தேவமாதாவின் வணக்கமாதம் - மே 31

நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுப்பதின்பேரில்!

ஒப்புக்கொடுத்தலின் இயல்பு.

நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக் கொடுத்தலானது இந்தப் பரம நாயகிக்குப் பொருந்தும்படியாகவும், நமக்குப் பயனுள்ளதாய் இருக்கும் படியாகவும் உண்மையாய் இருக்கவேண்டும். குறையில்லாமல் இருக்க வேண்டும். நிலையாய் இருக்க வேண்டும். அந்தப் பரம நாயகிக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, உட்கருத்தும் பக்தி வணக்கமுமின்றி, நாவினால் மட்டும் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல், உறுதியான மனதோடும் பக்தி வணக்கம் நிறைந்த, சிநேகத்தோடும் அன்னைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். மீளவும் நம்மிடத்திலிருக்கிற புத்தி மனதையும் சக்திகளையும், நினைவு ஆசைகளையும், வார்த்தைக் கிரிகைகளையும் நம்முடைய மேலான ஆண்டவளும் உன்னத இராக்கினியுமாய் இருக்கிற தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதல்லாமலும் இந்தப் பரம நாயகிக்கு நம்மை ஒப்புக்கொடுக்க பின்வாங்காமல் ஞானப் பிள்ளைகளைப் போலவும் குடிமக்களைப் போலவும், ஊழியர்களைப் போலவும் எண்ணி எப்பொழுதும் நம்மை ஆண்டு பாதுகாத்துவர மன்றாடுவோமாக. தேவமாதாவே உமக்கும் உம்முடைய திரு மைந்தனுக்கும் ஒப்புக் கொடுக்கப்பட்டவர்களாய் உமக்காகவும் அவருக்காகவும் வாழ்ந்து வருவது எவ்வளவு பாக்கியம்!

ஒப்புக்கொடுத்தலின் கடமை.

நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது நாம் அனுசரிக்க வேண்டிய கடமைகளை நன்றாய் ஆராய்ந்து பார்த்து நாம் பரலோக பூலோக இராக்கினியின் பிள்ளைகளும் ஊழியருமாய் இருக்கிறதினால் நமது வாழ்நாள் முழுதும் தேவமாதாவுக்குரிய பக்தி வணக்கத்துடன் சேவித்து நம்முடைய இருதய அன்போடு நம்முடைய அடைக்கலமாக மன்றாடி எங்கும் அன்னையின் மகத்துவ மேன்மை பரவும்படி செய்து மனுமக்கள் எல்லாரும் அன்னைக்குப் பணிவிடை செய்யுமாறு பிரயாசைப்பட்டு அன்னைக்குரிய ஆராதனையை எவ்விடத்திலும் விளங்கும்படி செய்து, புண்ணிய மாதிரிகைகளைச் சமுத்திரையாய்க் கண்டுபாவிப்பதே நமது பேரில் சுமந்த கடனாகும். அதைச் செய்வதற்கு மனமும் உறுதியும் உண்டோ, இல்லையோவென்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒப்புக்கொடுத்தலின் பயன்.

நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுப்பதினால் உண்டாகும் பயனைக் குறித்துப் பக்தியுள்ள ஒருவர் எழுதி வைத்ததாவது: தேவ மாதாவின் பேரில் வைக்கும் பக்தி வணக்கம் எண்ணிலும் சொல்லிலும் அடங்காத நன்மைகளை உண்டாக்கும் என்பதற்கு சந்தேகமில்லை. இந்தப் பரமநாயகியிடத்தில் ஏழைகள் செல்வங்களை அடைவார்கள். பிணியாளர் தங்களுடைய வியாதியில் வேண்டிய சுகத்தையும் கல்வி அறிவில்லாதவர்கள் கல்வியையும், பலவீனர் தைரியத்தையும் கஸ்திப்படுகிறவர்கள் தேற்றரவையும் வருத்தப்படுகிறவர்கள் இளைப்பாற்றியையும் கிலேசப்படுகிறவர்கள் அமைதியையும் யுத்தத்தில் அகப்பட்டவர்கள் சமாதானத்தையும் பாவிகள் மனந்திரும்புதலையும் இஷ்டப்பிரசாதத்தையும் நல்லோர் புண்ணிய வழியில் வழுவாமையையும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருக்கிற ஆத்துமாக்கள் மோட்ச பாக்கியத்தையும் அடைவார்கள். இந்த பரம ஆண்டவளுடைய சகாயங்களைப் பெறாதவர் எவருமில்லை. அன்னையின் ஆதரவைப் பெறாத இராச்சியமும் தேசமுமில்லை. பூமியெல்லாம் கிருபையால் நிறைந்திருக்கின்றன. அன்னையின் மாசற்ற இருதயம் இயேசுநாதரின் திருஇருதயம் நீங்கலாக விலையேறப் பெற்றதுமாய் பரிசுத்தமுள்ளதுமாய் சாந்தக் குணமுள்ளதுமாய் கிருபையுடைத்தானதுமாய் இருக்கின்றமையால் சகல சம்மனசுகளையும் மோட்சவாசிகளையும் பார்க்கிலும் அதிக மேன்மையுள்ளதுமாய் நம்மை ஆதரித்துக் காப்பாற்றுவதற்கு விருப்பமுள்ளதுமாய் இருக்கிறது. இந்தக் கிருபையுடைத்தான இருதயத்தினின்று ஓர் வற்றாத ஊரணிபோல் அநேக நன்மைகள் மக்கள் மீது சொரிந்து வருகிறது. ஆனால் இந்தப் பரம நாயகி எல்லோரிடத்தும் இப்பேர்ப்பட்ட கிருபையுள்ளவர்களாய் இருக்கிறதினால் விசேஷமாய்த் தங்களை அன்னைக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் அடையப்போகிற ஞான வரங்களை எவ்வளவென சொல்லவும் முடியாது.

செபம்.

தேவசிநேகத்தின் தாயாரே, உமது திருமைந்தனான இயேசு கிறிஸ்துநாதர் தமது திருப்பிதாவினிடத்தில் எமக்காக மனுப்பேசுவது போல நீர் அடைந்த மீட்பரிடம் எங்களுக்காக மன்றாடுவதற்கு நியமிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர். அவரும் உமது மன்றாட்டுக்களை புறக்கணிக்க மாட்டாதவராதலால் நீர் எல்லாவற்றையும் அடைவதற்கு வல்லபமுள்ளவர்களாய் இருக்கிறீர். ஆதலால் நிர்ப்பாக்கியருக்கு ஆதரவுள்ள உம்மிடத்தில் ஓடிவந்து உமது பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைக்கிறேன். உம்மால் ஆதரிக்கப்பட்டவள் நித்திய நரகத்துக்கு போகிறவளல்ல. அதனால் இவ்வுலகத்தில் இருக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் என்னை கைவிட்டாலும் நீர் என்னை ஆதரித்து காப்பாற்றுவீராகில் கரையேறுவேன் என்கிறதே மறுக்கப்படாத சத்தியமாம். ஓ! தேவ அன்னையே உம்மை நம்பியிருக்கிறேன். இந்த நம்பிக்கையோடு மரித்து இரட்சணியத்தை அடைவேனென்று நம்புகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிற எங்களைக் காப்பாற்றி இரட்சியும் தாயாரே.

முப்பத்தி ஒன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

இந்த நாளை தேவமாதாவைக் குறித்து ஓர் பெரிய நாளைப்போல கொண்டாடுகிறது.

புதுமை!

