தேவ தாயின் மோட்ச ஆரோபணம்.

தேவ நற்கருணையைத் தாங்கும் பாத்திரத்தை பொன்னால் செய்தோ , பொன்முலாம் பூசியோ , அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களைத் தவிர வேறொன்றும் தொடா வண்ணம் எவ்வளவு பதனமாய் வைத்திருக்கிறோம் ? பத்துமாதம் இயேசுவைச் சுமந்த பாத்திரத்தை இயேசுவின் சதையின் சதையும் ரத்தத்தின் ரத்தமுமாகிய தேவ தாயின் உடலைக் கல்லறையின் அழிவு அண்டத் திருமகன் சம்மதிப்பாரா ? மரிக்கக் கடன் இல்லாவிட்டாலும் மகனைக் கண்டு பாவித்து மரித்த மாமரியைச் சில தினங்களுக்குள் நேச குமாரன் ஆடம்பரத்தோடு மோட்ச மாளிகைக்கு ஏந்திச் செல்லுகிறார் . சூரியர்களை விட அதிகப் பிரகாசம் வீசி சோதி முகில்களிடை மாதா மெதுவாய் மிதந்து செல்லுகிறார் . அவரைச் சுற்றி எத்தனை வானதூதர்களின் கணங்கள் ! அவர்கள் அசையும்போது அவர்களுடைய வெண் நெற்றியில் தணல் கொழுந்துகள் தாவுகின்றன . அவர்களது ரோசா சிறகுகளிலிருந்து அனல் பொறிகள் , இரையுங் கடலில் பல சூரியன் மின்னுவது போல தங்கக் கதிர்கள் போல் பறக்கின்றன . என்ன இனிமையான கீதங்கள் இசைக்கின்றனர் !

கன்னித்தாய் மனுக்குலத்திற்கு மாதிரிகை . மனுக்குலத்தின் பிரதிநிதியாக மேலோகம் செல்லுகிறார் . ஒரு நாள் அவரது மக்களாகிய நாமெல்லோரும் அவரோடு அவருடைய ஆனந்தத்தில் இருக்க வேண்டும் என்பது ஆண்டவரின் ஆசையல்லவா ? இந்நோக்கத்தின் அறிகுறி ,அச்சாரம் தேவதையின் மோட்ச ஆரோபணம் . இறைவனின் தாளத்தின் பெருக்கம் இது தான் !

ஏழாம் நூற்றாண்டில் அர்ச். தமாசின் அருளப்பர் நிகழ்த்திய சொற்பொழிவின் இரண்டொரு மொழிகளைக் கேட்பீர்களா ? உயிருள்ள தேவனின் பரிசுத்த பேழை , தம் உத்தரத்தில் தமது இரட்சகரைத் தாங்கிய பேழை , கரங்களால் ஆகாத ஆண்டவரின் ஆலயத்தில் இளைப்பாறுகிறது . அவரது முன்னோரான தாவீது மகிழ்கிறார் . அவரோடு சம்மனசுக்கள் நர்த்தனம் செய்கின்றனர் . அதிதூதர்கள் தோத்திரம் பாடுகின்றனர் . பரிசுத்தர் மரியின் மகிமையைப் புகழ்ந்து கானம் இசைக்கின்றனர் . சத்துவர்கள் மாற்றி மாற்றி பண் இசைக்கின்றனர் . ஞானாதிக்கர்கள் பல புகழ்கள் சமர்ப்பிக்கின்றனர் . பக்தி சுவாலகர்கள் அவர் புகழைச் சாற்றுகின்றனர்

இன்று புதிய ஆதாம் உயிருள்ள பூங்காவை ஏற்றுக் கொள்ளுகிறார் . சாபம் நீக்கபெற்றது . சீவிய விருட்சம் நடப்பட்டது . ஆதாமுக்கு வந்த சாபத்தால் தேவ அருளின் ஆடையை இழந்தோம் , நமது ஆடையில்லா கோலம் அலங்கரிக்கப்பட்டது

இன்று உலக நாட்டத்தால் கறைபடாக் கன்னிகை மோட்ச எண்ணங்களால் ஊட்டம் பெற்றவள் - அவளே சீவிய மோட்சமானபடியினால் -  மண்ணுக்குத் திரும்பவில்லை . மோட்ச கூடாரங்களுக்குள் வரவேற்கப்பட்டார். அவரிடம் இருந்து அல்லவா யாவருக்கும் சீவியம் வழிந்தது . அவர் எவ்விதம் சாவை ருசிக்கலாம் ? உயிருள்ள தேவனின் தாய் அவரிடம் தூக்கிச் செல்லப்படுவது   எவ்வளவு நியாயம் ! பாம்பின் சோதனைக்கு உட்பட்ட ஏவை குழந்தைப் பேற்றில் துன்பப்பட சபிக்கப்பட்டாள் ; சாவின் தண்டனை விதிக்கப்பட்டாள். அதல பாதாளத்தில் ஆழ்த்தப்பட்டாள். ஆனால் இறைவனுடைய குரலுக்குச் செவிசாய்த்தவர், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றவர் மானிட உதவியின்றி தன் மகனைக் கர்ப்பம் தரித்தார் , யாதொரு வாதனையின்றி ஈன்றெடுத்தார் . அவரை இறைவனுக்கு முழுமையும் நேர்ந்து கொண்டார் . அவரைச் சாவு அழிக்க முடியுமா ? சீவியம் உருவெடுத்த உடலில் நாச நாற்றம் நுழைய முடியுமா ? மோட்சத்துக்குச் செல்லும் நேர்  பாதை அவருக்கு வகுத்திருக்கிறது . " நான் இருக்கும் இடத்தில் என் ஊழியன் இருப்பான்  " என்று உண்மையும் உயிருமான கிறிஸ்து சொல்லி இருக்கும் போது அவர் தாய் அவரோடு இருக்க வேண்டாமா ?

தேவதை ஆரோபணமான திருநாளில் வாசிக்கும் நற்செய்தி மரியா மார்த்தா வீட்டில் இயேசு தங்கி இருந்த நாளைப் பற்றியதல்லவா ?ஏன் ? அர்ச் அகுஸ்தீன் பதில் இறுப்பார்: மார்த்தா விருந்து தயார் செய்தார் . மார்த்தா மாசற்றவள் , நமதாண்டவருக்கு உணவளிப்பதிலேயே கவனமாக இருக்கிறாள் மரியா ஆண்டவர் வார்த்தையைக் கேட்ட வண்ணமே இருக்கிறாள் . மரியா ஆண்டவரிடமிருந்து உணவு பெறுகிறாள் . மார்த்தாளின் உயிர் உலகின் உயிர் . மரியாளது உயிர் மோட்சத்திற்கு உரியது

இந்நற்செய்தி கன்னித் தாய்க்கும் பொருந்தும் . அவர் மார்த்தாளும் மரியாளும் சேர்ந்தவர் . நாசரேத்தூர் வாழ்நாள் முழுவதும் நம் ஆண்டவருக்கு உணவு ஊட்டினார் . நம் ஆண்டவரால் உணவு ஊட்டப்பட்டார். அவர் உழைத்தார் , இளைப்பாற்றினார் .மோட்ச வாழ்க்கையைப் பூமியில் நடத்தினார். இயேசுவின் மறைந்த மகிமையை இயேசு மறுரூபமானபோது அப்போஸ்தலர் கண்டனர் . தாயின் மறைந்த மகிமையை பரலோக ஆரோபணத்தில் கண்டனர் . பூலோக வாழ்வில் தாயின் மகிமை திரையிடப்பட்டு இருந்தது.

இயேசுவின் ஆரோகணத்துக்குப் பின்னும் மார்த்தாளின் அலுவலை அன்னை விட்டுவிடவில்லை. அருளப்பரைப் போஷித்தார் . அவர் எப்போதும் தியானத்தில் புதைந்தவர். இரு சகோதரிகளும் வசித்த இல்லம் எது ? ஆண்டவரின் தாயாருடைய கன்னி உதரமாம். அங்கு அவர் தன் குழந்தையைப் போஷித்தார் . தன் குழந்தையிடம் உணவைப் பெற்றார். என்ன உணவை ? வார்த்தையையும் ஆண்டவரின் ஞானத்தையும்!