பாத்திமா காட்சிகள் - வானவனின் மூன்றாம் வருகை

1916-ம் ஆண்டு செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபர் முற்பகுதியாக இருக்கலாம். அன்று குழந்தைகள் மூவரும் கபேசோ மலைச்சரிவின் குகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடுகள் அங்குமிங்கும் சிதறி மேய்ந்தன.

வழக்கம்போல் ஜெபமாலை சொல்லி முடிந்ததும், மூவரும் தலை தரையில் பட கவிழ்ந்து, சேர்ந்த குரலில்: "என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவாசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்று ஜெபித்தார்கள்.

இப்படி சில தடவைகள் சொல்வதற்குள் திடீரென ஓர் ஒளி அவர்களைச் சூழ்ந்தது. அவர்கள் நிமிர்ந்து பார்க்கையில் அதே வானதூதன் அங்கு நின்றார்! அவரது இடது கரத்தில் பூசைப் பாத்திரத்தைப் பிடித்திருந்தார். அப்பாத்திரத்தின் மேலே திரு அப்பத்தை வலது கையில் ஏந்தியிருந்தார். திரு அப்பத்திலிருந்து இரத்தம் துளிர்த்து, துளித் துளியாய் பாத்திரத்தினுள் வடிந்தது.

வானவன் அப்பாத்திரத்தையும், நற்கருணை அப்பத்தையும் அப்படியே ஆகாயத்தில் நிற்க விட்டு விட்டு, குழந்தைகளுடன் முழந்தாளிட்டு சாஷ்டாங்கமாய் விழுந்து:

"மகா பரிசுத்த தமத்திரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரீத்து சாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெங்குமுள்ள திவ்ய நற்கருணைப் பேழைகளில் இருக்கும் சேசுக்கிறிஸ்துநாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத் துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து, நிர்ப்பாக்கியப் பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்'' என்று மும்முறை கூறி ஜெபித்தார்.

பின் எழுந்து ஆகாயத்தில் நின்ற பாத்திரத்தையும், திவ்விய நற்கருணை அப்பத்தையும் கரங்களில் முன்போல் ஏந்திக் கொண்டு, தட்டையான பாறையில் முழங்காலிட்டு : ''நன்றியற்ற மனிதரால் சகிக்கக் கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தப்படுகிற சேசுக்கிறிஸ்து நாதருடைய திருச் சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்காகப் பரிகாரம் செய்து, உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்'' என்றார்.

லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரும் திரு அப்பத்திலிருந்து துளிர்த்த இரத்தம் பாத்திரத்தில் விழுவதைப் பார்த்தார்கள். வான் தூதர் திவ்விய நற்கருணை அப்பத்தை லூஸியாவின் வாயில் வைக்க அவள் அதை உட்கொண்டாள். பிரான்சிஸ் க்கும் ஜஸிந்தாவுக்கும் பாத்திரத்தில் இருந்த திரு இரத்தத்தைப் பானம் பண்ணக் கொடுத்தார். இவ்விருவருக்கும் இதுவே புது நன்மையாயிருந்தது.

பின்னர் மீண்டும் தூதன் சாஷ்டாங்கமாக விழுந்து அதே ஜெபத்தை மும்முறை சொல்லி ஜெபித்தார். இப்போது குழந்தைகளும் அவருடன் சேர்ந்து ஜெபத்தைச் சொன்னார்கள். இதன்பின் வானவர் சூரிய ஒளியில் கலந்து மறைந்து விட்டார்.

வானவர் போன பின் குழந்தைகள் மூவரும் அவர் கற்றுக் கொடுத்த இரண்டு ஜெபங்களையும் சேர்த்து ஒன்றாக்கி அதைப் பல தடவைகள் சொல்லி மன்றாடினார்கள். இந்தக் காட்சியில் சர்வேசுரன் அவர்களுடன் இருந்த உணர்வு எவ்வளவு அதிகமாயிருந்ததென்றால், தங்கள் உடலை உதறிவிட்டது போல் தோன்றியதாக லூஸியா கூறியுள்ளாள்.

அந்தி நேரம் மங்கியது. பிரான்சிஸ்தான் அத் தெய்வீக மயக்கத்திலிருந்து முதலில் தெளிந்து எழுந்து மற்ற இருவரையும் அழைத்தான். மூவரும் மிகவும் களைத்துப் போயிருந்தனர். ஒரு இனிமை நிறைந்த பலவீனத்துடன் காணப்பட்டனர். ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு சேர்ந்தனர்.

பல நாட்களாக, வாரங்களாக, இந்த மதுரமான சோர்வு அவர்களை ஆட்கொண்டிருந்தது.

''தூதனைப் பார்க்க எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் அதில் அதிக கஷ்டமானது என்னவென்றால், அதற்குப் பிறகு நம்மால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. என்னால் நடக்கக் கூட இயலவில்லை. எனக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை'' என்றான் பிரான்சிஸ்.

பிரான்சிஸின் பலம் தேறிய பின் லூஸியாவிடம்: "சம்மனசானவர் உனக்கு திவ்விய நற்கருணை தந்தார்.

ஆனால் எனக்கும் ஜஸிந்தாவுக்கும் அவர் தந்தது என்ன?" என்று கேட்டான்.

லூஸியா பதில் கூறுமுன் ஜஸிந்தா குறுக்கிட்டு,

"அதுவும் நற்கருணைதான். ஏன், நீ பார்க்கவில்லையா? திரு அப்பத்திலிருந்து வடிந்த இரத்தம் தானே அது?" என்றாள்.

"அம் கடவுள் என்னில் இருந்தார் என்று நான் உணர்ந்தேன். ஆனால் அது எப்படி என்றுதான் எனக்குத் தெரியவில்லை'' என்றான் பிரான்சிஸ்.

இதைச் சொன்னவன் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து வானவன் சொன்ன இரண்டாம் ஜெபத்தை நெடுநேரம் சொல்லி ஜெபித்துக் கொண்டிருந்தான்.

பழுதற்ற கன்னியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.