இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 3-ம் தேதி.

இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 3-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயப் பக்தியால் விளையும் பயன்கள்.

இயேசுவின் திரு இருதயப் பக்தியை கிறிஸ்தவர்கள் எல்லா இடங்களிலும் எவ்வளவு விடா முயற்சியோடும் நம்பிக்கையோடும் பின்பற்றி செபிக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையைத் திருச்சபையின் முக்கியமான திருநாட்களில் ஒன்றாகப் பாவித்து பல பங்குகளில் மிக பக்தி ஆடம்பரத்தோடு கொண்டாடுகிறார்கள். முதல் வெள்ளிக்கிழமைகளில் பல கிறிஸ்தவர்கள் நற்கருணை பெற்றுக் கொள்கிறார்கள். சிலர் இதற்காக மிகத் தொலைவிலிருந்து வர வேண்டியதிருந்தாலும் தங்கள் முயற்சியை இயேசுவின் திருஇருதய அன்புக்காக சந்தோஷமாய் ஒப்புக்கொடுக்கிறார்கள். இந்த உன்னத பக்தி முயற்சிகளையும் இவ்வளவு அன்பு ஈடுபாட்டையும் பார்க்கும்போது இயேசுவின் திருஇருதயம் எவ்வளவோ ஆறுதலடைகிறது!

இயேசுவின் திரு இருதயப் பக்தியால் ஏற்படும் அபரிமிதமான பலன்களைப்பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் மதப் போதகர்கள் மற்றும் விசுவாசிகளுடைய ஆத்ம மீட்புக்கு திருஇருதயப் பக்தி மிகவும் உபயோகமாக இருக்கும் என்று புனித மார்கரீத் மரியாவுக்கு ஆண்டவர் தாமே காட்சியில் அறிவித்துள்ளார்.

துறவற சபைகள்:

இயேசுவின் திருஇருதயப் பக்தியை அதிகரிக்கச் செய்ய இயேசு சபைக்குருவான அருட்திரு. குருவாசே ஆவலாயிருந்தார். அவருக்கு புனித மார்கரீத் மரியா பின்வருமாறு எழுதினார். தூய இருதயத்திற்கு தங்களை முழுவதும் ஒப்புக்கொடுத்து தங்களாலான ஆராதனை வணக்கமும், அன்பும் காட்டுகிறதைவிட, புண்ணிய பாதைக்கு அதிக உறுதியான வழி வேறில்லை. எந்த மடங்களில் திரு இருதயத்துக்கு சிறப்புமிக்க ஆராதனை நடந்து வருகிறதோ, அங்கே பிறரன்பு சகோதர ஒன்றிப்பு ஆகியவை திருஇருதயத்தின் பராமரிப்பில் உண்டாகும்.

இயேசுவின் திரு இருதயமானது அளவிடமுடியாத தேவ வரப்பிரசாதங்களும், ஆசீர்வாதங்களும் நிறைந்த ஞானக் களஞ்சியம், ஆசீர்வாதங்களும் நிறைந்த ஞானக் களஞ்சியம். இந்த திரு இருதயப் பக்தியைப்போல் மிக விரைவில் மிக மேலான புண்ணிய செயல்களுக்கு ஆத்துமாவை அழைத்துக் கொண்டு போகக்கூடிய பக்தி முயற்சி வேறெதுவுமில்லை.

விசேஷமாய் துறவற வார்த்தைப்பாடு கொடுத்தவர்கள் இந்தப்பக்தியை அனுசரிக்கும்படி தூண்டுங்கள். இந்தப் பக்தியால் அவர்கள் எவ்வளவு பலன் அடைகிறார்களென்றால், தளர்ந்து போன பழைய ஞான சுறுசுறுப்பைத் திரும்பப் புதுப்பிக்கவும், ஒழுங்கில் அசட்டைத்தனமாய் வாழ்ந்த மடங்களில் ஒழுங்கை நன்றாய் கடைப்பிடிக்கச் செய்யவும், ஏற்கெனவே சபை ஒழுங்கைச் சரியாய் அனுசரிப்பவர்களை மோட்சத்தின் முடியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இப்பக்தி ஒன்றே போதுமானது.

