அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 21

அர்ச்.சூசையப்பர் கிறிஸ்தவர்களுடைய குடும்பங்களுக்கு பாதுகாவலாய் இருக்கிறார் என்பதை தியானிப்போம் 

தியானம் 

அர்ச்.ஜெர்சோனியூஸ் என்பவர் பிதா சுதன் பரிசுத்த ஆவியைப் போல் பரிசுத்த திருக் குடும்பம் விளங்கினார்கள். என குறிப்பிட்டுள்ளார் நாமும் திருக்குடும்பத்தை உற்றுப்பார்த்து அவர்களுடைய ஒழுக்கத்தை நம் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். திருக்குடும்பத்திற்கு தலைவராகவும், மோட்சவீட்டில் அனைத்து அர்ச்சியஷ்டவர்களைவிடவும் மேலானவராகவும் இருந்தார். நாசரேத்திலிருந்து எகிப்துக்கும் எகிப்திலிருந்து நாசரேத்திற்கும் காடு வழியே செல்ல வானதூதர்  அர்ச்.சூசையப்பருக்கு மட்டுமே கனவில் முன்னறிவித்தார் 

திருக்குடும்பத்தின் மீது அவருக்கு அதிகாரம் இருந்தாலும் அவர் அச்சத்துடனே வாழ்ந்து திருக்குடும்பத்தை வழி நடத்தினார் பரலோக அரசியான மாமரியன்னையை மிகவும் நேசித்து அவருக்கு எல்லாவகையிலும் வணக்கமான மரியாதை செலுத்தி வந்தார் மாமரியன்னையோ பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் அரசியாக இருந்தபோதும்  அர்ச்.சூசையப்பருக்கு மேற்படாதவராகவும் வாழ்ந்து வந்தார் 

சேசுவோ தனக்கு அர்ச்.சூசையப்பர் வளர்ப்பு தந்தையாக இருப்பதை நினைத்தும் தனது பரிசுத்த தாயாரான மாமரி அன்னை இருவருக்கும், கீழ்ப்படிந்து அவர்களை மிஞ்சிவிடாமல் வாழ்ந்து வந்தார். திருக்குடும்பத்திலே ஒரேமனம், ஒரே சித்தம், ஒரே புத்தி ஒரே நட்பு, ஒரே அன்பு இருந்ததால் திருக்குடும்பம் என பெயர் பெற்றது 

கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு நன்மாதிரிகையான திருக்குடும்பத்தைக் கொண்டு நம் குடும்பங்களை திருக்குடும்பத்திற்கு காணிக்கையாக்குவோம். நம் குடும்பங்களிலே நாம் சிங்கத்தைப்போல் இல்லாமல், மனைவியை அன்பு செய்து வாழவேண்டும். மாமரியன்னையும்

அவ்வாறே கணவன் தனக்கு மேற்பட்டவர் என்பதை உணர்ந்து

வாழ்ந்து வந்தார்கள் 

நாம் வீட்டிலிருக்கிறவர்களை சரியாக கவனிக்காமல், அன்பு செய்யாமல் வெளியில் தர்மம் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லை. எந்தச் செயலை செய்யவும் பயம் இருக்க வேண்டும் நாம் செய்யும் செயல் வீட்டிலுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணமும் பயமும் இருந்தால் நம் குடும்பங்களும் திருக்குடும்பம் ஆகும் 

மனைவியானவள் மாமரியன்னை தன் கணவரிடத்தில் பக்தியாய் இருந்ததுபோல் இருக்க வேண்டும். கணவனுக்கு பணிவாக பயன்பட வேண்டும். மாமரியன்னையின்பால் அதிக பக்திகொள்ள வேண்டும் அன்புள்ள பயம் இல்லாவிட்டால் கீழ்படிய மாட்டார்கள். பயம், மதிப்பு பாசம் மூன்றும் இருந்தால்தான் கணவன் மனைவி இருவரும் அன்புடன் பழகுவர் 

சேசு எப்போதும் தனது தந்தையையும், தாயையும் மதித்து

கீழ்ப்படிந்து பாசத்துடன் நடந்து கொண்டதுபோல் பிள்ளைகளும் பாசத்துடன் பழகி வாழ வேண்டும். திருச்சபையானது  அர்ச்.சூசையப்பரை நமது குடும்பங்களுக்கு பாதுகாவலராக வைத்திருப்பதால் அவரை நமது குடும்பங்களுக்கு அடைக்கலம் அளிக்கும்படி பாதுகாவலராக நாம் கொள்ள வேண்டும். 

புதுமை 

பிரான்ஸ் நாட்டில் 'கிறிஸ்தவ குடும்பங்களின் சபை' என்னும் ஒருசபை தோற்றுவிக்கப்பட்டது. அச்சபையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சேர்ந்து திருக்குடும்பத்தைப் பின்பற்றி பக்தியோடு வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அர்ச்.சூசையப்பரை குடும்பத் தலைவராக கொண்டு திருக்குடும்பத்துக்கு ஏற்புடைய குடும்பமாக திகழ விரும்பினர். கிறிஸ்தவ குடும்பங்கள் திருக்குடும்பத்தின் சாயலாக இருக்க வேண்டும் என்பதே இச்சபையின் நோக்கம். அதனால் சர்வேசுரனின் கட்டளைகளையும் திருச்சபை கட்டளைகளையும் சரிவர கடைப்பிடித்து தங்கள் பிள்ளைகளை சர்வேசுரனின் விருப்பத்திற்கிணங்க வளர்த்து, காலை மாலை செபங்களை குடும்பத்துடன் செய்து, தங்களுடைய கடமைகளை சரிவர செய்து வருவோம் என உறுதி அளிப்பார்கள் 

மாதந்தோறும் இச்சபையில் உள்ள குடும்பங்கள் நல்லமுறையில் செயல்பட அனைவரும் கூடி செபிப்பார்கள். ஏழைகளுக்கு தேவையான தான தர்மங்கள் செய்து, நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்கி மரண தருவாயில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து,

இறந்த சபை உறுப்பினர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்து வந்தனர். 

பிற குடும்பங்களையும் சீர்பெற செய்ய முயற்சிப்பர். இந்த சபையின் மூலமாக எவ்வளவு ஞான நன்மைகள் வருகிறதென்று சொல்லமுடியாத அளவு இருந்தது. கணக்கிலடங்காத குடும்பங்கள் இந்த சபையில் சேர்ந்த பிறகு, திருக்குடும்பத்தை பின்பற்ற அன்பிலும், அமைதியிலும், பண்பிலும் தங்கள் கடமைகளை சரிவர செய்தும் வந்தனர். பாப்பரசர் இச்சபையை அங்கீகரித்து ஆசீர்வதித்து பல உதவிகள் செய்ய முன்வந்தார் 

கிறிஸ்தவர்களாகிய நாம் நம் குடும்பங்களிலே இறையாசீர் நிரம்பி இருக்க நம் குடும்பங்களை  அர்ச்.சூசையப்பருக்கு காணிக்கையாக்கி திருக்குடும்பமாக வாழ முயற்சிப்போம் 

(1பர, 3அரு, பிதா) 

செபம் 

திருக்குடும்பத்திற்கு தலைவரான பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே உம்மைப் போற்றிப் புகழுகிறோம். உமது குடும்பம் பிதா சுதன்  பரிசுத்த ஆவியாய் இருந்தது போல் எங்கள் குடும்பங்களையும் மாற்றியருளும். கணவன்கள் உம்மையும், மனைவிகள் மாமரியன்னையையும், பிள்ளைகள் சேசுவையும் போல் இருக்கச் செய்தருளும், எங்கள் குடும்பங்களிலே அமைதி அன்பும் ஒருவரை ஒருவர் மதித்தும் பாசத்துடனும் வாழச் செய்தருளும். நாங்கள் திருக்குடும்பத்தின்பால் பக்தி உள்ளவர்களாக வாழ உதவி செய்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென் 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

திருக்குடும்பத்துக்கு பாதுகாவலான அர்ச். சூசையப்பரே உமக்கு புகழ் 

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு பாதுகாவலான அர்ச்.சூசையப்பரே உமக்கு புகழ் 

எங்களுக்கு பாதுகாவலரான  அர்ச்.சூசையப்பரே எங்களை பாதுகாத்தருளும் 

செய்ய வேண்டிய நற்செயல் ஓர் ஏழை குடும்பத்திற்கு உதவுதல்