தெய்வீகத் தேவ அருட்சாதனமாகிய திவ்விய நற்கருணை ஆராதனை செபம்.


புனித அருட்சாதனமே! தெய்வீகத் தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும், நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.

வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம். முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

ஆண்டவர் மாண்புமிகு இறைவன்! தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்! பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன, மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. வாருங்கள், நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

கடலும் அவருடையதே! அவரே படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. வாருங்கள்; தாழ்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். வாருங்கள் நம் நற்கருணை நாதரைப் புகழ்வோம், முடிவில்லா மகிமையுடைய மன்னரைப் புகழ்வோம்.

புனித அருட்சாதனமே, தெய்வீக தேவ அருட்சாதனமே! எல்லோருடைய புகழும் நன்றியறிதலும் எக்காலமும் உமக்கே உரியனவாகுக.

ஆமென்.