அர்ச். மிக்கேல் சம்மனசானவரை நோக்கி ஜெபம்

(திருநாள் : செப்டம்பர் 29)

வானுலக சேனைத் தளங்களின் அதிபதியே! சகல ஜீவ அரூபிகளில் மகிமைப் பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே! அவர்களிலும் உத்தமமானவரே! உந்நத கடவுளின் மந்திர ஆலோசனை நிர்ணய பெட்டகமே! தேவ சிம்மாசனத்தருகே நிற்கப் பேறுபெற்ற பிரபுவே! தேவ கட்டளைப்படியே பரலோக வாசலைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரமுடைய வானவனே! தேவநீதி சிம்மாசனத்தண்டையில் எங்கள் ஆத்துமங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதனே! மரண அவஸ்தைப் படுகிறவர்களுக்கு உதவி செய்யத் தீவிரித்தோடி வரும் உபகாரியே!  மரித்தவர்களின் ஆத்துமங்களை அழைத்துக் கொண்டுபோய் திவ்விய கர்த்தரின் சந்நிதியில் சேர்க்கும் காவலனே! பலவீனனும் நிர்ப்பாக்கியனுமாகிய அடியேனை கருணையோடு பார்த்து என் சீவிய கால முழுவதும் விசேஷமாய் என் மரணத் தறுவாயில் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.