தேவமாதாவின் விசேஷ கிருபையினால் அல்போன்ஸ் இராத்திஸ் போன் மனந்திரும்பின நிகழ்ச்சி திருச்சபையெங்கும் பெயர் பெற்றதாகும். அவர் யூத குலத்தில் பிறந்து யூதர்களுடைய வேதத்தில் வளர்ந்து அவ்வேதத்தில் மிகவும் பற்று உடையவராய் உறுதியாக இருந்தார். அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்பொழுது தன் அண்ணன் மனந்திரும்பி சத்திய வேதத்தில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றதின் காரணமாக அதிக அகங்காரம் கொண்டு சத்திய வேதத்தை அளவு கடந்து தூஷணிக்கத் துணிந்தார். ஆனாலும் இந்தச் சகோதரனும் தேவமாதா இருதயச் சபையார் எல்லாரும் அவருக்கு நல்ல புத்தி உண்டாக்குமாறு இடைவிடாது வேண்டிக் கொண்டிருந்தார்கள். சில நாட்கள் கழித்து அல்போன்ஸ் மற்ற தேசங்களை பார்க்க புறப்பட்டு உரோமபுரி வந்து சேர்ந்தார். அவ்விடத்தில் இருக்கும்பொழுது தனக்கு அறிமுகமான பக்தி விசுவாசமுள்ள ஒரு பிரபுவிடத்தில் போனார். அந்த பிரபு அவர் சொல்லுகிற தேவ தூஷனங்களையும் அருவருப்பான பேச்சுக்களையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு அவரை நோக்கி நீர் சொன்ன யாவும் இருக்கட்டும் ஆனால் ஒளிவு மறைவின்றி ஓர் பரீட்சையை செய்யத் துணைவிரோ? என்றார். அதற்கு அவர் அது என்னவென்று கேட்க, பிரபு நாம் தமக்குக் கொடுக்கப்போகும் தேவமாதாவின் அற்புத சுரூபத்தை (Miraculousmedal) உமது கழுத்தில் அணிந்து கொள்ளும் என்றார். யூதன் நகைத்துச் சிரித்து தூஷணித்து விக்கினம் செய்தாலும் சுரூபத்தை வாங்குமாறு பிரபு அவரைச் சம்மதிக்கச் செய்தார். அதன்றியும் அவர் தினமும் புனித பெர்நர்து செய்த செபத்தை காலை மாலை செபிக்கும்படி செய்தார். யூதன் அந்த செபத்தைக் கட்டாயத்தின் பேரில் செபித்து வந்தார்.

இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர் அவர் மேற்சொல்லிய பிரபுவுடன் புனித பெலவேந்திரர் கோவிலுக்குச் சென்று அதிலுள்ளவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மோட்சத்தின் ஓர் மகா பிரகாசம் விளங்கி அவர் மனதில் ஞான ஒளியானது பிரகாசிக்கும்படியாய்ச் சர்வேசுரனுக்கு சித்தமானதினால் சொல்லிலடங்காத பிரகாசமான காட்சியைக் கண்டார். உடனே அவர் முழுவதும் மனந்திரும்பி அதிக சந்தோஷத்தை அடைந்து பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வெள்ளம்போல் கண்ணீர் விட்டு தரையிலே கிடந்து மிகுந்த மனஸ்தாபத்தோடு அழுது கொண்டிருந்தார். அப்பொழுது ஓர் முக்கிய அலுவல் காரணமாக வெளியே சென்றிருந்த மேற்சொல்லிய பிரபு கோவிலுக்கு வந்தார். அப்பொழுது இந்த பாவி சாஷ்டாங்கமாக பீடத்தண்டையில் விழுந்து அழுகிறதைக்கண்டு அதிசயித்து அவரை எழுப்பி அதென்ன விஷயமென்று கேட்டார். அதற்கு அவர் தேவமாதாவின் திருஇருதயச் சபையார் எனக்காக வேண்டிக்கொண்டார்களென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் என்னை எங்கே கூட்டிக்கொண்டுபோக விரும்புகிறீர்களோ அங்கே என்னைக் கூட்டிக்கொண்டு போங்களென்றார். ஆனால் நீர் கண்ட காட்சி என்னவென்று பிரபு கேட்க அவர் தன் கழுத்தில் போட்டிருந்த தேவமாதாவின் சுரூபத்தை எடுத்து முத்தமிட்டு அதின்மேல் கண்ணீரை விட்டு சர்வேசுரன் எவ்வளவோ நன்மையுள்ளவராயிருக்கிறார். அவர் மகா அன்புள்ளவராதலால் பெரும் பாவியாகிய என்பேரில் இரங்கி என் இருதயத்தில் வரப்பிரசாதத்தின் ஆனந்தமாகிய பூரண வெள்ளம் பெருகச் செய்தார். நான் இப்போது எவ்வளவு பாக்கியமுள்ளவனா யிருக்கிறேன்! இப்பேர்ப்பட்ட கடவுளை அறியாதவர்கள் எவ்வளவோ நிர்ப்பாக்கியர்களாய் இருக்கிறார்களென்று நெஞ்சில் பிழை தட்டிக் கொண்டு சந்தோஷமான வார்த்தைகளைப் பேசி, நான் சீக்கிரத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும். குருவானவரிடத்தில் என்னை கூட்டிக் கொண்டு போங்கள் என்றார். குருவானவரிடத்தில் சேர்ந்தவுடனே முழங்காலிலிருந்து தன் கழுத்தில் போட்டிருந்த தேவ மாதாவின் சுரூபத்தை எடுத்து காண்பித்து மிகுந்த சந்தோஷத்துடனே இத்தாயாரைப் பார்த்தேன் என்று கூவினார். பின்பு தம் மனமகிழ்ச்சியை சற்றுநேரம் அடக்கி குருவானவரைப் பார்த்து சுவாமி! நான் இக்கோவிலில் பிரவேசித்து அதிலுள்ளவைகளைப் பார்த்து கொண்டிருக்கும்போது திடீரென்று மிகவும் திகில் கொண்டவன் போல சொல்லப்படாத பயங்கரத்துக்குள்ளானேன். உடனே என் கண்களை உயர்த்திப் பார்த்தேன். அப்பொழுது கோவில் முழுவதும் இல்லாதது போல எனக்கு ஒளி தோன்றினது. பின்பு புனித மிக்கேல் சம்மனசானவருடைய பீடத்தின்மேல் மாத்திரம் அவருக்கப்படாத ஓர் பிரகாசம் விளங்கிற்று. அந்த பிரகாச வெள்ளத்தின் நடுவில் மகிமை உள்ளவளுமாய் குளிர்ந்த பிரகாச ஜோதியுள்ளவளுமாய் மனோவாக்குக் கெட்டாத பிரதாபத்தோடு தயையும் இரக்கமும் நிறைந்தவளுமாய் புனித கன்னிமரியம்மாள் இச்சுரூபத்திலிருக்கிற மேரையாய் எனக்கு நேரில் காட்சியளித்தாள். என்னை நோக்கி நல்லதென்றாற்போல தலை சயிக்கினைக் காட்டி என்னோடு ஒன்றும் பேசாமல் தம்முடைய இரக்கத்தினால் என் மனதில் மெய்யான வேத இரகசியங்களை பதிப்பித்தாள் என்றார்.

மூர்க்கனான யூதனாயிருந்த இவர் நினையாத ஷணத்தில் மனந்திரும்பப்பட்டு ஓர் புத்தகத்தையும் வாசியாமலும் யாதொருவரிடத்தில் படியாமலும் வேத சத்தியங்களை அற்புதமாக அறிந்து முழுமனதோடு ஏற்று தாம் முன்னர் புறக்கணித்து தூஷணித்த வேதத்தை மெய்யான வேதமென்று விசுவசித்து ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று கேட்டார். அவர் விரும்பியவண்ணமே சிறிது நாட்களுக்குப்பிறகு தக்க ஆயத்தத்துடன் ஞானஸ்நானம் பெற்று தான் சேர்ந்த மெய்யான வேதத்தில் உறுதியாய் நடந்ததுமல்லாமல் உலக வாழ்வை அறவே வெறுத்து சந்நியாசிகளின் சபையில் சேர்ந்து பாக்கியமாய் மரித்தார்.

கிறிஸ்தவர்களே! மேற் சொல்லிய புதுமையில் விளங்குவதுபோல தேவமாதாவின் வல்லபமும் கிருபையும் மட்டில்லாததாய் இருக்கிறதென்று அறியக்கடவீர்களாக.