தகுந்த ஆராதனையோடு திவ்விய நற்கருணை உட்கொள்வது!

தகுந்த ஆராதனையோடு திவ்விய நற்கருணை உட்கொள்வது, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களும், கிடைக்கும் நற்பலன்கள்.

ஆஸ்திரியா நாட்டில் புண்ணியவான் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்ம ஒன்று அவனிடம் தோன்றி தான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவிக்கும் மிகுந்த வேதனை பற்றி விவரித்தது. தன் சுற்றிக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அம்மனிதனுக்கு காட்டி திவ்விய நற்கருணை உட்கொள்கிறபோது சிலமுறை பக்தியில்லாமல், அசட்டைத் தனத்தோடும், பராக்கோடும் அதைப் பெற்றுக் கொண்ட பாவத்திற்கு தண்டனையாய் தான் இப்போது இப்படி கடுமையான நெருப்பில் வெந்து கொண்டிருப்பதாகவும், அந்தப் புண்ணியவான் அவன்மீது இரக்கப்பட்டு மிகுந்த பக்தியோடும், ஆராதனையோடும், பரிசுத்தத்தனத்தோடும் திவ்விய நற்கருணை வாங்கி அப்புண்ணியத்தை தன்னுடைய ஆத்துமத்துக்காக ஒப்புக்கொடுத்தால் அவனுடைய குற்றம் முழுவதும் தீர்ந்து போகும் என்றும் வேண்டிக் கேட்டு மறைந்து போனது.

அந்த ஆன்மாவுக்கு உடனே உதவி செய்யத் தீர்மானித்த புண்ணியவான் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை பெற்றுக் கொண்டான். அதன்பின் அப்புண்ணியவான் தியானத்தில் இருக்கையில் அவனால் பலன் பெற்ற உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா மறுபடியும் அவனுக்கு மகிழ்ச்சியோடும், நன்றியுடனும் அவனிடம் பேசியது. புண்ணியவான் செய்த நற்காரியத்தால் தன்னுடைய பாவம் தீர்த்து தான் மோட்சத்துக்குப் போவதாக அந்த ஆன்மா தெரிவித்ததுமல்லாமல், அவன் கண்ணெதிரிலேயே மோட்சத்திற்கு சென்ற சாட்சியையும் வெளிப்படுத்தியது.

நடந்த இந்நிகழ்ச்சியை ஞானியான லூதோவி என்பவருக்கு தெரிவிக்க, அவரும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆண்மாக்கள் பேரில் இரக்கமும் பக்தியும் மற்ற மக்களுக்கு ஏற்படும்படி தமது நூலில் இப்புதுமையை எழுதி வைத்தார். கிறிஸ்தவர்களே! பக்தியில்லாமல், பராக்கும், அசட்டைத்தனமும்  கொண்டு, திருப்பலியில் திவ்விய நற்கருணை வாங்குபவர்கள் தங்கள் குற்றத்துக்கு தண்டனையை உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் கட்டாயம் அனுபவித்தாக வேண்டும். உன் இல்லத்துக்கு உயர்நிலையில் இருக்கும் ஒரு மனிதர் வருகை தருவதாக இருந்தால் நீ எப்படியெல்லாம் தயாராக இருப்பாய்? ஆனால், உன் ஆத்துமமாகிய வீட்டினுள் ஆண்டவர் இயேசுவை, அரசர்க்கெல்லாம் அரசரை வரவேற்க நீ பக்தியில்லாமல் போனால் அப்பாவத்துக்கு கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டியது நியாயம்தானே?

சிலர் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தாலும், நற்கருணை வாங்கும்போது, பக்தியில்லாமல் சாதாரண பண்டத்தைப் பெற்றுக் கொள்வதைப்போல் நற்கருணை வாங்குவார்கள். இப்படி நடப்பவர்களுக்கு நிச்சயம் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் துன்ப "பட வேண்டிய தண்டனையுண்டு. பல ஆத்துமங்கள் தாங்கள் செய்த அற்பப் பாவத்துக்காக முதலாய் வெகுகாலம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அவதிப்பட்டதை அறிந்தீர்கள். நம் பெற்றோர், உறவினர்கள் இறந்து பல ஆண்டுகளானாலும் அவர்கள் நல்ல கிறிஸ்தவர்களாயிருந்தாலும் அவர்கள் தாங்கள் செய்து அற்பப் பாவங்களைத் தீர்க்க நீண்ட நாள் உத்தரிக்கிற ஸ்தல  நெருப்பிலே இருக்க வேண்டியதிருக்கும்.

- உத்தரிக்கிற ஸ்தல ஆண்மாக்களின் புதுமைகள்-52 புத்தகம்