குருக்கள்:

புனித மார்கரீத் மரியா சொல்லுகிறதாவது : "கல்லான இதயத்தை இளகச் செய்யும் வரத்தை ஆத்ம மீட்புக்காக உழைக்கிற வேத போதகர்களுக்கு அளித்தருளுவோமென்று மீட்பர் எனக்குத் தெரிவித்திருக்கிறார். திரு இருதயத்தின் பேரில் அவர்களுக்கு உருக்கமான பற்று இருந்தால் ஆச்சரியப்படத்தக்க வகையில் உழைப்பார்கள். அவர்கள் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளுக்கு திருஇருதயமானது தமது அன்புச்சுடரால் மிகவும் கடினமான இருதயங்களை இளக்கி, ஊடுருவி, தேவ அன்பினால் பற்றி எரியச் செய்யும் சக்தி அவ்வார்த்தைகளுக்கு உண்டாகும். இவ்வகையாய் மிகவும் அக்கிரமம் நிறைந்த ஆத்துமங்கள் மீட்பு விளைவிக்கும் ஒப்புரவு வழிக்கு வந்து சேருவார்கள்."

பொதுநிலையினர் :

புனித மார்கரீத் மரியா பொதுநிலையின்ரைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:

அவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப அவசியமான எல்லா உதவிகளையும் இந்த இன்பந்தரும் திரு இருதயப் பக்தியால் கண்டடைவார்கள். தங்கள் குடும்பத்தில் சமாதானமும், தங்கள் அலுவல்களில் ஆசீர்வாதமும் இப்பக்தியால் உண்டாகும். தங்கள் வாழ்நாளிலும் முக்கியமாய் மரண வேளையிலும் இத் திருஇருதயம் அடைக்கலமாயிருக்கும்.

"திரு இருதயத்தை மற்றவர்களும் அறிந்து ஆராதிக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்த பலருடைய பெயரைத் தமது இருதயத்தில் என்றும் அழியாத விதமாய் எழுதியிருந்ததை நான் பார்க்கும்படிச் செய்தார்.

ஆதலால் இயேசுவின் திரு இருதயப் பக்தியானது இவ்வுலக வாழ்க்கையில் ஆசீர் பொழியும் ஊற்றாகவும், மறுமையில் நித்திய மகிமைக்கு தொடக்கமாகவும் இருக்கிறதாக மேற்சொன்ன வாக்குத்தத்தங்களால் அறிந்து கொள்ளலாம். மற்றெந்த பக்தியையும் விட இந்தப் பக்தியானது இயேசுவின் அன்பிற்காக நமது தீயகுணங்களில் வெற்றி கொள்ளவும், புனித தன்மைக்கு அவசியமானப் புண்ணியங்களைத் தேட தாராள குணத்தோடு நாம் உழைக்கவும் நம்மைத் தூண்டி ஏவுகிறது. இயேசுவின் திருஇருதயத்திற்கு ஏற்றப் புண்ணியங்களை நாம் பின்பற்றும்படி நமது இருதயத்தைத் தூண்டி ஏவும்போது படைக்கப்பட்ட பொருட்களிலிருந்து நமது இருதயப் பற்றுதல்களை ஒறுக்கவும், கடவுளுடைய அளவற்ற அன்பையும், பரிசுத்தத்தனத்தையும் மாசுபடுத்தக்கூடிய எந்தத் துர்க்குணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றவும் உதவியாயிருக்கிறது. வருகிற சகல துன்பங்களையும் தாராள குணத்தோடு ஏற்றுக் கொண்டு, ஒறுத்தல் முயற்சி செய்து, நமது இருதயத்தை இயேசுவின் திருஇருதயத்துக்கு ஒத்தாகக்கூடிய சகல புண்ணியங்களையும் செய்ய இந்த பக்தி மிகவும் ஏதுவாயிருக்கிறது.

