ஜெபமாலைதரும் வீரம்

மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 15 : மாதாப்புனிதரின் வீர சாகசம்:

புனிதர் ஒரு பங்கில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அப்பங்கில் நல்ல கிறிஸ்தவர்கள் பலர் இருந்தபோதிலும் மதுக்கடைகள், தகாதமுறையில் நடனங்கள் இவை போன்ற பாவத்திற்குரிய சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தே வந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியமாகக் குடிப்பதும் கூத்தாடுவதும் அதிகமாக இருந்தது. குடித்தவர்கள் தூஷனமாகப் பேசுவதும், வருகிறவர் போகிறவர்களை சண்டைக்கு இழுப்பதும் சாதாரண நிகழ்ச்சிகளாய் இருந்தன. இந்த முறை கேடான நிகழ்ச்சிகளைத் திருத்துவதற்கு யாரும் துணியவில்லை.

நம் புனிதரோ தன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் சரி இந்த அவல நிலையை ஒழித்துவிட வேண்டுமென்று தீர்மாணித்தார். நேராக குடிகாரர்கள் கூடும் இடத்திற்கே சென்றார். இளைஞர்கள் பலர் குடியால் மதிமயங்கி ஆபாசப்பாடல்களை பாடிக்கொண்டும், பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்தார். இந்த மோசமான கூட்டத்தில் நுழைந்து முழங்காலிட்டு “ அருள் நிறைந்த மரியே வாழ்க ! “ என்ற ஜெபத்தை உரக்கச் சொன்னார். பின் எழுந்து இசைக் கருவிகளை பலவந்தமாக பிடிங்கிக்கொண்டு தரையில் வீசி எறிந்து உடைத்தார்.

அங்கிருந்த மேசைகளைக் கவிழ்த்து போட்டார். அவற்றின் மேல் வைத்திருந்த கண்ணாடிப் பாத்திர்ங்களையும் தூள் தூளாக்கினார். அங்கிருந்தவர்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள். ஒரு சிலர் தங்களிடமிருந்த வாளை உருவினர். புனிதரோ சிறிதும் அஞ்சாமல் தன் கையில் ஜெபமாலையைப் பிடித்தபடி அவர்கள் எதிரில் சென்றார். அதைக் கண்டவர்கள் எல்லோரும் பயந்து ஓடிவிட்டார்கள். அதன் பின் சத்திரக்காரனைப் பார்த்து.

“ இவர்கள் எல்லாரும் பாவம் செய்வதற்கு சந்தர்ப்பம் அளித்த நீ ஒருநாள் கடவுளுக்கு கண்டிப்பாக கணக்கு கொடுக்க வேண்டும் “ என்று எச்சரித்தார்.

இன்னொரு முறை ஆண்களும், பெண்களும் ஒரு நூறு பேர் சேர்ந்து தகாத முறையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். புனிதர் உள்ளே நுழைந்து ஆறு ஏழு முறை கூட்டத்தை கலைக்கப் பார்த்தார் முடியவில்லை. இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து கோவில் பாட்டு ஒன்றைப் பக்தியின்றிப் பாடினார்கள். மேலும் உற்சாகத்தோடு நடனமாடினார்கள்.

அச்சமயத்தில் தனக்கு எப்போதுமே ஒரு தெய்வீக ஆயுதமாகக் கருதியிருந்த ஜெபமாலையைக் கையில் எடுத்து பலத்த குரலில், 

“இறைவனின் நண்பர்களாய் இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து என்னோடு முழங்காலிடுங்கள்“ என்று கத்தினார். அவர்கள் எல்லாரும் அச்சத்தோடு முழந்தாழிட்டனர். ஒரு பத்து மணி ஜெபமாலை செய்தார். பின்னர் எழுந்து பாவத்திற்கு சந்தர்ப்பமாக இருக்கக் கூடிய அடக்கமற்ற நடனங்களை குறித்து ஆவேசமாகப் பேசினார். எதிர்ப்பார்த்த பலன் கிடைத்தது. அங்கிருந்த எல்லாரும் மனம் திரும்பினர். இறைவனுடைய அருள் மீண்டும் வெற்றி பெற்றது..

நன்றி : ஜெபமாலை ஜெப வெற்றி வீரர் “புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்“ வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் முன்னாள் சென்னை மயிலை பேராயர் அருட்தந்தை இரா. அருளப்பா.

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !