கர்த்தர் கற்பித்த ஜெபம்.

நமதாண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம் எவ்வளவு மேலானது! அதை ஆக்கியவர் மனிதரல்லர்; சம்மனசுமல்லர்; மனிதர்களுக்கும் சம்மனசுக்களுக்கும் அரசர், நமதாண்டவராகிய இயேசுநாதர்! அச்செபத்தின் அமைப்பில் உள்ள ஒழுங்கு முறையும் , உருக்கமான வன்மையும் , தெளிவும் நம் தேவ ஆசிரியரின் ஞானத்தை விளக்குகிறது . சிறு செபமானாலும் அநேக காரியங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது . படிக்காத பாமரருக்கும் அது விளங்கும் . கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களும் விசுவாச இரகசியங்களில் புதுப்புது எண்ணங்களை அறிய வருவார்கள்

இம்மந்திரத்தில் இறைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய எல்லாக் கடமைகளும் , எல்லா புண்ணியங்களும் நமது எல்லா ஆத்தும சரீர தேவைகளுக்கு மன்றாட்டும் பொதிந்து கிடக்கின்றன . இச்செபம் புதிய ஏற்பாட்டின் சுருக்கம் என்றார் தெர்த்துல்லியன். எல்லாப் புனிதர்களுடைய சகல ஆசைகளுக்கும் மேற்பட்டது இம்மந்திரத்தின் வேண்டுகோள் என்று ' கிறிஸ்து நாதர் அனுசார'த்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார் . சங்கீதங்களிலும் உன்னத கானத்திலும் உள்ள இரசமானவைகளின் சுருக்கம் என்பதும் அதில் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து கேட்கிறோம் என்பதும் , அதில் மேலான விதமாய்க் கடவுளைப் புகழுகிறோம் என்பதும் , நமது உள்ளத்தை எழுப்பி இறைவனோடு ஒன்றிக்கிறோம் என்பதும் அவரது கருத்து

தமது மகனிடமிருந்து கற்றுக்கொண்ட செபத்தை நாம் சொல்லும்போது பிதாவானவர் அதை எவ்வளவு கவனமுடன் கேட்பார் ; கேட்பதைக் கொடுப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம் . கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லும்போதெல்லாம்  நம் அற்ப பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன என்பது அர்ச் அகுஸ்தீனாரின் அபிப்பிராயம் . நம் பலவீனத்தையும் எளிமைத்தனத்தையும் நன்குணர்ந்த நாதர் நாம் எத்தனைச் சங்கடங்களுக்கு ஆளாகிறோம் என்று உணர்ந்து அந்த செபத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லி வைத்திருக்கிறார்

பெரிய கலைஞர்களே ! அருமையான செப புஸ்தகங்களில் அணி அலங்காரத்தோடு எழுதிய நீங்க ஜெபங்கள் தாம் நல்லது என்று சொல்லாதீர்கள் . எவ்வளவு ஞானமுள்ள சாஸ்திரி ஆனாலும் மனிதன் ஆக்கிய செபத்தை விட , ஆண்டவர் அமைத்த ஜெபம் எவ்வளவு மேலானதாயிருக்க  வேண்டும் . தெளிவான நீரூற்றை விட்டு விட்டு கலங்கலான நீர் ஓடைக்குச் செல்லாதீர்கள் . சுத்த ஜலத்தை விட்டு விட்டு சேறு கலந்த நீரைப் பருகுவது மேல் என எண்ணாதீர்கள் . இந்த செபமாகிய ஊற்றிலிருந்து புறப்படும் சிற்றோடைகள் அன்றோ மற்ற ஜெபங்கள் ?

இச்செபத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்துப் பார்த்து யோசித்துக் கவனத்தோடு இச்செபத்தைச் சொல்லுகிறவர்கள் மகா பாக்கியவான்கள் .ஏனெனில் அவர்கள் ஆசிப்பது எல்லாவற்றையும் , அவர்களுக்குத் தேவையான யாவற்றையும் இதில் கண்டடைவார்கள்

இந்த அதிசய ஜெபத்தை உச்சரிக்கத் தொடங்கும்போதே கடவுளைப் பிதாவே என்றழைத்து , அவரது மனத்தை இளக்கி நம் பக்கம் சாயச் செய்கிறோம் . தந்தையர் யாவரிலும் அவர் மகா அன்புள்ளவர் . அவர் படைத்தவைகளில் யாவற்றிலும் சகல வல்லமையுள்ளவர் . அவைகளின் பராமரிப்பில் நேசத்துக்குரியவர் . விசேஷமாய் இரட்சணிய அலுவலில் மகா அன்புக்குரிய நேசத்தந்தை . நம் தந்தை கடவுளா? அப்படியாகில் நாம் யாவரும் சகோதரர்கள் , சகோதரிகள் . மோட்சம் நமது சொந்த வீடு . இந்த ஊர் எண்ணமே இவ்வுலகப் பொருட்களிலிருந்து நம்மைப் பிரித்து இறைவனையும் அயலாரையும் நேசிக்கத்தூண்ட வேண்டும்.