தேவசுதனுடைய மனித அவதாரத்தின் பேரில்

46. நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்தவர் யார்?

அர்ச், திரித்துவத்தின் இரண்டாமாளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுரன். 


47. அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனாலே கற்பமாய் உற்பவித்து அற்புதமாகப் பிறந்தார். 


48. யாரிடத்தில் நின்று பிறந்தார்?

ஒருக்காலும் கன்னிமை கெடாத அர்ச். கன்னி மரியம்மாளிடத்திலே நின்று பிறந்தார். 


49. எங்கே பிறந்தார்?

பெத்லேம் ஊரில் ஒரு மாட்டுக் கொட்டகையில் பிறந்தார். 


50. சுவாமி பிறந்த எட்டாம்நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?

யேசு என்கிற பெயரிட்டார்கள். 


51. யேசு என்கிற பெயருக்கு அர்த்தமென்ன?

நம்மை இரட்சிக்கிறவர். 


52. கிறிஸ்து என்கிறதற்கு அர்த்தமென்ன?

பட்டாபிஷேகம் பெற்றவர். 


53. ஆகையால் யேசுகிறிஸ்துநாதர் யார்?

நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய்ப் பிறந்த சுதனாகிய சர்வேசுரனேயாம். 


54. யேசு கிறிஸ்துநாதர் மெய்யான சர்வேசுரனா?

ஆம், பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவ சுபாவம் உடையவராயிருக்கிறதினால் மெய்யான சர்வேசுரன்தான், 


55. அவர் மெய்யான மனிதனா?

ஆம், அவர் நம்மைப்போல் ஆத்துமத்தையும், சரீரத்தையும் உடையவராய் இருப்பதால். அவர் மெய்யான மனிதன் தான்.


56. யேசுநாதர் சுவாமிக்கு எத்தனை சுபாவம் உண்டு?

தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு. 


57. தேவ சுதனுடைய மனித அவதாரம் என்கிற பரம இரகசியம் ஆவதென்ன? 

தேவ சுபாவமும் மனித சுபாவமும் தேவசுதன் என்கிற ஒரே ஆளிடமாகப் பிரியாத தன்மையாய் ஒன்றித்திருக்கின்றன என்பதாம். 


58. ஆகையால் அர்ச், கன்னிமரியம்மாளை தேவமாதா என்று அழைக்கலாமோ? 

ஆம், அவர் தேவனாகிய யேசுநாதரைப் பெற்ற தாயானதால், அவரை தேவதாய் என்று அழைக்கத்தான் வேண்டும்.