எளிமை..


"அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்"

லூக்காஸ் 2 :10-12

“வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.” மத்தேயு 2:11

கிறிஸ்து பிறப்பு நமக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தி. உலக மீட்பர், நம் இரட்சகர், தேவாதி தேவன், நம் அரசர் இயேசு சுவாமி பிறந்த செய்தி நம் இதயத்தில்.. ஆன்மாவில் மகிழ்ச்சியூட்டும் செய்தி…

உலகத்தையே படைத்தவர், அதில் உள்ள அனைத்திற்கும் சொந்தக்காரரின் பிறப்பு எவ்வளவு எளிமையாய் நடந்தது..

“ஏனெனில், சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. லூக் 2:7

மாட்டுத்தொழுவமே நம் மன்னன் பிறந்த வீடு.. மாட்டின் தீவனத்தொட்டியே நம் மன்னனுக்குத் தொட்டில்… சம்மனசுக்களின் மத்தியில் வாசம் செய்த கடவுள் மாடுகளின் மத்தியில் பிறக்கத் திருவுளமானார்… எப்பேர்பட்ட வசதி.. மகிமை…அதாவது இந்த உலகில் எதை செல்வம் என்றும், வசதிகள் என்றும் சொல்கிறார்களோ…

“ அடேயப்பா !!! அவன் எப்படி வீடு கட்டியிருக்கான் தெறியுமா? முழுவதும் பளிங்கு, ஏ.சி.. அரண்மனை மாதிரி வீடு. எப்படியும் ஒரு கோடியியிருக்கும்…இரண்டு கோடியிருக்கும்” என்று பேசுவதை கேட்டிருக்கிறோம்…

என்னதான் அரண்மனையே ஆனாலும் அது மோட்சத்திற்கு கால்தூசி கூட பெறாது… அப்பேற்பட்ட மோட்சத்தையே விட்டுவிட்டு ஒரு மாட்டுக்கொட்டகையில், மாடுகள், சாணங்களின்  நாற்றங்களுக்கு மத்தியில் எவ்வளவு எளிமையாக பிறந்துள்ளார் நம் கடவுள்…

“ நாளைக்கு மனதில் பாவத்தோடும், தீய எண்ணங்களோடும், மற்றவர் மீது வெறுப்போடும், கோபத்தோடும், ஆனவத்தோடும், அசிங்கத்தோடும் நற்கருணையாக… இயேசுவாக… மாறியிருக்கும் என்னை வாங்கி இத்தனை அசிங்கத்திற்குள் என்னை மானிட மக்கள் வைக்கப்போகிறார்கள்.. அதனால் இப்பவே பிரக்டீஸ் பன்னிக்கலாம்.. நாற்றங்களுக்கு மத்தியில் வாழ்வது எப்படி என்று “ என்றும் யோசித்திருப்பார்…

“ இந்த மக்களுக்கு என்னதான் அற்புதங்கள் அதிசயங்கள் செய்தாலும்.. நான்தான் மெசியா.. உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னாலும் என்னை நம்பாமல் அவமானப்படுத்தி சிலுவையில் அறைவார்கள்.. அதனால் தீவனத்தொட்டியில் படுத்து சிலுவைக்கு இப்போதே பழகிக்கொள்வோம் “ என்றும் நினைத்திருப்பார்..

“இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." (மத் 28:20) திருப்பலி.. திவ்ய நற்கருணையின் வடிவில்..” என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.. பயத்தால் நடுங்குவார்கள்… விசுவாசத்தில் தடுமாறுவார்கள்.. எங்கெல்லாமோ ஓடுவார்கள்.. அவர்களை நம்ப முடியாது… அதனால் விசுவாசத் தூண்களான என் தாய் மரியாயிக்கும், என் வளர்ப்புதகப்பனான சூசையப்பருக்கும் நடுவில் கொஞ்ச வருடங்களாவது மகிழ்ச்சியாகவும், இவர்கள் என்னைக் காட்டி கொடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலும் வாழ்வோம்.. இப்போது அவர்கள் அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது “ என்றும் நினைத்திருப்பார்..

எளிமை என்பது வசதி அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அதைத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லி இருப்பதில் நிறைவு காண்பதாகும்.. இருக்கும் வசதி காணாது. எனக்கு கார் வேண்டும்.. பங்களா வேண்டும்.. நிலபுலன்கள் வேண்டும்.. ஆனால் சர்வேசுரவன் வேண்டாம் என்று எப்போதும் குறைவுள்ள மனதோடு வாழ்ந்தால் மரணம் வரை நிறைவு கிடைக்கப்போவதில்லை..

சர்வேசுவரன் முக்கியமா? சகல வசதிகள் முக்கியமா? மோட்சமே எளிமையாக பிறந்திருக்கும்போது நம் எளிமையான வாழ்வால் நாம் மோட்சத்தை சொந்தமாக்க வேண்டும்..அதுதான் விவேகமான செயல்..

எளிமை என்பது வசதி வாய்ப்பில் மட்டுமல்ல நம் உள்ளத்திலும் இருக்க வேண்டும்.. நம் உள்ளத்தில் ஆணவம், அகங்காரம், கர்வம், வெறுப்பு என்ற எளிமை, தாழ்ச்சிக்கு எதிர்ப்பதமான எதுவும் இருக்கக்கூடாது…

குறிப்பு : மாதாவுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது என்று பேசும் பிரிவினையினர் பின்னால் செல்லும் கத்தோலிக்கர்களுக்காக மத் 2:11

“வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.” மத்தேயு 2:11

ஜெபம் : திவ்ய இயேசு பாலனே ! மாட மாளிகை, கோட கோபுரத்தில் பிறக்க வேண்டிய நீரே.. ஒரு சாதாரண மாட்டுத்தொழுவத்தில் பிறந்து வசதி வாய்ப்புக்கள் என்பது நீங்கள் இருக்கும் இடத்தில் அல்ல.. நான் வாசம் செய்யும் இடத்தில் இருக்கிறது என்று உம் வாழ்க்கை பாடத்தை எங்களுக்கு மாதிரியாக காட்டிவிட்டீர்… நாங்கள் இருப்பதில் நிறைவு காணவும், நாங்கள் இறக்கும் வரை உம்மை எங்கள் மனதில் வைத்து தேவ அன்னை போலும், புனித சூசையப்பர் போலும் உம்மை பார்த்துக்கொள்ள எங்கள் உள்ளத்தை அசிங்கங்கள் இல்லாமல் மனம் வீசும் நல்ல பூந்தோட்டமாக மாற்ற பாலன் இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்-ஆமென்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !