பிப்ரவரி 06

அர்ச். தொரோத்தியம்மாள். கன்னிகை, வேதசாட்சி (கி.பி. 208)

இக்கன்னிகையின் தாய் தந்தையர் சேசுநாதருக்காக வேதசாட்சிகளாக மரித்தபின் தொரோத்தியம்மாள் சகல புண்ணியங்களையும் விசேஷமாக கற்பென்னும் புண்ணியத்தையும் பிரமாணிக்கமாக அநுசரித்துவந்தாள். இவள் வேதத்திற்காகப் பிடிபட்டு பயங்கரமான ஆயுதங்களால் துன்புறுத்தப்பட்டும், அஞ்சாததினால், வேதத்தை ஏற்கனவே மறுதலித்த இரு ஸ்திரீகளிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

தொரோத்தியம்மாளின் நற்புத்தியால் மனந்திரும்பின அவ்விரு துஷ்ட ஸ்திரீகளும் நெருப்பில் போட்டு சுட்டெரிக்கப்பட்டார்கள். தொரோத்தியம்மாள் மறுபடியும் அதிபதியின் உத்தரவுப்படி சித்திரவதை செய்யப்பட்டும் அவள் வேதத்தில் தைரியமாயிருப்பதைக் கொடுங்கோலன் அறிந்து, சினங்கொண்டு, அவளைச் சிரச்சேதம் செய்யும்படி தீர்ப்பளித்தான்.

சேவகர் வேதசாட்சியைக் கொலைக் களத்திற்கு நடத்திக்கொண்டு போகையில், வேத விரோதியான தெயோபிலிஸ் என்பவன் அப்புண்ணிய மாதைப் பார்த்து, “நீ பிதற்றும் வேத பத்தாவினிடத்தினின்று இந்தக் குளிர்காலத்தில் அகப்படாத நேர்த்தியான புஷ்பங்களையும் கனிகளையும் எனக்கு அனுப்பு” என்று பரிகாசமாகச் சொன்னான்.

அப்படியே ஆகட்டுமென்று வேதசாட்சி சொல்லி, கொலைக்களம் போய்ச் சேரவே, ஒரு சம்மனசு ஒரு சிறு பிள்ளையாகக் காணப் பட்டு, நேர்த்தியான புஷ்பங்களையும் கனிகளையும் அவளுக்குக் கொடுத்தது. அவைகளைத் தெயோபிலிஸுக்குக் கொடுக்கும்படி அவள் சொல்லிவிட்டு, தலை வெட்டுண்டு மரித்தாள்.

அவள் சொன்னது போல சம்மனசு அவனுக்கு அவைகளைக் கொடுத்தது. இதை அவன் கண்டு, அதிசயித்து கிறீஸ்தவனாகி வேதசாட்சி முடி பெற்றான்.

யோசனை.

நமது நல்ல ஒழுக்கத்தால் பிறரை மனந்திருப்புவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். வேதாஸ்த், மே.
அர்ச். ஆமாந்துஸ், மே.
அர்ச். பர்ஸானுபியுஸ், தபோ.