செபமாலை மூலம் மரியன்னையை வாழ்த்துவது கடவுளுக்கு ஏற்புடையதா?

"அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே!" என்று செபமாலையில் நாம் வாழ்த்துகிறோம்.

எந்த ஒரு தனிமனிதரோ, திருச்சபையோ இந்த வாழ்த்தை உருவாக்கவில்லை. இது, கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்த்து.

தந்தையாம் இறைவனே கபிரியேல் தூதர் வழியாக, "அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்காஸ் 1:28) என்ற வார்த்தைகளால் மரியன்னையை வாழ்த்தினார்.

கடவுளின் மீட்புத் திட்டத்தை மரியன்னைக்கு அறிமுகம் செய்த வார்த்தைகள் இவை!

"பரிசுத்த ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (லூக்கா 1:35) என்ற வானதூதரின் வார்த்தைகளுக்கு, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று பதிலளித்ததால் மரியன்னை இயேசுவின் தாயானார்.

இறைமகனை கருத்தாங்கிய அன்னை, செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும், அவர்  பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக்கா 1:42) என்று வாழ்த்தினார்.

இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியாரின் தூண்டுதலால் எலிசபெத்து கூறியவை.

இறைமகனை கருவில் சுமந்து மீட்புத் திட்டம் நிறைவேற ஒத்துழைத்த அன்னையை, இறைத்தந்தையும் இறைஆவியும் போற்றிப் புகழ்வதைக் காண்கிறோம்.

"கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாய்" (மாற்கு 4:35) என்று இயேசுவும் அன்னையைப் பாராட்டுவதைக் காண்கிறோம்.

இவ்வாறு மூவொரு கடவுளால் வாழ்த்தப்பெற்ற தேவமாதவைஆண்டவருக்கு விருப்பமான வார்த்தைகளில் புகழ்ந்து உதவி வேண்டுவதே செபமாலையின் அடிப்படை.

கடவுளின் மீட்புத் திட்டத்தில் மறைபொருளின் ரோசா மலராகத் திகழும் கன்னி மரியன்னை, 'இறைவனின் தாய்' என்ற மேலான பெருமையைப் பெற்றிருக்கிறார்.

இதன் காரணமாகவே கிறிஸ்து இயேசுவைப் போன்று, உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் மாட்சியோடு திகழ்கிறார்.

எனவே, "திருச்சபை மரியன்னையைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. திருச்சபையில் என்றும் இருந்து வரும் இவ்வணக்கம், மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் பரிசுத்த ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே வேறுபட்டது." (திருச்சபை எண். 66)

இந்த வணக்கத்தின் ஒரு பகுதியாகவே செபமாலை பக்தியும் அமைந்துள்ளது.

இறைத்தந்தை மற்றும் பரிசுத்த ஆவியாரின் வார்த்தைகள் மூலம் தேவமாதாவை வாழ்த்தி, அவரது பரிந்துரையை வேண்டுவது கடவுளுக்கு ஏற்புடைய செயலே.