தேவமாதாவின் வணக்கமாதம் - மே 06

தேவாலயத்தில் தேவமாதாவின் ஜீவியம்!

1-வது பரிசுத்த கன்னிகை சர்வேசுரனை நாடி நடந்து கொண்டிருந்தார்கள்.

எவ்வித ஆசீர்வாதத்தினாலும் வரங்களினாலும் நிறைந்திருந்த தேவதாய் மறைந்த ஜீவியம் ஜீவிப்பதற்காக தேவாலயத்துக்குச் செல்லும்பொழுது நாமும் அவர்களுடன் கூடச் சென்று அவ்விடத்தில் அவர்களுடைய சுகிர்த நடவடிக்கைகளை காண்போம். தேவாலயம் தேவ ஊழியத்துக்கு மாத்திரம் குறிக்கப்பட்டிருக்கிறதை அவர்கள் நினைத்து அவ்விடத்திலிருக்கும் வரையிலும் சர்வேசுரனை மாத்திரமே நாடி அவரை சகல புண்ணியங்களாலும் பிரியப்படுத்த வேண்டுமென்று கவலையாயிருந்தார்கள். காலையில் உதிக்கிற சூரியனானது மென்மேலும் அதிக ஒளியுடன் விளங்குகிறது போல் நம்முடைய ஆண்டவள் புண்ணியத்தினாலும் சாங்கோபாங்கத்தினாலும் நாளுக்கு நாள் அதிகமதிகமாய் விளங்கித் துலங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடத்தில் தேவ சிநேகமும் மனத்தாழ்ச்சியும் சாந்த குணமும் தபசும் அடக்கவொடுக்கம் முதலான சுகிர்த புண்ணியங்களும் அதிக சோபையுடன் விளங்கிக்கொண்டிருந்தன. நாமும் அந்தச் சுகிர்த மாதிரிகையைப் பின்பற்றி நம்மால் முடிந்த அளவுக்கு பிரயாசைப்பட்டு நம்முடைய ஆத்துமங்களைப் புனிதப்படுத்துவதற்கு முயற்சிப்போம். எல்லோரும் தேவமாதாவைப்போல் ஓர் விசேஷமான வார்த்தைப்பாட்டைக் கொடுத்து தங்களைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறது அவசரமல்ல. இத்தகைய பாக்கியம் தெரிந்து கொள்ளப்பட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றது. அவர்கள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளையும் வெறுத்துத் தங்களை சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் நாம் எந்த அந்தஸ்திலிருந்தாலும் தேவ கற்பனைக்கு ஏற்றவாறு நடக்கவும், தபம், தருமம் செய்யவும் மீட்பு பெறுவதற்குரிய நற்கிரிகைகளைச் செய்யவும் கடமைப்பட்டிருக்கிறோம். இந்நாள் மட்டும் அந்தக் கடனை தகுந்த அளவில் செலுத்தி வந்தோமோ இல்லையோவென சிந்தித்துப் பார்ப்போமாக.

2-வது சர்வேசுரனை மாத்திரமே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

தேவமாதா, தேவாலயத்தில் மறைந்து தேவ சமூகத்தில் எப்பொழுதும் இருந்ததுபோல நடந்து சர்வேசுரனை இடைவிடாமல் நினைத்து அவரை அதிகமாக நேசித்து வந்தார்கள். அப்போது அர்ச். அமிர்தநாதர் தேவமாதாவைப் பற்றி கூறுவதுபோல, தேவ சத்தியங்களை அதிக பக்தியோடு தியானித்து அவசரங்களில் மாத்திரம் பேசுவார்கள். தன் இருதயத்தில் பற்றி எரிகிற தேவசிநேக அக்கினியால் ஒடுக்கம் நல்லதென்று எண்ணி செபத்தில் சர்வேசுரனோடு பிணைக்கப்படுவதை மாத்திரம் பெரிதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாமும் தேவமாதாவைப்போல் சர்வேசுரனை மாத்திரம் நாடி இடைவிடாமல் அவருடைய சமூகத்தில் நடக்கக்கடவோம். அவரை அடிக்கடி நினைத்து நாம் செய்கிறது எல்லாம் அவருக்கு பிரியமாய் இருக்கும் கருத்தோடு செய்யக்கடவோம்.

3. சர்வேசுரனுக்காக மாத்திரமே வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தேவமாதா சர்வேசுரனுக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நொடியாகிலும் வீணாக செலவழிக்காமல் எப்போதும் செபிக்கிறதும் கைவேலைகளைச் செய்கிறதும் ஞான புத்தகங்களை வாசிக்கிறதும் இன்னும் அநேக சுகிர்த புண்ணியங்களை நிறைவேற்றுவதுமே அவர்களுடைய அலுவலாயிருந்தது. சர்வேசுரனிடத்தில் திரளான தேவ வரங்களை அடைந்து, அபூர்வமான நன்மாதிரிகையும் பரிசுத்தமான புண்ணியங்களையும் தம்முடைய நடத்தையால் நன்கு காண்பித்து வந்தார்கள். அவர்களுடைய தேவசிநேகம் மட்டில்லாததுமாய், தாழ்ச்சி கரைகாணாததுமாய் மாசில்லாததுமாய், தேவபக்தியானது குறைவில்லாததுமாய் இருந்ததுமன்றி மரியன்னையுடைய சுகிர்த நடத்தை பிறருக்கு ஓர் கண்ணாடி போல் விளங்கினதாம். நாம் இந்த அதிசயத்துக்குரிய திருக்கன்னிகையின் நன்மாதிரிகையைப் பின்பற்றுவோம். அவர்களுடைய நல்ல வழியைப் பின்பற்றி நடக்கிறது நமக்கு நன்மையும் அவசியமுமாய் இருக்கின்றது.

செபம்.

திவ்விய கன்னிகையே! என் இரட்சகருடைய தாயாவதற்கும், பாவிகளுக்கு அடைக்கலமாவதற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தாயாரே, என்பேரில் இரக்கமாயிரும். பாவியாகிய நான் உம்முடைய தஞ்சமாக ஓடிவந்து உமது பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுகிறேன். நான் உம்முடைய கிருபையை அடைவதற்குப் பேறு பெற்றவனா(ளா)யிராத போதிலும், உம்மை நம்பிக்கையோடு மன்றாடுகிறவர்களை ஒருக்காலும் நீர் புறக்கணிப்பதில்லை என அறிந்து நான் உம்மைக் கெட்டியான நம்பிக்கையோடு இரந்து மன்றாடுகிறேன். ஆகையால், சகல மோட்சவாசிகளின் இராக்கினியே, என் ஈடேற்றத்தை அலட்சியம் செய்து எண்ணிக்கையில்லாத பாவங்களைக் கட்டிக்கொண்ட பாவியாகிய எனக்கு உதவி செய்தருளும். நீர் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்களாய் அவரிடத்திலே எவ்வித நன்மையையும் பெறுவதற்கு பேறு பெற்றவர்களாய் இருக்கிறதினால் எனக்கு மகா தயைசெய்து எனக்காகச் சர்வேசுரனிடத்தில் மன்றாடி நான் பாவ வழியை விட்டு விலகி சுறுசுறுப்போடு மீட்புப் பெறும்படியாக கிருபை செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது : 

நான் உம்மை ஸ்துதிக்கவும், என் சத்துருக்களை வெல்லவும் உதவி செய்தருளும் தாயே.

ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது : 

பிற சமயத்தினர் சிலரிடம் வேதத்தைப்பற்றி பேசி அவர்களுக்கு சத்தியத்தைச் தெளிவிக்கிறது.

புதுமை!

கிருபை நிறைந்த அன்னை எல்லா இடங்களிலும் தமது பேரில் பக்தியுள்ள ஜனங்களுக்கு மேலான வரங்களை அளித்து வந்தாலும் சில ஸ்தலங்களை விசேஷமான பிரியத்துடன் தெரிந்து கொண்டாற்போல, அந்த ஸ்தலங்களில் தம்முடைய தயாளமும் வல்லபமும் அதிகமாக விளங்க திருவுளங்கொண்டார். அதன்படி எல்லா நாடுகளிலும் பரிசுத்த கன்னிகையின் பேரால் கட்டப்பட்டு அதிக பெயர் பெற்று விளங்கும் கோயில்கள் அநேகம் இருக்கின்றன. 

லொரேத் என்னும் பரம ஆண்டவளுடைய கோயில் அனைத்துலகிலும் உள்ள கீர்த்தி பெற்ற கோவில்களுள் ஒன்று. பாலஸ்தீன் நாட்டில் நசரேத் என்னும் ஊரில் தேவமாதா வாழ்ந்த ஒரு சிறு வீடு இருந்தது. அதில் ஆண்டவருடைய சம்மனசானவர் இறங்கிவந்து பரமநாயகிக்கு மங்கள வார்த்தை சொன்னார். அதில் மனிதரை இரட்சிக்க வருகிற சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்தார். அதில் இயேசு கிறிஸ்துநாதரும் தேவமாதாவும், புனித சூசையப்பரும் அநேக வருஷங்களாக வாழ்ந்து வந்தார்கள். அதனால் விசுவாசிகள் பூர்வீக நாள் தொடங்கி அந்த வீட்டை மகா வணக்கத்துடன் சங்கித்துக்கொண்டு வந்தார்கள். அதைப் பார்க்கும்படியாக அயல் நாடுகளிலிருந்து அநேகம் பேர்கள் வருவார்கள். புனித ஞானப்பிரகாச இராஜா 1252-ஆம் ஆண்டில் அத்திருத்தலத்தைச் சந்தித்து வணங்கினார். 

ஆனால் அந்த நாட்களில் முகமதியர் அதிகபலம் அடைந்து அநேகப் பட்டணங்களையும் பிடித்து அத்திருத்தலத்தையும் நிர்மூலமாக்க எண்ணி இருந்தார்கள். அத்தகைய இன்னல்களுக்கு எல்லாரும் பயப்படும் பொழுது வருத்தமுமின்றி தடையுமின்றி எவ்வித அற்புதங்களையும் செய்கிற சர்வேசுரனுடைய அளவறுக்கப்படாத வல்லபத்தினால் இந்த திருவீடு தானிருந்த இடத்தினின்று தூக்கப்பட்டு, முதல் ஸ்கிளாவொனியா நாட்டிலும், பின்பு இத்தாலிய நாட்டில் லோரேத்தும் பட்டணத்திலும் வைக்கப்பட்டது. இந்த அற்புதமான நிகழ்ச்சி 5 - ஆம் செலஸ்தீனுஸ் பாப்பானவருடைய ஆளுகையில் சம்பவித்ததாம். அவ்விடத்தில் வைக்கப்பட்ட திருக்கோவில் முன்னே நசரேத்தூரில் பக்தியோடு வணங்கப்பட்ட சிறுவீடுதான் என் நிச்சயமாக அறிந்து ஜனங்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்து அதை மிகவும் பக்தியோடு கொண்டாடத் தொடங்கினார்கள். அந்த வீடு அதிக சிறியதாயும், வருகிற ஜனங்கள் இருக்கப் போதாததுமாய் இருந்ததால் அதைச் சுற்றிலும் விரிவான கோவிலைக் கட்டினார்கள்.

இந்தத் திருத்தலத்தை வணங்க புனித பாப்புகளும் அரசர்களும் எண்ணிக்கையில் அடங்காத ஜனங்களும் போகிறார்கள். இன்றும் இந்தக் கோவில் பெயர் பெற்று விளங்குகிறதுமல்லாமல், இதில் அநேக அற்புதங்களும் நடந்து வருகின்றன. இந்தக் கோவிலில் பிரவேசித்துத் தேவமாதாவை வணங்க வருகிறவர்கள் தாங்கள் தேவ பக்தியினால் பிரமிப்பு அடைகிறது போல காணப்படுவார்கள். இத்திருத்தலத்தில் விசுவாசிகள் அடைந்த ஞான உபகாரங்களுக்கு அத்தாட்சியாக அநேக அடையாளங்களைப் பார்க்கலாம்.

இங்கே நாம் சொன்னவைகளைக் கேட்ட கிறிஸ்தவர்களே, அந்த வீட்டைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள் அல்லவா? ஆனால் அவ்விடத்துக்குப் போக கூடாமையால் தேவமாதாவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட சில கோவில்களைச் சந்திக்கக்கடவீர்கள்.