மரியன்னை இறைவனின் தாய் பெருவிழா ***


திருவிழா நாள்: ஜனவரி 1

புத்தாண்டு புலர்த்துவிட்டது. மற்றும் ஓர் ஆண்டு மலர்த்துவிட்டது. இப்புத்தாண்டை இயேசுவின் இனிய நாமத்தில் தொடங்குவோம்; இறைவனின் தாய் புனிதமிகு கன்னிமரியின் பாசமிகு பாத கமலத்தில் வைப்போம்.

இன்று இயேசு பிறந்த எட்டாம் நாள். அவருக்கு இயேசு என்ற பெயரைச் சூட்டிய நாள். இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம்; செவிகளுக்கு இனிய நாமம்; பைந்தமிழ் பாவுக்கும் நாவுக்கும் இனிய நாமம். இயேசுவின் பெயருக்கு விண்ண வர், மண்ணவர், கீமுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2-10), நாம் மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை (திப 4:12), புனித பேதுரு கால் மனமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் எழுந்து நடக்கச் செய்தார் (திப 3:6), பழைய ஏற்பாட்டில் சிறுவன் தாவீது கோலியாத் என்ற அரக்கனைக் கடவுளின் பெயரால் கொன்றான் (1 சாமு 17:43-45)

நமது வாழ்வில் கோலியாத் போன்ற பல தீய சக்திகள் நம்மை முடக்கி விடுகின்றன. நாம் செய்வது என்னவென்று கலங்கித் திகைக்கிறோம். ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி அவற்றை எதிர்த்து வெற்றி அடைவோம். இயேசுவின் பெயரால் நாம் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் நமக்குக் கொடுப்பார் (யோவா 15:16), கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்" (திபா 27:1).

இன்று புனிதமிகு கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மரியன்னையின் தனிச்சிறப்பு அவர் இறைவனின்தாய் என்பதாகும். நாம் மேகத்தைப் புகழ்வது அது கொடுக்கும் மழைக்காக; மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் களிக்காக; பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக; தாயைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த சேயுக்காக, அவ்வாறே நாம் மரியன்னையைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த உலக மீட்பருக்காக. கிறிஸ்து கடவுள் என்றால், மரியா கடவுளின் தாய் என்பதில் ஐயமில்லை. இன்றைய திருப்பலியின் வருகைப்பாடல் மரியாவை இறைவனின் தாய் என்று புகழாரம் சூட்டுகிறது. "வாழ்க புனித அன்னையே விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளும் அரசரை ஈன்றவர் நிரே." இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், 'காலம் நிறைவேறிய போது கடவுள் தம் மகனைப் பெண்ணிடமிருந்து பிறக்கச் செய்தார் " (கலா 4:4) என்கிறார்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டு உரத்த குரலில் மரியாவைப் பார்த்து, "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக் 1:43) என்று கேட்கிறார். மரியா ஆண்டவரின் தாய், ஆண்டவர் என்ற சிறப்புப் பெயர் இறைவனுக்கு மட்டுமே உரியது. மரியா ஆண்டவரின் தாய் என்றால், அவர் இறைவனின் தாய் என்பது வெள்ளிடை மலை.

ஒரு பேரன் தன் தாத்தாவைச் சுட்டிக்காட்டி, “நான் என் தாத்தாமேல் உயிரை வைச்சிருக்கிறேன். ஏனெனில் என் தாத்தா என்மேல் உயிலையே எழுதி வைச்சிருக்கிறாரு" என்றான். இயேசு கிறிஸ்து அவர் சாகுமுன் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் என்ன? "இவரே உம் தாய்" (யோவா 19:27), புனித யோவான் வாயிலாக மரியாவை நமது தாயாக அளித்தார். கிறிஸ்துவின் இந்த இறுதி விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதில்லை. மரியன்னையை தமது தாயாக ஏற்றுக்கொண்டு, அவருடைய பாதத்தில் இப்புத்தாண்டை வைப்போம். "உருவிலான் உருவாகி, உலகிலொரு மகனுதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிய கன்னிமரி நம்மைக் கைபிடித்து வழிநடத்துவார்."

மரியா உண்மையிலேயே "இறைவனின் தாய்" என்று கி.பி. 431ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச் சங்கம் அறிக்கையிட்டது. "இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள். எனவே பேறுபெற்ற கன்னி உண்மையிலேயே இறைவனின் தாய்,"

மரியா மீட்பரின் தாய். யாரெல்லாம் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்களோ அவர்களும் மீட்பரின் தாயாக முடியும் (மத் 12:48.50), மரியா மீட்பரை இவ்வுலகிற்கு அளித்தார். நாமும் நமது சாட்சிய வாழ்வினால் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அளிக்க முடியும்.

இன்று திருச்சபை எண்ணிக்கை நூலிலிருந்து (எண் 6:26-27) சிறப்பு ஆசீர் வழங்குகிறது. அதே ஆசீரை புத்தாண்டின் ஆசீராக உலகுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டவர் உங்களுக்கு ஆசீர் வழங்கி உங்களைக் காப்பாராக. ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள் மேல் ஒளிரச் செய்வாராக; உங்கள் மீது அருளைப் பொழிவாராக, இப்புத்தாண்டு முழுவதும் கடவுள் உங்களைக் காப்பார்; நீங்கள் போகும்போதும் காப்பார்; வரும்போதும் காப்பார். உங்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும், உங்களுக்கு மேலும் கீழும் ஆண்டவர் கோட்டையாகவும் அரணாகவும் இருப்பாராக. தீமை உங்களை அணுகாது; துன்பம் உங்கள் உறைவிடத்தை நெருங்காது. அஞ்சாதீர்கள். கலங்காதீர்கள்!! இம்மானுவேலாகிய கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார்.

(அருட்பணி Y. இருதயராஜ்)