வரலாறு :

மறவன் தேசத்தில் வேதம் போதித்துக்கொண்டிருந்த ஓர் போதகரிடம் ஒருநாள் ஒரு எளிய பெண் வந்து வணக்கம் சொன்னாள். அவளிடமிருந்த புத்திசாலித்தனத்தையும், பக்தியையும் கண்டு குருவானவர் மகளே, உனது ஊர் எது எனக் கேட்க, அந்தப் பெண், "நான் எந்த நேரம் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் ஊர். என்தாய் தகப்பன் இறந்து விட்டனர். என் வாழ்க்கைக்கு எது கிடைத்ததோ அதைக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன்" என்றாள். அதற்கு குருவானவர், நீ என்ன வேலை செய்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அவள் "நான் நாள்தோறும் விறகு பொறுக்கி, சந்தையில் கொண்டு போய் விற்றுக் கொண்டு வருகிறேன்" என்றாள். இதில் உனக்கு வருமானம் உண்டா? என குருவானவர் கேட்க, சில சமயத்தில் 50 பைசா இலாபம் கிடைக்கும்; மற்ற நாட்களில் ஒன்றும் கிடைக்காது என அவள் பதிலளித்தாள். அப்படியானால் நீ சாப்பிடுகிறது எப்படி? என குருவானவர் வினவ, “சாப்பாடு இல்லாத நாட்களில் ஒருசந்தி இருந்து இயேசுவின் திரு இருதய அன்புக்காகவும், கிறிஸ்தவரல்லாதவர் மனந்திரும்புவதற்காகவும் ஒப்புக் கொடுக்கிறேன்" என்றாள். இப்பதிலைக் கேட்ட குருவானவரின் இதயம் இரக்கத்தால் துடிக்க உடனே தன் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுத்தார். இந்த ரூபாயைக் கண்டதும் ஏதோ புதையலைக் கண்டதுபோல் அவளுடைய இதயம் மகிழ்ச்சியடைந்தது. தந்தையே என் கணவர் இறந்து மூன்று வருடமாகிறது. எனக்கு எப்போது ஒரு ரூபாய் கிடைக்கும்; அவரது ஆன்ம இளைப்பாற்றிக்கு திருப்பலி நிறைவேற்றக் கொடுக்கலாம் என எதிர்பார்த்தேன். எனவே, தயவு செய்து இந்த ரூபாயை வாங்கிக் கொண்டு திருப்பலி நிறைவேற்றுங்கள். நான் இயேசுவின் திருஇருதயத்திற்கு தபசு, ஒருசந்திக் கடைப்பிடித்து வருவேன் என்றாள். இதைக் கேட்டு குருவானவர் மகளே, இந்த ரூபாயை உன் உணவிற்காக வைத்துக்கொள்; நான் நாளைக்கு உன் கருத்துக்காக திருப்பலி செய்து ஒப்புக்கொடுப்போம் என்றார்.

இயேசுவின் திருஇருதயப் பக்தர்களுக்கெல்லாம் இந்த ஏழைப்பெண் முன்மாதிரியாய் இருக்கிறாள். திருஇருதயத்திற்கு அன்புச் செய்கிறேனென்று காட்டுவதற்கு நாமும் சில ஒறுத்தல் முயற்சிகள் செய்து ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இயேசுவின் திரு இருதயப் பக்தியானது நம்முடைய சகோதரர்களுடைய ஆத்ம மீட்புக்காக நம்மைத் தூண்டுவதோடு இம்மையிலும் மறுமையிலும் திரு இருதயத்தினோடு அன்பில் ஒன்றித்திருக்கவும் செய்யும். செயல் :

நமது இதயத்திலும், பிறரது இதயத்திலும் இயேசுவின் திரு இருதயம் எப்போதும் வாழ நம்மாலான முயற்சி எடுத்துக் கொள்வோமாக. இரவு படுக்கைக்குப் போகுமுன் அத்திருஇருதயம் அன்று நமக்கு செய்தருளிய சகல உபகார சகாயங்களுக்கும் நன்றியறிந்த புகழ் செலுத்திய பிறகு நாம் நமது சிந்தனை, வாக்கு, செயல்களால் கட்டிக்கொண்ட சகல பாவங்களையும் நினைத்து வருத்தப்பட்டு பிரதிக்கினை செய்து அத்திரு இருதயம் அவைகளை சுத்தப்படுத்தும்படியாக உருகி மன்றாடுவோமாக!

செபம் :

இயேசுவின் திருஇருதயமே என் நம்பிக்கையெல்லாம் உமது பெயரில் வைக்கிறேன்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.