நவம்பர் 17

அர்ச். கிரகோரி - ஆயர் - (கி.பி. 270).

அதிசயங்களைச் செய்பவர் என்று வழங்கப்படும் கிரகோரி என்பவர், பிறமதத்தைச் சார்ந்த பெற்றோரிடமிருந்து பிறந்து, பல தேசங்களுக்குச் சென்று உயர்ந்த சாஸ்திரங்களைக் கற்றறிந்து கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று உறுதியாக நம்பி ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஒரு நாள் பிரயாணம் செய்கையில் பெரும் மழை பெய்ததினால், அருகிலிருந்த பசாசின் கோவிலில் ஒதுங்கினார். அக்கோவிலில் பல முறை சிலுவை அடையாளம் போட்டு, மழை நின்றபின் அங்கிருந்து புறப்பட்டார். சற்று நேரத்திற்குப்பின் பூசாரி அதில் பிரவேசித்து, பசாசிடம் விடை கேட்கையில், கிரகோரியின் உத்தரவின்றி தான் விடை கொடுக்கக் கூடாதென்று சொல்லிவிட்டது.  அக்கணமே பூசாரி கிரகோரியாரைத் தொடர்ந்து போய் மன்றாடியதின் பேரில், ஒரு சீட்டில், “பசாசே நீ கோவிலில் பிரவேசிக்கலாம்” என்று எழுதியனுப்பினார். உடனே பசாசு விடை கொடுக்க ஆரம்பித்ததை அவன் கண்டபின், தன் தொழிலை விட்டுவிட்டு ஞானஸ்நானம் பெற்றான். இவர் ஊரூராய்ச் சென்று வேதம் போதித்து, திரளான ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து. அநேக கோவில்களைக் கட்டினார். ஒரு கோவிலைக் கட்டுவதற்கு ஒரு பெரும் பாறை தடையாயிருந்தபோது, விசுவாசத்துடன் அப்பாறையை அப்பாலே அகலும்படி கட்டளையிட்ட மாத்திரத்தில், அது அகன்று போயிற்று.  ஒரு நதி கரைபுரண்டு விளைச்சல் நிலங்களில் பாய்ந்தபோது, இவர் தமது ஊன்றுகோலை அங்கே நட்டு, நதி நீர் எல்கையைத் தாண்டி வரக்கூடாது என்று கட்டளையிட்ட மாத்திரத்தில் நீர் நின்றதுடன், அந்த கோல் பெரும் மரமாயிற்று. மற்றுமொரு சம்பவம்: இரு சகோதரர் ஓர் ஏரியை உரிமை கொண்டாடும் நிமித்தம், அவர்களுக்குள் வாய்ச்சண்டையில் ஆரம்பித்து, இறுதியில் ஆயதங்களோடு நிற்கும் சமயத்தில், அந்த ஏரியின் நீரை இவர் நொடிப்பொழுதில் வற்றச் செய்தார். இவருடைய புண்ணிய வாழ்வைக் குறித்து இவருக்கு ஆயர் பட்டம் அளிக்கப்பட்டது. இவர் ஜெபதபத்தாலும் புதுமைகளாலும் கணக்கற்றவர்களை சத்தியவேதத்தில் சேர்த்து, தமது இறுதிகாலம் வரை ஆன்மாக்களுக்காக உழைத்து, நன்மரணமடைந்து மோட்சத்தில் தமது சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.  

யோசனை

நாம் சத்தியவேதத்தின் மட்டில் அதிக விசுவாசமுள்ளவர்களாய் இருப்போமாக.