மே 06

அர்ச். அருளப்பர். அப்போஸ்தலர் (கி.பி. 100) 


இவர் நமதாண்டவருடைய 12 அப்போஸ்தலர்களில் ஒருவரும் வயதில் குறைந்தவருமாவார்.

அப்போஸ்தலர்கள் வேதசாட்சிகளாய் மரித்தபின், 95 வருஷத்தில் இவர் மாத்திரம் ஆசியா தேசத்திலுள்ள கிறிஸ்தவர்களைக் கவனித்துவந்தார்.

அக்காலத்தில் இவர் எபேஸ் பட்டணத்தில் வேதத்திற்காகப் பிடிபட்டு உரோமைக்கு அனுப்பப்பட்டார்.

வயோதிகரான இவரைத் தொமிசியான் இராயன் பார்த்தபோது சற்றும் மனமிரங்காமல் வேதத்திற்காக அவரைக் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு சாகடிக்கும்படிக் கட்டளை யிட்டான்.

அருளப்பர் இக்கொடிய தீர்ப்பைக் கேட்டு சற்றும் அஞ்சாமல், தான் சிறுவயதிலிருந்து அன்புடன் நேசித்து வந்த தன் தேவ குருவைப் பார்க்கப் போவதால் சந்தோஷமாய் கொலைக் களத்திற்குச் சென்றார்.

கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் அவர் போடப்பட்டபோது, அற்ப சேதமும் வேதனை யுமின்றி குளிர்ந்த ஜலத்தில் இருப்பதுபோல் காணப்பட்டதைப் பார்த்த இராயன் அதிசயித்தானே தவிர, அவனுடைய கல்நெஞ்சம் இளகவில்லை .

ஆயினும் அவன் வேதசாட்சியைக் கொல்லாமல் பாத்மாஸ் என்னும் தீவுக்கு அனுப்பி வைத்தான்.

அவர் அந்தப் பரதேசத்தில் பல துன்பங்களை அனுபவித்து, காட்சி யாகமம் என்னும் புத்தகத்தை எழுதினார்.

கொடுங்கோலன் மாண்டபின் அருளப்பர் எபேஸ் பட்டணத்திற்கு திரும்பிப் போய் அவ்விடத்தில் தமது ஞான வேலையைத் தொடர்ந்து நடத்தினார்.

யோசனை

நாமும் அர்ச். அருளப்பரைப் பின்பற்றி நமக்குண்டாகும் துன்ப துயரங்கள், வியாதி, தரித்திரம், இக்கட்டு, இடையூறு முதலியவைகள் ஒரு நாள் முடிந்து, பரலோக இராச்சியம் போய்ச் சேருவோமென்று நிச்சயித்து, அவை களைப் பொறுமையுடன் சகித்து வருவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எயாட்பெர்ட், மே.