தேவமாதாவின் வணக்கமாதம் - மே 11

தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்திக்கிறார்!

அச்சமயத்தில் தேவமாதாவிடம் விளங்கின மூன்று பிரதான புண்ணியங்கள்!

அதிசயத்துக்குரிய தேவ சுறுசுறுப்பு!

எவ்வித பாக்கியமும் பெற்ற திருக்கன்னிகை தம்முடைய திரு உதரத்தில் அவதரித்த இரட்சகரைத் தரித்தவுடனே அவர் பூலோகத்தில் எளியச் செய்ய வருகிற தேவ அக்கினியால் ஏவப்பட்டவர்களாய் உடனே மலைநாட்டுக்குத் தம்முடைய சுற்றத்தினாராகிய எலிசபெத்தம்மாளிடத்தில் தீவிரித்துப் போனார்கள். அந்த அதிசயத்துக்குரிய தேவ கன்னிகை தம்முடைய திரு இருதயத்தில் எரிகிற தேவ சிநேகத்தின் ஆவலைக் கொண்டு எவ்வளவு சுறுசுறுப்புடன் அதற்குச் சம்மதித்தார்கள் என்று தியானிப்போம். தூர பயணத்தை மேற் கொண்டாலும் வழிப் பயணம் வருத்தமும் ஆபத்தும் உள்ளதாய் இருந்தாலும், அன்னை பின்வாங்காமல் அதிக வேகத்தோடு சர்வேசுரன் சித்தத்தின்படியே இரட்சகருக்கு அர்ச். அருளப்பருடைய திருத்தாயாரைச் சந்திக்கத் தீவிரித்துப் போனார்கள். தேவ ஊழியத்தில் சுறுசுறுப்புள்ளவனுடைய அடையாளம் இதுதான். அவன் தேவகிருபையின் ஏவுதலுக்கு அமைந்து ஞான சந்தோஷத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் செய்து தேவ நீதியின் உன்னதமான வழியில் முழு மூச்சுடன் நடந்து வருவான். தேவ ஊழியத்தில் அசட்டை உள்ளவனோவென்றால் புண்ணிய நெறியில் உறுதியாக நடவாமல் வருத்தத்தோடும் கஸ்தியோடும் தேவ ஊழியத்துக்கு அடுத்தவைகளை நிறைவேற்றுவான். இப்போது நீங்கள் தேவ ஊழியத்தில் சுறுசுறுப்புள்ளவர்களோ அல்லது அசட்டையுள்ளவர்களோ என்று பாருங்கள். அந்த ஞான அசட்டைத்தனமானது எவ்வித தீமைகளுக்கும் இடங்கொடுக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை.

மிகுந்த மனத்தாழ்ச்சி!

இந்தப் பரம கன்னிகை தேவமாதாவாயிருக்கிறதினால் சகல உலகங்களுக்கும் இராக்கினியாய் எல்லா மனிதருடையவும் வான தூதர்களுடைய வணக்கத்துக்கும் ஊழியத்துக்கும் உரியவர்களாய் இருந்தார். ஆயினும் அன்னை அர்ச். எலிசபெத்தம்மாளைச் சந்தித்து அவர்களுக்கு தம் உதவிகளை வழங்க அதிசயத்துக்குரிய மனத் தாழ்ச்சியுடன் பணிவிடை செய்ய தானே முன் வந்தார்கள். அன்னை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருந்த போதிலும் எல்லா பெண்களிலும் மேலான அந்தஸ்தை அடைந்திருந்த போதிலும் எவருக்கும் கீழாக தம்மைத் தாழ்த்துகிறார்கள். இந்தப் பரம நாயகியின் நடத்தைக்கும், நம்முடைய நடத்தைக்கும் எவ்வளவு பாதூர வித்தியாசம்! அன்னையுடைய மனத்தாழ்ச்சிக்கும் நம்முடைய ஆங்கார அகந்தைக்கும் எவ்வளவு வித்தியாச வேற்றுமை எண்ணிக்கைக்குள் அடங்காத சுகிர்த நன்மைகளைப் பெற்று எல்லா சிருஷ்டிகளிலும் உயர்ந்தவர்களாய் இருந்தபோதிலும் தம்மைப் பெருமையாய் எண்ணாமல் எல்லாருக்கும் முன்பாக தம்மை தாழ்த்த விரும்புகிறார்கள். எவ்வித பாவ அசுத்தங்களாலும் நிறைந்த நாமோவென்றால் அகந்தையான பெருமையைக் கொண்டு எல்லாருக்கும் முன்பாக மகிமையுடன் விளங்கவும் வாழ்த்தப்படவும் விரும்புகிறோம்.

சுயநலமற்ற பிறர் சினேகம்!

தேவமாதா அரச். எலிசபெத்தம்மாளிடத்தில் தங்கின பொழுது செய்த புண்ணியங்களையும் காண்பித்த சுகிர்த மாதிரிகைகளையும் சொல்லுந்தரமன்று, மிகுந்த அன்போடும் சுறுசுறுப்போடும் அர்ச். எலிசபெத்தம்மாளை வணங்கி, அன்னைக்குரிய சகல உதவிகளையும் செய்து கொண்டு வந்தார்கள். நாமும் அந்த தேவ இராக்கினியைக் கண்டு பாவித்து உண்மையான அன்புடன் மற்றவர்களுடைய அவசரங்களில் உதவவும், உதவி செய்யவும், மிகுந்த அன்போடு அனைவரையும் சிநேகிக்கவும், முயற்சியுள்ள பிரியத்துடனே நிர்ப்பாக்கியருக்குத் தக்க உதவி செய்யவும், பின்வாங்காத சிநேகத்துடன் இடைவிடாமல் புறத்தியாரைக் காக்கவும், ஞான கருத்துடனே புறத்தியாரிடத்தில் சர்வேசுரனை நோக்கவும் கடவோம்.

செபம்.

பரிசுத்த கன்னிகையே! நீர் உம்முடைய சுற்றத்தினராகிய அர்ச். எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும்போது அன்னை உம்முடைய வார்த்தை என் காதிலே விழுந்தவுடனே என் வயிற்றிலிருக்கிற என் பிள்ளை மகிழ்ச்சியினால் துள்ளினதென்று அகமகிழ்ந்து உச்சரித்தார்கள். ஓ! என் தாயே, உமது திருவாக்கியத்தைக் கேட்பேனென்று உறுதியாய் நம்புகிறேன். ஆனால் அந்த அதிஷ்டம் எனக்கு அனுகூலமாகட்டும். இந்தக் கண்ணீர் கணவாயிலே உமது திருப்பெயரை உச்சரிக்கும் பொழுது என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் உருகிப் போகக்கடவது. மரியாயே என்னும் திருநாமமே, என் இருதயத்தில் எப்போதும் வாசம் செய்யும், என் வாக்கில் எப்போதும் வாரும், என் சந்தோஷமாயிரும், என் ஆதரவாயிரும், என் பாக்கியமாயிரும், மரியாயே என்னும் திருநாமமே, உம்முடைய அடைக்கலத்தில் ஒருவனாகிலும் அவநம்பிக்கையாய் இருக்கமாட்டான்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! தேவமாதாவே, மெய்யான சர்வேசுரனான சேசுக்கிறிஸ்துநாதர் பேரில் என்னுடைய இருதயம் தேவசிநேகத்தால் பற்றி எரியச் செய்தருளும்.

பதினொன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

தங்களுக்குள்ளே பகை வர்மமாயிருக்கிறவர்களைச் சமாதானப்படுத்துகிறது.

புதுமை!

எத்தேசத்தின் ஜனங்களும் அப்பட்டமானத்தின் குடிகளும், எவ்வூரின் பிரஜைகளும் பழங்காலம் தொட்டு பரிசுத்த கன்னிகையின் மேல் பக்தியாயிருந்து தங்களுடைய நாடுகளில் திருத்தலங்களையும், தங்களுடைய பட்டணங்களில் பிரமாண்டமான கோவில்களையும், தங்களுடைய கோவில்களில் அழகான பீடங்களையும் அமைத்து இந்தப் பரமநாயகியை மகிமைப்படுத்துவதை நாம் அறிவோம். ஆனால் தேவமாதாவின் மீது வைத்த பக்தி விசுவாசத்தில் இத்தாலிய தேசத்தார் தலைசிறந்து விளங்குகின்றனர். திருச்சபைக்குத் தலையும் அஸ்திவாரமுமாய் இருக்கிற உரோமாபுரியில் இத்தகைய பக்தி விசுவாசம் மிகுதியாய் விளங்குகிறதைக் காண்போம். அதுவும் அதிசயமல்ல; எல்லா வீடுகளிலும் தேவமாதா படமும், எல்லா தெரு வீதிகளிலும் தேவமாதாவின் சுரூபங்களும் அலங்காரமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதுமன்றி அப்பட்டணத்தில் மாத்திரம் பரம நாயகியின் பெயரால் 46 கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த 46 கோவில்களிலும் ஆண்டுதோறும் பிரபல்யமான திருநாள் கொண்டாடப்படும். ஆனால் அந்தக் கோவில்களுக்குள்ளே அதிகம் பேர்பெற்ற கோவில் மரியா மாஜோரென்னும் தேவமாதா கோவிலாம் இந்தக் கோவில் ஸ்தாபித்த விதம் வருமாறு :

உயர்ந்த குலத்தவரான பத்திரிசியுஸ் என்னும் அருளப்பரும் அவரது மனைவியும் தங்களுக்கு பிள்ளைகள் இல்லாததினால் தங்களுடைய செல்வங்களையெல்லாம் தேவமாதாவுக்குச் சுதந்தரமாக்க விரும்பினார்கள். ஆகவே அவர்கள் இடைவிடாது தேவநாயகியை நோக்கி எந்த தருமத்துக்கு இந்த சொத்துக்களை செலவழிக்க வேண்டுமென்று தெரிவிக்கும்படியாக அன்னையை மன்றாடினார்கள். பரிசுத்த கன்னிகை அவர்களுடைய மன்றாட்டுக்கிரங்கி கோடை காலத்தில் ஓர் இரவில் பட்டணத்திலுள்ள ஒரு சின்ன மலையில் உறைந்த பனி அற்புதமாய் பெய்ய செய்தாள். அதே இரவில் அருளப்பருக்கும், அவருடைய அருமைப் பத்தினியாருக்கும், உலத்தில் பன்னினாவிற்கு இந்த பாப்பானவருக்கும் தோன்றி, எஸ்கூலினுஸ் என்னும் மலையில் உறைந்த பனியால் மூடப்பட்டிருக்கும் இடத்தில் நமது பெயரால் ஓர் கோவில் கட்ட வேண்டும் என்றாள். காலையில் பாப்பானவர் எண்ணிக்கையில்லாத ஜனங்களோடும் திரளான குருக்களோடும் குறித்த இடத்துக்கு வந்து அற்புதமாக உறைந்திருந்த அந்த பனிக்கட்டியைப் பார்த்து, இடத்தில் தானே கோவில் கட்ட ஆரம்பித்தார்கள். இவ்விதமாய் இவ்விரண்டு புண்ணியவாளர்களின் சொத்தைக் கொண்டு மிகுந்த அலங்காரமான சிறப்போடு கோவில் கட்டப்பட்டது.

இந்தக் கோவிலில் நம் கர்த்தரான இயேசுக்கிறிஸ்துநாதர் பிறந்த திருக்கொட்டில் மகா பூச்சியமாய் வைக்கப்பட்டிருக்கின்றது. கர்த்தர் பிறந்த திருநாளுக்குப் பின்வரும் நாட்களில் அனைத்துலகிலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், இயேசுக்கிறிஸ்துநாதருடைய அளவிறந்த சிநேகத்தையும் அளவறுக்கப்படாத மனத்தாழ்ச்சியையும் நினைத்து, அத்திருக் கொட்டிலை வணங்க வருவார்கள்.

அக்கோவிலில்தான், சுவிசேஷகரான புனித லூக்காஸ் என்பவர் சித்திர வேலையாய் செய்த தேவமாதாவின் படம் பூச்சியமாய் வைக்கப்பட்டிருக்கின்றது. அதையும் ஏராளமான ஜனங்கள் பார்க்கப் போவார்கள். அத்திருப்படத்தில், பரிசுத்த கன்னிகையின் முகமானது அழகுள்ளதுமாய், தயையுள்ளதுமாய், அடக்கவொடுக்கமுள்ளதுமாய், சாந்தகுணமுள்ளதுமாய், பிரதாபமுள்ளதுமாய் விளங்குகின்றது. அவளுடைய மடியில் இயேசுக்கிறிஸ்துநாதருடைய சாயலைக் காட்டுகிற சுரூபம் ஒன்று அதிசயத்துக்குரிய அழகுள்ளதாய்த் துலங்குகின்றது. அதன் இடது கையில் ஓர் புத்தகம் வைத்துக்கொண்டு வலது கை ஆசீர்வதிக்கிறது போல் தீட்டி இருக்கின்றது. தேவபாலன் தமது திருக்கண்களைத் தம்முடைய தாயின்மீது திருப்பியிருக்கின்ற பாவனையில் அமைந்திருக்கின்றது. ஆகையால் இந்தத் திருப்படத்தைப் பார்க்கிறவர்கள் தங்கள் மனதில் தேவசிநேக அக்கினி அதிகரிக்கிறதாக உணர்கிறார்கள்.

கிறிஸ்தவர்களே! தேவமாதாவினுடைய திருப்படத்தை உங்களிடத்தில் பக்தியாய் வைத்து அடிக்கடி பார்க்கக் கடவீர்கள்.