சேசுநாதர் சுவாமி

1. விசுவாசப் பிரமாணத்தின் இரண்டாம் பிரிவைச் சொல்லு.

“அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுகிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்.” 


2. ஏகம் என்னும் பதத்துக்கு அர்த்தம் என்ன?

ஏகம் என்றால் ஒன்று என்று அர்த்தமாகும்.  அதாவது “சர்வேசுரனுடைய ஏக குமாரன்” என்றால், அவருக்கு ஒரே ஒரு குமாரன் உண்டென்று அர்த்தமாகிறது.


3. திரித்துவத்தின் இரண்டாம் ஆளானவரைப் பிதாவினுடைய ஏக சுதன் என்று சொல்லுவானேன்?

ஏனென்றால் அவர் மாத்திரம் பிதாவினால் ஜெனிப்பிக்கப் பட்டிருப்பதால் அவரை “ஏக சுதன்” என்று அழைக்கிறோம்.


4. நம்முடைய நாதர் என்பதற்கு அர்த்தம் என்ன?

நமது பரம ஆண்டவர் என்று அர்த்தமாம்.


5. சேசுகிறீஸ்துவை நமதாண்டவர் என்று ஏன் அழைக்கிறோம்?

(1) அவர் சர்வேசுரனாகிய மட்டும் சகல சிருஷ்டிகளையும் படைத்துக் காப்பாற்றி நடத்துகிறவராயிருக்கிறார். ஆதலால் சகல மனிதர்கள் பேரிலும், சிருஷ்டிகள் பேரிலும் அவருக்கு சர்வ அதிகாரம் உண்டு.

(2) அவர் சர்வேசுரனும் மனு­னுமாகிய மட்டும் சகல மனிதர்களையும் தமது இரத்தத்தினால் பசாசின் அடிமைத்தனத்தினின்று மீட்டு இரட்சித்து அவர்களைத் தம் சொந்தப் பொருளாக்கிக் கொண்டார். ஆதலால் அவரை இராசாதி இராசனென்றும், ஆண்டவர்களில் ஆண்டவரென்றும் நியாயமாய் வாழ்த்தி ஆராதிக்கிறோம். (1 திமோ. 6:15).


6. சேசுகிறீஸ்து என்றால் யார்?

நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய்ப் பிறந்த சுதனாகிய சர்வேசுரன்.


7. இவ்விரண்டாம் பிரிவில் என்ன விசுவசிக்கிறோம்?

(1) அர்ச். தமதிரித்துவத்தின் இரண்டாமாளாகிய தேவ சுதன் மனிதனாய் உற்பவித்துப் பிறந்தார்,

(2) சேசுகிறீஸ்துநாதர் என்பது அவருடைய பெயர்,

(3) இவர் பிதாவாகிய சர்வேசுரனுடைய ஏக சுதன்,

(4) நம்முடைய ஆண்டவர்,

(5) மெய்யான சர்வேசுரன்,

(6) பிதாவாகிய சர்வேசுரனை எப்படி விசுவசிக் கிறோமோ, அப்படியே சேசுநாதரையும் விசுவசிக்கிறோம்.


8. பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறதுபோல், சேசுநாதரையும் ஏன் விசுவசிக்கிறோம்?

ஏனென்றால், பிதா மெய்யான சர்வேசுரனாயிருக்கிறது போல், சேசுகிறீஸ்துநாதரும் மெய்யான சர்வேசுரனாயிருக்கிறார். பிதாவோடு சேசுகிறீஸ்துநாதரும் ஒரே சர்வேசுரனாயிருக்கிறார்.