எட்டாம் வேத கலாபனை. காலம் : கி.பி. 253 - 260.

நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்திவலேரியன். 
காலம் : கி.பி. 253 - 260.

சக்கரவர்த்தி வலேரியன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளாக கிறீஸ்தவர்கள் அமைதியில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் மக்ரீனுஸ் என்ற வலேரியனுடைய நண்பனின் தூண்டுதலால் அவன் கிறீஸ்தவர்களுக்குப் பாதகமான பிரகடனங்களைச் செய்தான். பெர்சியா நாட்டின் மீது வலேரியன் படையெடுத்தான். அஞ்ஞான தெய்வங்கள் அதற்கு உதவும்படியாக, அவர்களுக்கே வழிபாடு செய்யப் பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். மேற்றிராணிமாரையும், குருக்களையும் நாடு கடத்தி னான். தலைவர்களை அகற்றி விட்டால் மதம் தன்னாலே அழிந்து விடும் என்று நினைத்தான்.

வீண் நினைவு! நாடு கடத்தப்பட்ட தங்கள் ஆயர்களிடம் அதிக மான விசுவாசத்தை மக்கள் காட்டினார்கள்! அந்நிய இடங்களுக்குக் கடத்தப்பட்ட மேற்றிராணிமார்கள் அங்கங்கே திருச்சபையை ஸ்தாபித்தார்கள்!

பல ஆயிரம் கிறிஸ்தவர்களைக் கொன்ற பிறகும் வேதம் அழியாமலிருந்ததைக் கண்ட வலேரியன் 258ல் மேலும் அதிகமான சட்டங்களைப் பிறப்பித்தான். 'தியாக்கோன்மாரும், குருக்களும், ஆயர்களும் உடனே வாளால் கொல்லப்பட வேண்டும், அதிகாரிகளும் வீரர்களும் சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும், அவர்கள் மேலும் பிடிவாதமாயிருந்தால் உயிரையும் இழக்க வேண்டும். அந்தஸ்து உள்ள பெண்கள் நாடுகடத்தப் பட வேண்டும். அரண்மனை ஊழியத்திலுள்ள கிறீஸ்தவர்கள் சிறை செய்யப்பட்டு, அரச தோட்டக் கழனிகளில் வேலைக்கு அனுப்பப்பட வேண்டும்.''

அர்ச். டேனிஸ் என்ற மேற்றிராணியாரும் ரஸ்டிகஸ் என்ற குருவானவரும் எலேயு தேருஸ் என்ற தியாக்கோனும் மோன் மார்ட்டர் என்ற குன்றில் பகிரங்கமாகத் தலை வெட்டப்பட்டார்கள்.

சிரில் என்ற சிறுவன் இந்த வேத கலகத்தில் செசாரையா என்னும் இடத்தில் சிரில் என்றொரு சிறுவன் இருந்தான். இடைவிடாமல், "சேசுவே! சேசுவே!" என்று உச்சரிப் பான். அத்திருப்பெயர் அவன் நாவிற்கு மதுரமான இனிமையாக இருந்தது. அவன் வீட்டிலுள்ள விக்கிர கங்களை வணங்க மறுத்ததால், அவன் தந்தை பல இம்சைகளையும் செய்து அச்சிறுவனை வெளியே துரத்தி விட்டார். தேச அதிகாரி சிரிலை அழைத்து, ''சிறுவனே! உன் தந்தையிடம் நான் பேசி உன்னை உன் சொந்த வீட்டில் சேர்த்து விடுகிறேன். சேசு என்ற மூடப் பக்தியை மட்டும் விட்டு விடு" என்று நயந்து கூறினான்.

அதற்கு சிறுவன் சிரில் : ''கடவுள் என்னை ஏற்றுக் கொள்வார். என் தந்தையுடன் இருப்பதை விட அவருடன் நான் அதிக நலமாயிருப்பேன். என் தந்தை வீட்டை விட்டு விரட்டியது பற்றி நான் வருந்தவில்லை . அதைவிடப் பெரிய அழகிய வீடு எனக்குக் கிடைக்கும். சாக நான் பயப்படவில்லை. ஏனென்றால் அதற்குப் பின் அதிக மேலான வாழ்வு உள்ளது'' என்றான். கடவுளே அவன் வாயால் பேசியது போலிருந்தது.

அதிகாரி சிரிலின் கையைச் சுட்டுவித்தான். பெரிய தீயை மூட்ட உத்தரவிட்டான். சிரில் அதைப் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றான். தீ மூண்டெரியவும் வேகமாய் அதை நோக்கி நடந் தான் சிரில். அவன் நெருப்பில் விழ விடாமல் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அதிகாரியின் முன் கொண்டு நிறுத்தினார்கள்.

'பையா, உனக்கு நெருப்பு என்னவென்று தெரியும். வாளும் என்னவென்று தெரியும். நல்ல பையனாயிரு. உன் அப்பாவுடன் உன் வீட்டுக்குச் செல்ல வேண்டாமா?" என்றான் அதிகாரி.

அதற்கு சிறுவன் சிரில் கூறிய பதில்: ''என்னை நீங்கள் தீயில் விழ விடாமல் தடுத்து விட்டதை நான் விரும்பவில்லை. நான் நெருப்புக்கும் வாளுக்கும் பயப்படவில்லை. மேலான வீட்டுக்குப் போக விரும்புகிறேன். கடவுள் என்னைத் தம் வீட்டில் வரவேற்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். உடனே என்னைக் கொல்லுங்கள். அவரிடம் நான் போக வேண்டும்.''

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற மக்கள் அழுதார்கள்! சிரில் அவர்களைத் தேற்றிய படியே கொல்லப்படும்படி இழுத்துச் செல்லப் பட்டான்.

ஆச்சரியமான சிறுவன் சிரில்! வரப்பிரசாதத்தின் வலிமைதான் என்ன!