கப்பட்டு அந்த மடத்தை திறமையாய் நடத்தி நித்திய சம்பாவணைக்குள்ளானாள்.

யோசனை 

நீங்கள் எந்த அந்தஸ்திலிருந்த போதிலும் கற்பென்னும் சிறந்த மாணிக்கத்தை காப்பாற்றுவீர்களாக. இதற்கு ஜெபமும் ஒறுத்தலும் கர்த்த ருடைய பாடுகளின் மீது பக்தியும் அவசியம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பேசில், வே.
அர்ச். பவுல், மே.
அர்ச். லீயா, வி.
அர்ச். தெயோகிராசியாஸ், மே.