வரலாற்றின் தொடக்கத்திலேயே மரியாளை கடவுள் தேர்ந்தெடுத்தார்' என்று கூறுவது எப்படி சரியாகும்?

"கிறிஸ்து இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்." கொலோசையர் 1:15-17,20) இவ்வாறு மகனாகிய கடவுளுக்காக உருவாக்கப்பட்ட உலகம், அவராலே மீட்கப்பட வேண்டுமென தந்தையாகிய கடவுள் திருவுளம் கொண்டார். கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித குலத்தைப் பாவத்தில் இருந்து மீட்க, மகனாகிய கடவுள் மனிதரின் உருவை ஏற்கத் திருவுளம் கொண்டார். அவருக்கு மனித உடலைக் கொடுக்க அன்னை மரியாளை தொடக்கம் முதலே கடவுள் முன்குறித்து வைத்திருந்தார். ஏனெனில், கடவுளின் திட்டம் ஒரு தாய் வழியாக நிறைவேற வேண்டியிருந்தது.

வரலாற்றின் தொடக்கத்தில் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்ததால், முதல் பெற்றோர் தங்களின் அருள்நிலையை இழந்து தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டனர். கடவுளுடனான உறவை இழந்து பாவத்துக்கு அடிமையான மனிதகுலத்தை விடுவிக்க மகனாகிய கடவுளை மீட்பராக அனுப்ப தந்தையாம் கடவுள் திருவுளம் கொண்டார். உலக மக்களின் பாவங்களைப் போக்க வரும் இந்த மீட்பர், ஒரு தாயின் வயிற்றில் தோன்றி மானிட மகனாக பிறக்க வேண்டுமென்பது இறைத்திட்டமாக இருந்தது. இதையே கடவுள், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்" (தொடக்க நூல் 3:15) என்ற மீட்பின் வாக்குறுதியாக அளிக்கிறார். இவ்வாறு கடவுளின் திட்டத்தில் தொடக்கம் முதலே மரியாள் இடம் பெற்றிருந்ததைக் காண்கிறோம்.

"அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு 'காலம் நிறைவேறியபோது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.' (கலாத்தியர் 4:4-5). இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியினால் கன்னி மரியாள்விடம் உடல் எடுத்தார். மீட்பின் இந்த மறைபொருள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுத் திருச்சபையில் தொடர்ந்து நீடிக்கிறது." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "நெடுங்கால காத்திருப்புக்குப் பிறகு, சீயோனின் மகளாகிய மரியாளில் கடவுளின் திட்டம் முழுமை பெற்றது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 489) கடவுள் அளித்த வாக்குறுதியின் நிறைவாக இயேசு தோன்றியதால், மரியாளை வரலாற்றின் தொடக்கத்திலேயே கடவுள் தேர்ந்தெடுத்தார் என்பது நிரூபணமாகிறது.