சேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்படுகிறார்

"இந்த மனிதனிடத்தில் நீங்கள் சுமத்தும் குற்றங்களில் யாதொன் றையும் நான் காணவில்லை. ஆதலால் அவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்று பிலாத்து யூதர்களிடம் கூறினான். மேலும் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவரைக் கற்றூணில் கட்டி அடிக்கும்படி செய்து, சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவர்களிடம் அவரைக் கையளித்தான் (மத் 27:26; மாற்கு. 15:15; லூக் 23:13; அரு.19:1).

சேசுநாதரைக் கற்றூணில் கட்டி அடிக்க உத்தரவு பெற்றவர்கள் உரோமைப் போர்ச் சேவகர்கள். விளையாட்டிற்காக மிருகங்கள் முன் சிறுவரையும், பெண்களையும் வீசியெறிந்து வேடிக்கை பார்க்கும் உரோமையர். அவர்கள் ஒரு மனிதனைக் கற்றூணில் கட்டி அடிப்பது என்றால், அந்தத் தண்டனையின் குரூரத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சிலுவை மரணத்தைப் போல, கற்றூணில் கட்டி அடிக்கப்படுவதும் அடிமை களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தண்டனை (அப். நட.16:37 காண்க.).

சேசுநாதர் உரோமையரின் இந்தக் குரூர தண்டனைக்கு முழுவதும் இலக்கானார். மோயீச னின் சட்டப்படி நாற்பது அடிகளோடு இது நிற்காது. அடிப்பவர்களின் குரூரத்திற்கும், ஆள் பலத்திற்கும் தக்கபடி எத்தனை அடிகளும் அடிக்கலாம் என்பது உரோமையரின் சித்தாந்தம். நமது இரட்சகர் எத்தனை அடிகள் வாங்கினார் என்று நமக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நமக்குத் தெரியும். நம் பாவங்களுக்குத் தகுந்த பரிகாரம் செய்ய அவர் விரும்பினார்!

அடிக்கும் கருவிகளும் பயங்கரமானவை. பலமான தோல்வார்களால் பின்னப்பட்ட கசைகள். அவற்றின் நுனியில் கூர்மையுள்ள எலும்புத் துண்டுகளும், இரும்புக் குண்டுகளும் பிணைக்கப் பட்டிருந்தன. இக்கசைகளால் அடிபடும் பொழுது, பீறிட்டு வெளிவரும் இரத்தத்தோடு , சதையும் எலும்பும் பிய்த்துக்கொண்டு சிதறி விழும். யூதத் தலைவர்களும், பரிசேயரும் அவமானம் நிறைந்த சிலுவை மரணமே சேசுநாதருக்குத் தகுந்தது என்று ஆர்ப்பரித்தவர்கள். அத்தோடு அவரைக் கட்டி அடித்துச் சித்திரவதை செய்து தங்கள் பகை வைராக்கியத்தைத் தீர்த்துக்கொள்ளவும் ஆசைப்பட்டார்கள். ஆதலால் அடிப்பவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து ஏவித் தூண்டினார்கள்.

பிலாத்துவின் அரண்மனை முற்றத்தின் நடுவில் நிற்கும் கற்றூணில் இறுகக் கட்டிப் பிணைக் கிறார்கள். அவரது இரு பக்கங்களிலும் நின்று தம் பலம் கொண்ட மட்டும் அடிக்கிறார்கள். கொடிய அந்தக் கசையடிகள் நம் அன்பரின் மென்மையான திருச்சரீரத்தின் மீது விழுகின்றன. அவரது இரத்தம் பீறிட்டு வெளிவருகிறது. சிறிது நேரத்தில் தேகமெல்லாம் வழிந்தோடும் இரத்த மயமாக மாறுகிறது. இதைக் கண்ட சேவகர்கள், சேசுநாதரின் சரீரம் முழுவதையும் மூர்க்கமாய் அடிக்கிறார்கள். அவரது தசை தெறித்து, நாற்புறமும் சிதறித் துண்டு துண்டாய் விழுகிறது. இந்தக் கொடூரம் நீடிக்கிறது. முற்றத்தின் தளம் மனித தேவனின் மாசற்ற இரத்தத்தால் நிரப்பப்படுகிறது. மூர்க்கமுள்ள போர்ச் சேவகர் சலித்துக் களைத்துப் போகுமட்டும் இந்த வாதை நீடிக்கிறது.

சேசுநாதரோ மவுனமாகவும், பொறுமையோடும் அந்த அடிகளைப் பாவிகளாகிய நம்மை நினைத்து ஏற்றுக் கொள்கிறார். பூங்காவனத்தில் மரண மட்டும் ஆத்தும துக்கத்தை அடைந்த நம் ஆண்டவர், இப்பொழுது மரணமட்டும் சரீர வேதனையை அனுபவிக்க சித்தமாகிறார். ஆனால் இந்த முற்றத்திலேயே சேசுவை மரணமடைய விட்டுவிடுவது யூதர்களின் எண்ணமல்ல. அடிமை களின் அவமானச் சிலுவை மரணத்தை அவருக்குத் தர வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்கள். ஆதலால் அங்கமெல்லாம் நொந்து தவிக்கும் நம் ஆண்டவரைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

ஆண்டவர் தமது சொந்தத் திரு இரத்த வெள்ளத்திலேயே விழுந்து கிடக்கிறார். நம் ஈனப் பாவங்களுக்குத் தகுந்த பரிகாரம் செய்யத் திருவுளமான தேவசுதன், இதோ சரீர இச்சைகளால் மனிதர்கள் கட்டிக்கொள்ளும் சகல பாவங்களுக்காகவும், தம் பரிசுத்த சரீரத்தில் வாதிக்கப்பட்டுப் பரிகாரம் செய்கிறார். நம் சரீரத்திற்கு அவரது சரீரம் பிணைத்தொகையானது. நம் பாவங்களுக்கு அவர் தபசு செய்கிறார். சேவகர்கள் கசைகளால் அவரது திருச்சரீரத்தை வருத்தினார்கள். யூதர்கள் தேவ தூஷணங்களால் அவர் மனதை வருத்தினார்கள். நாமோ, நமது பாவங்களால் அவருடைய இருதயத்தை வருத்தினோம்.