நரகம் தவிர்க்க.. பதிவு -10 :

மரியாயின் மாசற்ற இருதயம் – நரகத்திலிருந்து ஆத்துமங்களைக் காப்பாற்றும் இறுதி உபாயம்..( முக்கியமான பகுதி)

கடைசியாக நரகத்திலிருந்து தங்களைப் காத்துக்கொள்ள விரும்புவோருக்குப் பரலோகம் மரியாயின் மாசற்ற இருதயத்தை அவர்களுடைய அடைக்கலமாகக் கொடுக்கிறது. 1917 ஜூலை 13 அன்று நம் பரிசுத்த மாதா பாத்திமாவின் மூன்று குழந்தைகளுக்கும் நரகத்தைத் திறந்து காட்டினார்கள். பசாசுக்களும், சபிக்கப்பட்ட ஆத்துமங்களும் அதில் அமிழ்த்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் நரகத்தில் படும் கொடூர வாதைகளைக்கண்ட குழந்தைகள் அச்சத்தால் நடுங்கிப் போய், மாதாவை நோக்கி கண்களை உயர்த்த, மாதா தனது எல்லையற்ற கருணையோடும், துயரத்தோடும் அவர்களைப் பார்த்து: 

“ பரிதாபத்திற்குரிய பாவிகள் செல்லும் நரகத்தைக் கண்டீர்கள். இதிலிருந்து ஆத்துமங்களைக் காப்பாற்ற , உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார் “ என்றார்கள்.

ஆம்! மரியாயின் மாசற்ற இருதய பக்தி நரக ஆபத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற பாவிகளை இரட்சிக்கும் வல்லமையுள்ள ஆயுதமாக கடவுளாலேயே நமக்குத் தரப்படுகிறது.

 “ உலகம் தமது முந்தைய உபாயங்களையெல்லாம் மறுத்துத் தள்ளிவிட்டதைக் கண்டு, கடவுள் கடைசியாக இந்த உத்தம பக்தியை ஒரு வித அச்ச நடுக்கத்தோடு மனிதனுக்குத் தருகிறார். இதையும் நாம் கைநெகிழ்ந்து விடுவோம் என்றால் இனி மோட்சத்தின் மன்னிப்பு நமக்கு கிடைக்காது. ஏனெனில் அப்போது பரிசுத்த சுவிசேஷத்தால் இஸ்பிரீத்துசாந்துவானவருக்கு எதிரான பாவம் என்று கூறப்படும் பாவத்தை செய்தவர்களாய் நாம் இருப்போம். இப்பாவம், நமக்கு தரப்படும் இரட்சண்யத்தை முழு அறிவோடும், முழு சம்மதத்தோடும், பகிரங்கமாக மறுதலிப்பதில் அடங்கியுள்ளது “

என்று சகோதரி லூசியா கூறுகிறாள். நம் அன்னை தொடர்ந்து,

“இந்த பக்தியை கைக்கொள்பவர்கள் அனைவருக்கும் நான் இரட்சண்யத்தை வாக்களிக்கிறேன். இந்த ஆத்துமங்கள் கடவுளின் சிம்மாசனத்தை அலங்கரிக்கும்படி என்னால் வைக்கப்படுகிற மலர்களைப் போல கடவுளுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள்… “ என்கிறார்கள்.

எத்தகைய நம்பிக்கைக்குரிய வார்த்தைகள்!  நம்ப முடியாத அளவுக்கு மிக எளிதான இரட்சண்யணிய வழி ஒன்று நமக்கு தரப்படுகிறது:

அமல உற்பவ கன்னிகையின் பேரில் சேசுவின் திருஇருதயம் கொண்டுள்ள  விசேஷ அன்பை நம்முடையதாக்கிக் கொள்வதும், அவரகளுடைய சின்னச் சின்ன வேண்டுகோள்களை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு நம் பிரமாணிக்கத்தை எண்பிப்பதும் போதுமானது.

மரியாயின் மாசற்ற இருதயபக்தி : இரட்சண்யமடைய ஒரே நிபந்தனை.

பாத்திமா பரிகார பக்தியில் மாதா புதிதாக எதையும் நமக்கு தந்துவிட வில்லை. குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்ய நற்கருணை உட்கொண்டு, ஜெபமாலை ஜெபித்து, சேசு மரியாயின் வாழ்வின் சகல நிகழ்ச்சிகளையும் தியானித்து, இந்த பக்தி முயற்சிகளையெல்லாம் தனது மாசற்ற இருதயத்திற்கு எதிராகக் கட்டிக்கொள்கிற பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும்படி மட்டுமே நம் இனிய அன்னை கேட்கிறார்கள். கத்தோலிக்கத் திருச்சபை காலம் காலமாகத் தன் பிள்ளைகளிடம் கேட்டு வரும் காரியங்கள்தான் இவை. ஆகவே, - “ நிர்ப்பாக்கிய பாவிகளை உங்கள் திவ்ய அன்னையோடு சேர்ந்து இரட்சிக்கிற “ சிறிய இரட்சகர்களாக” இருக்கும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

(சோதோம், கொமோராவில்) பத்து நீதிமான்கள் காணப்பட்டால், அந்தப் பத்து பேரின் நிமித்தம் அந்தப் பட்டணங்களை அழிப்பதில்லை என்று கடவுள் ஆபிரகாமிற்கு வாக்களித்தார் ( ஆதி.18:32). அதைவிட மேலாக, இன்று தம் பிரிய மகளும், அன்புத் தாயும், நேச பத்தினியுமான மாமரிக்கு ஆறுதல் அளிக்கும்படி தங்களைப் பலியாக்க ஒரு சில ஆத்துமங்களாவது முன் வருமானால், நரகத்திலிருந்து பரிதாபத்திற்குரிய  ஆத்துமங்களையும், பேரழிவுகளிலிருந்து உலகத்தையும், விசுவாச அழிவிலிருந்து திருச்சபையையும் பாதுகாப்பதாக இப்போது நமக்கு வாக்களிக்கிறார். இதனால் உங்கள் ஆத்துமத்தை மட்டுமின்றி, இன்னும் ஏராளமான ஆத்துமங்களையும் நீங்கள் நித்திய அழிவினின்று மீட்டுக் கொள்வீர்கள். மாதா மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். பரலோகத்தில் உங்கள் கைமாறு மிகுதியாகும்.

“ ஓ என் சேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆத்துமங்களையும் மோட்சத்திற்கு கூட்டிச் சேர்த்தருளும், உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களையும் மோட்சத்திற்கு கூட்டிச் சேர்த்தருளும். ஆமென்.

( பாத்திமாவில் மாதா கற்பித்ததும், ஜெபமாலையில் நாம் சொல்லிவருவதுமான ஜெபம்)

நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479 மற்றும் பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !