தேவமாதாவின் வணக்கமாதம் - மே 09

கர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா அனுசரித்த சுகிர்த புண்ணியங்களின் பேரில்!

இந்தத் தேவ இரகசியம் நிறைவேறுமுன்னர் தேவமாதா செய்த நற்கிரிகைகள்

சகல பாக்கியம் நிறைந்தவர்களும் பரம நாயகியுமான கன்னிகை தனது இளம் வயதில் தன்னை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து சுகிர்த புண்ணியங்களின்படி அனுசரித்து வந்தார்கள். சர்வேசுரன் அன்னையை நாளுக்கு நாள் புண்ணிய வழியில் அதிகரிக்கிறதைக் கண்டு மகிழ்ச்சியுற்று தம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற தாயாவதற்கு மென்மேலும் அன்னைக்கு தேவ வரங்களை அளித்துக்கொண்டு வந்தார். அந்தப் பரமநாயகி உலக இரட்சகர் இந்த உலகில் வருங்காலம் கிட்டினதென்று அறிந்து எத்தகைய மகிழ்ச்சி அடைந்தார்களென்று எவராலும் சொல்ல முடியாது. அந்த இன்ப சாகரமான சரித்திரத்தில் சர்வ ஜீவ தயாபார சர்வேசுரனுக்கு முடிவில்லாத தோத்திரம் வருமென்றும், நீண்டநாள் பசாசின் அடிமைத்தனத்திலிருந்த மனிதர் மீட்கப்படுவார்கள் என்றும் அறிந்து, வரப்போகிற பரம இரகசியம் எப்போது நிறைவேறுமோ என்று தமது செபத்திலேயும், தியானத்திலேயும் மிகுந்த ஆசையுடன் சிந்தித்து வந்தார்கள். நாமும் தேவமாதா தம்முடைய பரிசுத்த உதரத்தில் தரித்த தேவனைத் தேவநற்கருணை வழியாக உட்கொள்ளுகிறோம். ஆனால் அன்னை செய்ததுபோல் எவ்வித புண்ணியங்களானாலும் நம்முடைய இருதயத்தைச் சர்வேசுரனுக்குத் தக்க சிம்மாசனமாக இருக்கும்படி அலங்கரித்து வருகிறோமோ? இல்லையே! தமது செபத் தியானம் முதலிய நற்கிரிகைகளில் தேவமாதா நமக்குக் காண்பித்த தேவபக்தியும், சிநேகமும் நம்பிக்கையும் நம்மிடத்தில் விளங்குகிறதோ? அதுவும் இல்லையே. தேவ நற்கருணை வாங்குகிறதில் முதலாய்த் தேவ சிநேக அக்கினியின்றி கல் நெஞ்சராய் இருக்கிறோம்.

சம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன போது அவர்கள் காண்பித்த சுகிர்த மாதிரிகை.

வானதூதர் மங்களவார்த்தை சொன்ன பொழுது தேவமாதா காண்பித்த சுகிர்த புண்ணியங்களை தியானிக்கிறது. மிகுந்த கற்புடையவர்களாய் இருந்ததால் மனிதவுருவாய் காண்பித்த வானதூதரைப் பார்த்து அன்னை அஞ்சினார்கள். குன்றாத விசுவாசமுள்ளவர்களாய் இருந்ததால் தனக்கு அறிவித்த தேவ இரகசியத்தை உறுதியாக நம்பி மகா மனத்தாழ்ச்சியுள்ளவர்களாய் தான் ஆண்டவருடைய அடிமையென்று சொன்னார்கள். குறையற்ற கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருந்ததால் தேவ கட்டளையென்று அறிந்தவுடன், இதோ, ஆண்டவருடைய அடிமையானவள், உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றார்கள். நாமும் தேவதாயின் சுகிர்த மாதிரிகையைக்கண்டு பாவிக்கக்கடவோம். அப்போது விசேஷமாய் நம்முடைய தேவதாயாருக்குப் பிரியமுள்ளவர்களாய் அன்னையுடைய அடைக்கலத்தை அடைவதற்குப் பாத்திரவான்களாய் இருப்போம்.

இந்தத் தேவ இரகசியம் நிறைவேறிய பின்னர் தேவதாய் அனுசரித்த புண்ணியங்கள்.

அந்தப் பரம இரகசியம் நிறைவேறவே, பரிசுத்தாவியின் அற்புதக் கிருபையால் கர்த்தர் அன்னையின் திரு உதரத்தில் அவதாரம் பண்ணின சமயத்தில் திருக் கன்னிகையின் மனதிலிருந்த உணர்ச்சிகளைப் பக்தியுடன் தியானிக்கக்கடவோம். தன்னுடைய குமாரன் அண்டையில் தன்னைத் தாழ்த்தி அவரை மிகுந்த வணக்கத்துடன் ஆராதித்து அவரைத் தன்னுடைய தேவனாகவும் மகனாகவும் நேசித்துத் தன்னை அவருக்கு முழுமையும் ஒப்புக் கொடுத்தார்கள். நாமும் திவ்விய நற்கருணையை வாங்கும்போதும், வாங்கின பின்பும், தேவமாதா நமக்குக் காண்பித்த சுகிர்த மாதிரிகையை அனுசரித்து வருமோமாகில் நமக்கு எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டமாகும்! அவ்வாறு தகுந்த விதமாக திவ்விய நற்கருணையை வாங்குவோமாகில் பரிசுத்தவான்களாய் சீவிப்போம்.

செபம்.

சேசுக்கிறிஸ்துவின் இனிய அன்னையே! ஆண்டவருடைய வார்த்தையானது உமது திரு உதரத்தில் அவதாரம் எடுக்கும் பொழுது நீர் கொண்டிருந்த சுகிர்த உணர்ச்சிகள் சொல்ல முடியாது. சகல நன்மையும் நிறைந்த சர்வேசுரன் உமது திருமைந்தனானார் என்பதை பார்த்து அவரை எவ்வளவான ஆசை பக்தி சிநேகத்துடன் அரவணைத்தீர்! அவரோவென்றால் உமது திருஇருதயம் எவ்வித சுகிர்த புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததினால் அதில் பிரியமாய் வாசம் பண்ணிக் கொண்டிருந்தார். என் பரிசுத்த அன்னையே! நான் என் அன்புக்குரிய சேசுவை என் இருதயத்தில் அடிக்கடி வாங்கினாலும் உமக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! என் இதயம் எவ்வித துர்க்குணமும் நிறைந்தது. அப்படியிருக்க அந்தப் பரிசுத்தமான சர்வேசுரன் என்னிடத்தில் வருகிறதெப்படி? மாசற்ற கன்னிகையே! உம்முடைய திருக்குமாரனை நினைத்து உம்மை மன்றாடுகிறேன். நான் திவ்விய நற்கருணையைத் தக்க ஆயத்தத்தோடு வாங்கும்படியாகச் செய்தருளும். என்னுடைய இருதயம் உமது திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கும்படிக்கு அதில் தேவ சிநேகமும், மனத்தாழ்ச்சியும், பரிசுத்த கற்பும், திவ்விய பக்தியும் உம்மிடத்தில் இருந்ததுபோல் விளங்கச் செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! மரியாயே! தயையுள்ள கன்னிகையே, கிருபாகரியே, கருணாகரியே, அருணோதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

ஒன்பதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஒவ்வொருவரும் தன்னைச் சர்வேசுரனுக்கும் தேவ மாதாவுக்கும் முழுதும் ஒப்புக்கொடுக்கிறது.

புதுமை!

தமது திரு மைந்தனின் சத்திய வேதமானது அஞ்ஞான இருள் படர்ந்த தேசங்களில் பிரவேசிக்கவும், பரம்பவும் விசேஷ உதவி தேவமாதா செய்கிறாள் என்பதற்குச் சந்தேகமில்லை. நிரூபிக்கும் புதுமையாவது :

அமெரிக்க தேசங்களில் வடபுறங்களில் எண்ணிக்கை இல்லாத பிறசமயத்தார் தங்களின் தேவர்களை விட்டுவிட்டு மனந்திரும்பி சத்திய வேதத்தில் உட்பட்டார்கள். இவ்வாறு மனந்திரும்பினவர்களுக்குள்ளே தியாகோ என்னும் ஒரு பக்தியுள்ளவன் இருந்தான். அவனுக்கு செல்வமில்லாதிருந்த போதிலும் தான் இருக்கும் அந்த நிலையிலும் மகிழ்ச்சியுடன் சர்வேசுரனுக்குத் தோத்திரம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தான். தேவமாதாவின் பேரில் தான் வைத்த பக்தியினால் சனிக்கிழமை தோறும் ஒரு காத தூரமான மெக்சிக்கோ நகருக்குச் சென்று பூசை காண்பான்.

அந்நகருக்குச் செல்லும் பாதை நடுவில் ஓர் சிறு மலை இருந்தது. இந்த மலையின் மேல் பிற சமயத்தார் பழங்காலந்தொட்டு தாகி எனும் ஓர் தேவதைக்கு பிரபல்யமான ஆராதனை செய்து வந்தபடியால் இந்த மலை மகா பெயர் பெற்றதாம். ஆனால் தேவமாதா இந்த இடத்திலேயே தனக்கும் ஓர் கோவிலைக் கட்டுவிக்கவும், தன்னுடைய இரக்கத்தின் வல்லமையைக் காண்பிக்கவும் திருவுளங் கொண்டாள்.

எவ்வாறெனில் 1531-ஆம் ஆண்டில், சனிக்கிழமை தியாகோ என்பவன் தன் வழக்கப்படியே மெக்சிக்கோ நகருக்கு திருப்பலி காண அதிகாலையில் சென்று மேற்சொல்லிய சிறு மலையருகில் சேர்ந்தவுடனே இனிய குரலோசை அவன் காதில் விழவே, அது என்னவென திரும்பிப் பார்த்தான். அப்பொழுது மிகுந்த தொனியுள்ள ஒரு சிறு மேகத்தையும் அதைச் சூழ மகா பிரகாசம் பொருந்தின் ஒரு பச்சை வில்லையும் கண்டான். இந்த மகிமையான பாவனையை மகா சந்தோஷத்துடன் அவன் பார்க்கும் பொழுது, மேகத்தினின்று யாரோ தன்னை அழைக்கிறதாகக் கேட்டு மலைமீதேறி, ஓர் உன்னத அரியணையில் மிகுந்த அழகு சோபனமுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருக்கிறதைக் கண்டான்.

அன்னையுடைய திருமுகமானது சூரியனுக்கு ஒப்பாய் இருந்ததையும், அன்னையுடைய திருஉடைகளிலிருந்து புறப்படுகிற ஒளியின் கதிர் சுற்றிலும் இருக்கிற கற்பாறைகளின் மேல் பட்டு அவைகள் இரத்தினங்களைப்போல் ஒளிரச் செய்து கொண்டிருந்ததையும் கண்ட தியாகோ என்பவன் பிரமித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தான். அப்பொழுது அரியனையில் வீற்றிருந்த கன்னிகை அவனை நோக்கி, மிகுந்த பட்சத்துடன் நீ எங்கே போகிறாய் என்று கேட்க, நான் பரிசுத்த கன்னிகையைக் குறித்துப் பூசை காணப் போகிறேன் என்றான்.

அதற்கு ஆண்டவள், உன்னுடைய பக்தியும் மனத்தாழ்ச்சியும் நமக்கு மிகவும் பிரியமாயிருக்கின்றன. நாம் மெய்யான கடவுளின் தாயானதால் இவ்விடத்தில் நம்மைக் குறித்து ஓர் கோவில் கட்ட வேண்டும். இவ்விடத்தில் நம்முடைய விசேஷமான வரங்களை அளித்து உனக்கும் உன் நாட்டினருக்கும் மற்ற பக்தியுள்ள விசுவாசிகளுக்கும் அன்புள்ள தாயைப்போல நாம் இருப்போம். நீ கண்டதையும் கேட்டதையும் ஆயரிடத்தில் போய் நாம் சொன்னதாகச் சொல் என்றாள்.

தியாகோ என்பவன் எளிய மனிதனாக இருந்த போதிலும் ஆயரிடத்தில் போய் தான் கண்டதெல்லாம் அவருக்கு அறிவித்தான். ஆயரோவென்றால் அதைக்கேட்டு சந்தேகப்படாதிருந்த போதிலும், தேவசித்தத்தின் ஓர் அடையாளம் தமக்கு வேண்டுமென்று சொல்லி, ஒன்றும் செய்யாதிருந்தார். தியாகோ என்பவன் தன் ஊருக்குத் திரும்பிப் போகையில், அந்த சிறு மலையின் முன் சொன்னபடியே பரிசுத்த கன்னிகையை மறுபடியும் கண்டான். அவன் ஆயர் சொன்னதை அன்னைக்கு அறிவித்தபோது நல்லது அந்த அடையாளத்தை கொடுப்போம் என்றாள்.

இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு தியாகோ என்பவன் மலை அருகில் வந்தபோது தேவமாதா அவனுக்குத் தன்னைக் காண்பித்து அன்பான வார்த்தைகள் சொல்லி நீ இந்த சிறு மலையிலேயிருந்து சில மலர்களைப் பறித்துக்கொண்டு வாவென்றாள்.

அப்போது மலர்கள் பூக்கிற காலமில்லாதிருந்தாலும், அவன் தேவ நாயகியின் வார்த்தையை நம்பி மலை மீது ஏறிச் சென்று அவ்விடத்தில் சிறந்த மணமுள்ள மலர்கள் இருந்ததைக்கண்டு அவைகளுள் நல்லவைகளையும் பறித்துக்கொண்டு மீண்டும் தேவமாதாவிடம் வந்தான். அன்னை இம்மலர்களை வாங்கிக் கட்டி அவனுக்கு மீண்டும் அளித்து, நீ இவைகளை ஆயரிடம் கொண்டு போ என்றாள். இம்மலர்களை தான் அணிந்திருந்த நெடுஞ் சட்டைக்குள் மறைத்து ஆயரிடம் சென்றான்.

ஆயருடைய பணிவிடைக்காரர் மலர்களின் மணத்தை முகர்ந்து தியாகோ என்பவனுடைய சட்டையைத் திறந்து மகா அதிசயமாய் சட்டைக்குள் உன்னத வேலையாகச் செய்யப்பட்ட மலர்களைக் கண்டார்கள். ஆயர் அருகில் வந்தவுடன் தியாகோ மலர்களைக் கொடுக்கச் சட்டையைத் திறந்தான். அப்போது அவனுடையவும் ஆயருடையவும் கூட இருக்கிறவர்களுடையவும் கண்ணுக்கு இந்த சட்டையினுடைய பக்கத்தில் மிகவும் அழகாய் எழுதப்பட்ட தேவமாதாவின் ஓர் படம் இருக்கிறதாகத் தோன்றியது. உடனே ஆயரும் மற்றவர்களும் பிரமித்துச் சாஷ்டாங்கமாய் விழுந்து அந்த அற்புதமான படத்தை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். பின்னும் எழுந்திருந்து ஆயர் தியோகோவின் சட்டையைக் கழற்றி அதில் எழுதப்பட்டிருந்த படத்தை தம்முடைய அரண்மனையில் இருக்கும் கோவிலில் ஸ்தாபிக்கவே அத்திருப்படத்தை வணங்க அநேகர் திரண்டு வந்தார்கள்.

மறுநாள் ஆயர் திரளான ஜனங்களோடு தேவமாதா தம்மைக் காண்பித்த சிறு மலையைப் பார்க்கச் சென்றார். அவர் தேவமாதாவின் பாதம் படிந்த இடத்தைக் காண்பிக்க வேண்டுமென தியாகோவுக்குச் சொல்லும்போது, தியாகோ பயத்தினால் அதைக் காண்பிக்கக் கூடாதவனாய் இருக்கையில் பூமியினின்று அற்புதமாய் ஓர் நீரூற்று புறப்பட்டது. அந்த ஊற்று இந்நாள் மட்டும் இருக்கின்றது. ஆயர் அந்த அற்புதங்களால் தேவசித்தத்தை அறிந்து அந்தப் புனித ஸ்தலத்திலேயே ஓர் கோவிலைக் கட்டி அதில் இந்தச் சட்டையில் பதியப்பட்ட படத்தைப் பூச்சியமாய் வைத்தார். அந்தக் கோவில் சிறிதாக இருந்ததினால் சில ஆண்டுகளுக்குப்பின் பத்து இலட்ச ரூபாய் செலவில் ஓர் பிரமாண்டமான கோவிலைக் கட்டினார்கள். இந்தக் கோவிலுக்கு பெயரும் கீர்த்தியும் உலகில் எங்கும் உண்டாயிற்று.

இந்தச் சரிதையை கேட்கிற கிறிஸ்தவர்களே, தேவமாதாவின் வல்லபமும் அன்பும் தயாளமும் எவ்வளவென்று ஆராய்ந்து பார்த்து அன்னையின் அடைக்கலத்தைக் குன்றாத நம்பிக்கையோடு அண்டி வரக்கடவீர்கள்.