உத்தரியம்!

கத்தொலிக்கர்கள் உத்தரியம் அணியும் பக்தி மிகக்குறைந்து விட்டது. உத்தரியம் அணிபவர்களுக்கு நரகம் கிடையாது. இது தேவமாதாவால் புனித சைமன் ஸ்டாக்கிற்கு 1251-ம் ஆண்டு ஜூலை கொடுக்கப்ட்ட வாக்குறுதி.

 “எனது அருமை. மகனே, இவ்வுத்தரியத்தைப் பெற்றுக்கொள். நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி”

பாருங்கள் இது எப்பேற்பட்ட வாக்குறுதி. அதாவது உத்தரியத்தை அணிந்தால் உடனடியாக சாத்தானுக்கும் நமக்கும் உள்ள உறவு துண்டிக்கப்படுகிறது. அதற்கு மேல் எதிரிக்கு நம் மேல் அதிகாரம் இல்லை. மாதா எப்படியும் நம்மை மீட்டுவிடுவார்கள். உத்தரியம் அணிவதன் மூலம் நாம் கார்மேல் சபையில் இனைக்கப்படுகிறோம். உத்தரியம் கார்மேல் சபையின் யூனிபார்ம். கார்மேல் சபைத்துறவிகள் செய்யும் அனைத்து ஜெபதவங்களிலும் நமக்கு பலன் உண்டு.

உத்தரியத்தை பாவமில்லாமல் ஒவ்வொரு முறை முத்தம் செய்யும்போது கார்மேல் துறவிகளின் 500 நாட்கள் கடும் தவம் செய்த பலன் நமக்கு கிடைக்கிறது.

நம்மை நித்திய நரகத்திலிருந்து காப்பாற்ற எத்தனையோ சலுகைகளை கடவுள் நமக்கு தருகிறார். ஆனால் நாம் பயன்படுத்துவது இல்லை. உத்தரியம் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. தங்க நகைகள் அணியும் போது இடையூராக இருக்கும் என்று பல காரணங்கள் சொல்லி உத்தரியம் அணிவதை தவிர்க்கிறோம். ஒரு பத்து ரூபாய் பக்திப்பொருளில் நரகம் இல்லை. நாம் மரிப்பதற்குள் நமக்கு மீட்பு உண்டு. எப்பேற்பட்ட சலுகைகளைத் தரும் உத்தரியத்தை விடலாமா?   உத்தரியத்தில் மீட்பு இருக்கிறது.

ஆகவே, அன்பான கத்தொலிக்க மக்களே ! உடனடியாக உத்தரியத்தை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். முதல் முறை அணியும்போது ஒரு குருவானவர்தான் அதற்குரிய சிறப்பு ஜெபத்தை சொல்லி அணிவிக்க வேண்டும். அதன் பின் உத்தரியம் கிழிந்தாலோ, பழசானாலோ புதிய உத்தரியம் வாங்கி நாமே அணிந்து கொள்ளலாம். பழைய உத்தரியத்தை எரித்தோ அல்லது புதைத்தோ விடலாம். மாதா கடவுளிடம் நமக்காக பரிந்து பேசி நம்மை நரகத்திலிருந்து காப்பாற்ற எத்தனையோ எளிய வழிகளைத் ( உத்தரியம், தினமும் ஜெபமாலை ஜெபித்தல்) தருகிறார். ஆனால் நாம்தான் பயன்படுத்துவது இல்லை. ஒரு கத்தொலிக்கன் நரகம் சென்றால் அதற்க்கு கத்தொலிக்க மதமோ, மாதாவோ, இயேசு தெய்வமோ காரணம் அல்ல. அவனேதான் காரணம்.

உத்தரியம் அணிந்தவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள்: முயற்சி செய்யுங்கள்;

1.      உத்தரியத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

2.      துறவிகள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் தங்கள் தங்கள் நிலைக்கு ஏற்ப கற்பை கடைபிடிக்க வேண்டும்.

3.      தினமும் ஒரு 53 மணியாவது ஜெபமாலை சொல்ல வேண்டும்.

பாவிகள் அதிகமாக நரகத்தில் விழுவதைத் தடுக்க கடவுளிடம் பரிந்து பேசி நமக்கு ஒவ்வொரு சலுகைகளாக பெற்றுத்தருகிறார்கள். அதில் அடங்கியதுதான் உத்தரியம், ஜெபமாலை எல்லாம். நரகத்திலிருந்து தப்பிக்க நம் மாதா கொடுத்த உத்தரியம் என்ற சலுகையை அனுபவிக்க தயாரா ? அதாவது உத்தரியம் அணிய தயாரா? அன்னையின் யூனிபார்ம் அணிய தயாரா?

குறிப்பு 1 : உத்தரியம் எப்போதும் அணிந்து இருக்கலாம். தூங்கும்போதும் அணியலாம். இல்லரவாசிகள் கழற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. குளிக்கும்போது கழற்ற வேண்டும் என்று விரும்புவர்கள் கழற்றிக்கொள்ளலாம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !